வியாழன், 11 மே, 2017

நந்தா என் தம்பி



அவ்வளவாக சிரிக்காத அப்பா காரோட்டிக் கொண்டிருந்தார்.  எப்போதும் சிரிக்கும் அம்மா வீட்டில் இருந்தாள்.   

ரொம்ப நீட்டி முழக்கப் போவதில்லை நான்.  என் வாழ்வின் சில நாட்கள் பற்றி உங்களுடன் கதைக்கப் போகிறேன்.  அவ்வளவுதான்.  ஏனென்றால் இதெல்லாம் எனக்குப் பழக்கமில்லை.  

அப்பாவும் அம்மாவும் லவ் பண்ணிக்க கல்யாணம் செய்து கொண்டார்களாம்.  அம்மாதான் சொல்லியிருக்கிறாள்.  அதிகம் பேசாத அப்பா எப்படி அந்தக் காலத்தில் லவ் பண்ணியிருப்பார் என்று ஆச்சர்யம்.  ஆனால் அப்பா அந்தக் காலத்தில் பல பெண்களுக்கு ஹீரோவாம்.  அம்மா சொல்லியிருக்கிறாள்.  அப்படிப் பேசுவாராம்.

இப்போது அதிகம் பேசுவதில்லை.  "உங்கள் பெயர் ராஜுதானே?" என்று கேட்டால் "ஆமாம்" என்று தலையாட்டுவார்.  அவர் பெயர் அது இல்லை.  கோபால்.  கவனம் இங்கில்லாவிட்டாலும் உங்களை, உங்கள் கேள்வியை  அவர் மதிக்கிறாராம்.  கேட்டால் நீளமாக விளக்கம் கொடுத்து அப்படித்தான் சொல்வார்.  நாங்கள் கேட்க மாட்டோம்.

எங்களுக்கும் பொறுமை இல்லை.

அம்மா நேர் எதிர்.  பேசிக்கொண்டே இருப்பாள்.  இப்போது அந்த அம்மா இயல்பிழந்துதான் இருக்கிறாள்.

நான் ரொம்ப பாவம்.  ஏன் என்று அப்புறம் சொல்கிறேன்.

எனக்கு நந்தா என் நிலா பாடல் ரொம்பப் பிடிக்கும்.  அப்பாவுக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும் என்பதால் இருக்கலாம்.  அல்லது என் தம்பி பெயர் நந்தா என்பதாலும் இருக்கலாம்.  தம்பிக்கு நந்தா என்று அப்பா பெயர் வைத்ததே அதனால்தான்.  அவருக்கு எஸ் பி பி பிடிக்கும்.  எஸ் பி பி பாடல்களில் இது பெஸ்ட் என்பார்.  அந்தப் பாடல் மதுவந்தி ராகம் என்பார்.




ஆனால் இதெல்லாம் நான் சொல்லப்போகும் கதைக்குத் தேவையா இல்லையா என்று தெரியவில்லை.  நான் கொஞ்சம் அம்மா மாதிரி.   சட்சட்டென சப்ஜெக்ட் மாறிக்கொண்டே இருப்பேன்.  நடப்புக்கு வருகிறேன்.

பின் சீட்டில் நானும் என் தம்பியும்.  நான் யார் என்று  சொல்லவேண்டும் இல்லையா?  நான் பதினோராம் வகுப்புப் படிக்கும் கிஷோர்.  அப்பாவுக்கு ஹிந்திப் பாடகர் கிஷோரும் பிடிக்கும் என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கும்.  நல்லவேளை அப்பாவுக்கு பி யு சின்னப்பா பிடிக்கவில்லை.  ஏன் என்றால் சின்னப்பா என்ற பெயரை எனக்குப் பிடிக்காது.  என் நண்பனின் அண்ணன் பெயர் அதுதான்.  என்னை அடித்துக் கொண்டே இருப்பான்.  வெறுப்பேற்றிக் கொண்டே இருப்பான்.  

தம்பி நந்தா ஆறாம் வகுப்பு படிக்கிறான்.  போதிய இடைவெளி!

நந்தா உர்ரென்றிருந்தான்.  வீட்டில் ரகளை செய்து கொண்டிருந்த அவனுக்கு ஒரு மாறுதலுக்காகத்தான் இந்த கார்ப் பயணம்.  அம்மாவின் யோசனை.  நான் வேறு வழியில்லாமல் அம்மா சொன்னாள் என்பதற்காக காரில் ஏறிக்கொண்டேன்.  ஏற்றப்பட்டேன் என்பது சரி.  கையில் நாளை பரீட்சைக்கான புத்தகம்.


திடீரென என் புத்தகம் பிடுங்கப்பட்டது.  நிமிர்ந்து பார்ப்பதற்குள் வெளியே எறியப்பட்டது.  புத்தகத்தை பிடுங்கி வெளியே எறிந்த நந்தா என்னை முறைத்தான்.  சண்டைக்குத் தயாராயிருந்தான்.  என் கோபம் எழுந்த வேகத்தில் அடங்கியது.  அப்பா வண்டியை  ஓரமாக நிறுத்தினார்.  நான் சென்று புத்தகத்தை எடுத்துக் கொண்டு  - பொறுக்கிக் கொண்டு  - வந்தேன். 

கார் மறுபடியும் கிளம்பியது.  அப்பா நந்தாவைப் பார்த்துப் புன்னகைத்தார்.   நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மீண்டும் படிப்பைத் தொடர்ந்தேன் - புத்தகத்தை இறுகப் பற்றியபடி!  நந்தா விரோதமாக எதிர்ப்புறம் திரும்பி உட்கார்ந்து கொண்டான்.  இது இப்போதெல்லாம் அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வு.

அடுத்தடுத்த நாட்களிலும்  நந்தாவின் தொல்லைகள் எல்லை மீறிக்கொண்டிருந்தன.   அம்மாவோ அப்பாவோ ஒன்றும் சொல்வதில்லை.  நானும்.

திடீரென பூந்தொட்டியை உடைத்தான்.  மீன் தொட்டியிலிருந்து மீன்களை எடுத்து வெளியில் விட்டெறிந்தான்.  சோபாவில் கத்தியால் கிழித்தான்.  சாப்பிட அடம் பிடித்தான்.  என்னிடம் அடிக்கடி மோதினான்.  ஏன் இப்படி மாறினான் என்று யோசிக்க வைத்தான்.

அவன் செய்யும் செயலை எல்லாம் பொறுத்துக் கொண்டு சரி செய்து கொண்டோம். 

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் சாப்பிட்டு விட்டு அப்பாவும் அம்மாவும் படுக்கச் சென்றபின் நந்தா தூங்கச் செல்லாமல் என் அருகிலேயே இருந்தான்.  அடுத்து என்ன செய்வானோ என்று சற்று ஜாக்கிரதையாகவே இருந்தேன்.  மெல்ல என் கைகளைப் பிடித்தான்.

"கிஷோர்..."

"சொல்லு நந்தா.."  அவன் தலையைக் கலைத்தேன்.  தட்டி விட்டான்.

"என்னை ஏன் யாருமே கோச்சுக்கவே மாட்டேங்கறீங்க?  முன்னாடி எல்லாம் நான் உன்னைத் திட்டினாலே தலையில் குட்டுவே.."

"அது ஒண்ணுமில்லைடா..  பழகிடுச்சு... அதான்!"

"கோவம் வருது எனக்கு... சொல்லு.."

"நீ சின்னப்ப பையன்..  நான் பெரியவன் இல்லையா?  அதான் அம்மா அவனை ஒன்றும் சொல்லாதே என்று சொன்னாள்..."

மௌனமாக இருந்த  நந்தா "பொய் சொல்லாதே..  நீங்கள்லாம் இருப்பீங்க..  நான் இருக்க மாட்டேன்.  அதானே..." என்றான் எங்கோ பார்த்துக்கொண்டு.

எதிர்பாராத ஒரு அதிர்ச்சியை நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?  அன்று நான் சந்தித்தேன்.   அதனால் எப்படி ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் "ஏய்... "  என்று தடுமாறியவன், சற்று இடைவெளி விட்டு  "என்ன உளறல்..." என்றேன்.

திரும்பியவன் கண்கள் கலங்கியிருந்தன.  

 அந்த சண்டே அப்பா கிட்ட டாக்டர் பேசிக்கிட்டிருந்ததை நான் கேட்டுட்டேன் அண்ணா..." என்றான்.

ஒன்றும் பேசாமல், பேச முடியாமல், அதே சமயம்  அவனைப் பார்ப்பதைத்  தவிர்க்க அவனை இழுத்து அணைத்துக் கொண்டேன்.  என் கண்களும் கலங்கியிருந்தன.

ஆம், ஆனால் இவன் எப்படிக் கேட்டான்?  எப்படி வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கிறான்?  ஆறாம் வகுப்புப் படிக்கும் பையன் இதை எப்படித் தாங்கி கொண்டான்?  நாங்கள் அவனுக்குத் தெரியாமல் அழுது கொண்டிருந்தோம்.  இவன் அறிந்து வைத்திருக்கிறான்.  தனக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்திருக்கிறான்.  அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எப்படி இதை அறியச் செய்வது?

"எனக்குத் தெரியும்னு என் மேல சத்தியமா,  உன் படிப்பு மேல சத்தியமா, நம்ம அம்மாப்பா மேல சத்தியமா அவங்க கிட்ட நீ சொல்லக் கூடாது"   என் மனதை படித்தவன் போலப் பேசினான் அந்தப் பெரிய மனிதன்.

சத்தியத்தை நம்பும் இளவயது.  அவனைக் கட்டிக்கொண்டு விம்மினேன்.  

"சத்தியம் செய்"  

"சரிடா"  அழுதேன்.

"நீங்கள்லாம் என்மேல கோச்சுக்காம பாவமாய் பார்க்கறதுதான் எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.  நானும் என்னென்னவோ செஞ்சு பார்த்தேன்.  நீங்கள்லாம்  கோச்சுக்கவே இல்லை....  பாவமாப் பார்க்காத என்னை"

அவனும் திரும்பிக் கொண்டு கொஞ்ச நேரம் அழுதவன்.  சட்டென எழுந்து   திரும்பிப் பார்க்காமல்எழுந்து  படுத்துக்க கொள்ள எங்கள் அறைக்குச் சென்றான்.



அன்றிலிருந்து மூன்றாவது நாள் நந்தா செத்துப் போனான். 

48 கருத்துகள்:

  1. இதென்னது இது திடீர்க் கதை. நந்தா அணையாவிளக்கு என்று நினைக்கும் போதே அணைந்துவிட்டானே.

    மனம் என்னவோ செய்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நந்தா என் நிலா விஜயகுமார்! அணையாவிளக்கு மு க முத்து!

    பதிலளிநீக்கு
  3. சட்டென மனம் கனத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  4. அப்பா பெயர் வைத்த அழகு சுவாரஸ்யம். இது நிஜக் கதையாக இல்லாமல் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. கதை படித்தவுடன் மனம் கனத்து போனது.
    தன் இறந்து போவோம் என்று தெரிந்து கொள்வது கொடுமை.

    பதிலளிநீக்கு
  6. இனம் புரியாத சோகம் நெருடுகின்றது..

    பதிலளிநீக்கு
  7. ரொம்ப நல்ல கதை. எழுதப்பட்ட விதம் ரொம்ப சிறப்பா இருந்தது. முடிவு சட்டென்று மனதில் தைக்கும்படியாக இருக்கிறது. Well Done

    பதிலளிநீக்கு
  8. நெகிழ்வு. உலுக்கி விட்டது முடிவு.

    பதிலளிநீக்கு
  9. மனதைத் தொட்ட கதை. டக்கென்று முடிவைச் சொல்லிய விதம் அருமை. எழுதிய விதமும் ரொம்ப நன்றாக இருக்கிறது.

    கீதா: மனதை உலுக்கிவிட்டது! காரணம் அதை எழுதிய விதம் என்று சொன்னால் மிகையல்ல.கதையோடு ஒன்றி வாசிக்கவைக்கும் நடை. செமை!!!! பாராட்டுகள்! ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  10. ஆண்டவா என்னால சத்தியமா முடியவே இல்லை, நெஞ்செல்லாம் என்னமோ செய்கிறது:(.
    இது எங்கோ யாருக்கோ நடந்த உண்மைச் சம்பவமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. அவன் போய்விடுவான் என்று தெரிந்துக் கொள்ளுமளவிற்கு என்ன உடம்பு? எனக்குதான் புரிந்து கொள்ளத் தெரியவில்லையா? இவ்வளவு சீக்கிரமா? நந்தா,தனக்குத்தெரியும் என்று அப்பா அம்மாவிடம் சொல்லக்கூடாது என ஸத்தியம் வாங்குவது மனதைப் பிழிகிறது. என்ன உடம்பாயிருக்கும்? ஐயோபாவம். அன்புடன்







    '

    பதிலளிநீக்கு
  12. மனதை என்னமோ செய்கிரது :( உண்மைக்கதையாக இருக்க கூடாது என்பதே எனது பிரார்த்தனை ..
    நானும் காருக்குள் அமர்ந்து பயணிப்பதுபோல உணர்ந்தேன் அருமையான நடை

    பதிலளிநீக்கு
  13. நெகிழ்ச்சியான பதிவு

    பதிலளிநீக்கு
  14. இதை எழுதியது யார் என்று சொல்லியிருக்கவேண்டும். நந்தாவுக்கு என்ன உடம்பு என்று சொல்லியிருக்கவேண்டும். இந்த இரண்டையும் உடனே திருத்தலாமே! அழகான எழுத்து. மிகச் சிறப்பான அளிப்பு (presentation.) பாவம் நந்தா.

    பதிலளிநீக்கு
  15. # கதைக்கப் போகிறேன்#என்று வருவதால்,கதை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்தவராய் இருக்கணும் ,நந்தாவின் பேச்சில் நானும் நொந்துபோனேன் :)

    பதிலளிநீக்கு
  16. படித்ததும் நானும் கண் கலங்கினேன்!

    பதிலளிநீக்கு
  17. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  18. மீள் வருகைக்கு நன்றி வல்லிம்மா. இது கற்பனைதான்!

    பதிலளிநீக்கு
  19. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

    பதிலளிநீக்கு
  20. நன்றி துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  21. நன்றி ராமலக்ஷ்மி. நான் கதை எழுதி நீண்ட நாட்களாகி விட்டது என்று அன்று நீங்கள் சொன்னதும் ஒரு ட்ரிக்கர்!

    பதிலளிநீக்கு
  22. நன்றி துளஸிஜி.

    நன்றி கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  23. நன்றி அதிரா. கலப்படமில்லாத கற்பனை. ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். தம்பி சின்ன வயதிலேயே செத்துப் போனான் என்று ஒரு வரி இருந்தது. அந்த வரியிலிருந்து டெவெலப் செய்தது!!!

    பதிலளிநீக்கு
  24. வாங்க காமாட்சி அம்மா. அவனுக்கு என்ன உடம்பு என்பது அவசியமில்லை. ப்ரெயின் டியூமராக இருக்கலாம். ஏதோ ஒன்று. விஷயம் அவன் வாழ்வு கொஞ்ச நாள்தான் என்பதுதான்!

    பதிலளிநீக்கு
  25. நன்றி சென்னை பித்தன் ஸார்.

    பதிலளிநீக்கு
  26. நன்றி ஏஞ்சலின். இது உண்மைக்கதை இல்லை, இல்லை, இல்லை! கற்பனை!

    பதிலளிநீக்கு
  27. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க செல்லப்பா ஸார். இது கேட்டு வாங்கிப்போடும் கதை அல்ல! அது செவ்வாய்க்கிழமைதான் வரும். இந்தக் கதை நான் - ஸ்ரீராம் ஆகிய நான் - எழுதியது!!! வேறு யாராவது எழுதியிருந்தால் பெயர் போடலாம். பதிவிட்டவர் பெயர் கீழே வரும், எனவே அது நான் எழுதியது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இரண்டு காமாட்சி அம்மாவுக்கு சொல்லியிருக்கிறேன் பாருங்கள்... நோய் முக்கியமல்ல. சில விஷயங்களை விளக்கமாகச் சொல்லவேண்டும் என்று அவசியமில்லை என்பது தாழ்மையான கருத்து.

    பதிலளிநீக்கு
  29. நன்றி பகவான்ஜி. இது தஞ்சை, மதுரை, சென்னைக்காரனாகிய நான் எழுதியதுதான்!!!!

    பதிலளிநீக்கு
  30. சராசரிக் கதை மாதிரித் தெரியலையே, இது யாருடைய எழுத்தோ என்று யோசித்தேன். விறுவிறு நடை. முடிவிலே dead end !

    பதிலளிநீக்கு
  31. அருமை! கொஞ்சூண்டு சுஜாதா சாயல் தெரிகிறது.(சுஜாதா ஒரு எழுத்துலக சிவாஜி அவர் சாயல் இல்லாமல் எழுதுவது கொஞ்சம் கஷ்டம்)

    பதிலளிநீக்கு
  32. "எதிர்பாராத ஒரு அதிர்ச்சியை
    நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா?" என
    முடிவில் உறுத்திவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  33. வாழ்வு கொஞ்சநாள் என்பதற்கு என்ன காரணம், வியாதியின் தன்மை ஏதாவது சூசகமாக டாக்டர் சொல்லியிருப்பார். அதைக்கேட்ட பிரகுதானே நந்தா இம்மாதிரி டென்ஷன் ஆகிறான். பிரெயின் டூமர் எல்லாம் மிகவும் ஆட்டிப் படைத்து விடும்.இவ்வளவு தெளிவு வராது. அதான் நான்தான் புரிந்து கொள்ளவில்லையா என்றும் எழுதியிருந்தேனே. ஏனோ என்ன உடம்பு என்று கதையானாலும் தெரிந்து கொள்ள ஆவலாக அந்நேரம் மன எழுச்சி இருந்திருக்கும். கதை நிஜம்போலத் தோற்றமளிக்கும்படி ஸ்ரீராம் எழுதியுள்ளார். இப்போது புரிகிறது. நன்றி ஸ்ரீராம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  34. மனம் கனக்க வைத்த கதை! கண்ணீர் வந்து விட்டது. முதலில் நந்தாவின் அடாவடித் தனத்தைப் பார்த்துவிட்டு மன நிலை பாதிக்கப்பட்டிருந்தானோ என்றே நினைத்தேன். ஆனால் அம்மா, அப்பா ஒன்றும் சொல்லவில்லை என்றதுமே கான்சர் என்று வரப் போகிறது என எதிர்பார்த்தேன். நந்தாவின் இறப்பு எதிர்பாராத முடிவு! :( அருமையாக எழுதி இருக்கிறீர்கள். சோகம் மனதைப் பிழிய வைக்கிறது. :(

    பதிலளிநீக்கு
  35. உண்மையில் இது கற்பனையில் உத்தித்த கதை எனில்.. ஸ்ரீராம் நீங்க எங்கயோ இருக்கவேண்டியவர். மிக அழகாக போறிங் இல்லாமல் நகர்த்தியது மட்டுமில்லை எல்லோர் கண்ணிலும் தண்ணி வர வச்சிட்டீங்க.. வாழ்த்துக்கள்.. இன்னும் எழுதுங்கோ இப்படி.

    ஆனா இதில் முடிவு வரியைக் கொஞ்சம் மாத்திப் போட்டிருக்கலாம், இது அப்படியே பச்சையாகப் போட்டு விட்டீங்க.. அதுதான் ஆகவும் தாக்கத்தைக் கொடுத்தது... நம்மை விட்டுப் பிரிந்திட்டான்.. மறைந்திட்டான் அப்படி போட்டிருந்தால், படிப்போருக்கு கொஞ்சம் தாங்கும் சக்தி இருந்திருக்குமோ என்னவோ.

    பொதுவான கதைகளை விட, எப்பவும் அதிக சோகக் கதைகளும், அதிக நகைச்சுவைக் கதைகளும் மனதில் ஆளமாகப் பதிந்து விடுகிறது.

    பதிலளிநீக்கு
  36. மனதைத் தொட்ட பகிர்வு. கற்பனைக் கதை என்றாலும் படிக்கும் ஒவ்வொருவர் மனதையும் தொட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  37. பத்திரிகையில் சேர்ந்த பிறகு, கதைகளைவிட எழுத்து நடையின் மேல் என் கவனம் அதிகம் சென்றுவிட்டதை உணர்கிறேன். அந்த வகையில் இந்த எழுத்து நடை 'ஜஸ்ட் ஆவ்சம்' சார். ஒரு எழுத்து, அதிகமாகவோ குறைவாகவோ இல்லை. 'நச்' எடிட்டிங்!
    .
    ஒகே, கதை சிறுகதை என்பதால் சிட்பீல்ட் இலக்கணத்தை பின்பற்றவில்லை என்று எண்ணுகிறேன். ஹஹஹா, ஜோக்ஸ் அபார்ட், அந்த திடீர் திருப்பம், சட்டுன்னு நந்தா தனக்கு விஷயம் தெரியும்னு சொன்னதும் ஜாலியா படிச்சுட்டு வந்த உணர்வு போயி மனசு கனத்து (ஏசி ரூம்ல கரண்டு போனவுடனே ஒரு புழுக்கம் தோணுமே) அது வந்து. அப்புறம் கதை என்ன ஆகப்போகுதோன்னு நெனைக்கிறப்போ அஞ்சே வார்த்தையில அசால்ட்டா கதைய அழகா முடிச்சுட்டீங்க. ஹேட்ஸ் ஆப் சார். (இந்தக் கதை படிச்ச பிறகுதான் எவ்வளவு விஷயங்கள் மிஸ் பண்ணியிருக்கேன்னு தெரியுது.)

    பதிலளிநீக்கு
  38. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா வாழ்த்துகள் ஸ்ரீ

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!