வெள்ளி, 30 செப்டம்பர், 2016

வியாழன், 29 செப்டம்பர், 2016

முன்னூறு வருடங்களுக்குப் பின் கண்திறந்து பார்த்த சிறுமியும், 96 ஆண்டுகளாகத் தூங்கும் அழகியும்.


தெற்கு இத்தாலி.  பாலெர்மோ சிசிலி என்கிற இடம்.






இங்கு இருக்கிறது தனிமுகமூடி அணிந்த ஒருவகைத் துறவுக் குழுவினரின் நிலவறைக் கல்லறை.





உலகிலேயே மிக அழகான மம்மி என்று சொல்லப்படும் ரோசாலியோ லோம்பார்டோ என்கிற 12 வயதுச் சிறுமியின் உடல் இங்குதான் வைக்கப்பட்டிருக்கிறது. 










அங்கு வைக்கப் பட்டிருக்கும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மம்மிகளில் இதுதான் அழகு மட்டுமல்ல, அப்படியே தூங்குவது போலவும் இருக்கிறதாம்.



1920 டிசம்பர் 6 இல் நிமோனியாவால் இறந்துபோன இந்தப் பெண்ணின் பிரிவைத் தாங்க முடியாத அவள் தந்தை, அப்போதைய புகழ் பெற்ற, இறந்த உடல்களை பாடம் (embalm) செய்யும் Alfredo Salafiaவை அணுகி, மகள் உடலைப் பாடம் செய்யச் சொல்கிறார்.





இவர்தான் Alfredo Salafia. 





அரிதான இந்த வழியைக் கண்டுபிடித்தவர்.  முதலில் விலங்குகள் மீதும் பின்னர் மனிதர்கள் உடல் மீதும் சோதனை நிகழ்த்தியிருக்கிறார். தனது தந்தையின் உடலைக்கூட அவர் இப்படி பாடம் செய்து வைத்திருந்திருக்கிறார்.  



 


யு எஸ் வந்து தனது கண்டுபிடிப்பை விற்றுக் கொண்டிருந்திருக்கிறார்.  அப்புறம் என்ன காரணத்தினாலோ தனது நாட்டுக்கே திரும்பி விட்டார்.  அவர் சாகும்வரை தந்து கண்டுபிடிப்பின் தயாரிப்பு ரகசியத்தை வெளியிடவில்லை.



கல்லறையில் கண்ணாடியால் மூடப்பட்ட சவப்பெட்டியில் ஒரு மரப்பலகையில் மீது வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் பெண்ணின் உடல்.அந்த உடம்பை எக்ஸ்ரே எடுத்துக் பார்த்தபோது இத்தனை வருடங்கள் கழித்தும் அதன் உறுப்புகள் பிரியாமல், சிதையாமல் ஒன்றோடொன்று இணைந்தே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.




சலாஃபியாவால் இறந்த உடம்பைப் பாடம் செய்யப் பயன்படுத்தப்பட்ட முறை சமீபத்தில் ஒரு பேப்பரில் எழுதப்பட்டுக் கிடைத்துள்ளது. அவர் அந்தப்பெண்ணின் ரத்தத்தை எடுத்துவிட்டு  பார்மலின் கலந்த திரவத்தை உள்ளே செலுத்தியுள்ளார்.  அது பாக்டீரியாவை அழிக்க வல்லது.  மேலும் ஆல்கஹால், கிளிசரின், சாலிசிலிக் ஆஸிட் ஆகியவற்றையும் உபயோகப்படுத்தி உள்ளார்.




தலைமுடியில் கட்டப்பட்ட ரிப்பனுடன் இரண்டு வயதுக்கு குழந்தை போலக் காட்சியளிக்கும் இந்தப் பெண்ணின் மம்மியில் ஆச்சர்யம் என்னவென்றால் குறிப்பிட்ட இடைவெளியில் அது கண்ணைத் திறந்து பார்க்கிறதாம்.  





தொடர் படமெடுக்கும் முறையில் படம் எடுத்தபோது இது தெரிந்ததாம்.  சில வருடங்களுக்கு எல்லோரையும் வியப்புக்குள்ளாக்கி, கேள்விக்குறிகளை எழுப்பியது இந்தத் தகவல்.






ஆனாலும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இப்போது அதற்கு ஒரு பதிலை வைத்திருக்கிறார்களாம்.





அந்த ஹாலில் இருக்கும் ஜன்னல்களிலிருந்து வரும் வெளிச்சத்தால் ஏற்படும் காட்சிப்பிழை என்று சொல்லியிருக்கிறார்கள்.ரோசாலியாவின் உடலை அங்கிருந்து நகர்த்தி வேறு இடத்தில் வைத்து, அவள் கண்ணிமைகளை நன்றாகக் பார்க்கும் வகையில் வைத்தபோது இது தெரியவில்லை.








300 வருடங்களுக்குப் பின் இந்தச் சிறுமி கண்திறந்து பார்த்தாள் என்று சமீபத்தில் கூட ஒரு பரபரப்பு தோன்றியது.  அதுவும் இது போன்ற ஒரு காட்சிப் பிழையாகத்தான் இருக்க வேண்டும்!
 


புதன், 28 செப்டம்பர், 2016

புதன் 160928.


சென்ற வாரப் புதிர்க்  கேள்விகளுக்கு, முதல்  கேள்விக்கும், மூன்றாவது கேள்விக்கும், அநேகமாக  எல்லோரும் சரியான பதில் சொல்லியிருந்தார்கள்.

முதல் கேள்வியை நான் எழுதும்பொழுது, வி என் ஜானகி மற்றும் எங்கவீட்டுப்பிள்ளை, தொழிலாளி  படங்களில்  எம்ஜியாருக்கு ஜோடியாக நடித்த ரத்னா ஆகியோரை நினைத்துக் கேட்டிருந்தேன்.

கீதா சாம்பசிவம், நெல்லைத்தமிழன், பானுமதி வெங்கடேஸ்வரன், கணக்குத் தணிக்கை, துளசிதரன் எல்லோருமே  அசத்திட்டாங்க! வாழ்த்துகள்.

மூன்றாம் கேள்விக்கு, ஆங்கில அகராதியில் என்பது சரியான விடை. முதல் ஆளாக அதை கூறிய மாதவனுக்கு பாராட்டுகள். அந்த பதிலை சொன்ன எல்லோருக்கும் வாழ்த்துகள்.

இரண்டாவது கேள்விக்கு, மிகச் சிலரே பதில் கூற முயன்றிருக்கிறார்கள்.
ஒரே ஒரு க்ளூ தருகிறேன். அதை வைத்துக்கொண்டு பதில் கண்டுபிடியுங்கள். ஆங்கில உயிரெழுத்துகள் ... எண்களாக ......

============================

1) What is the missing number? Why / How?

1. 6 _ 8 0 3

2)  தமிழ் நடிகர்களில் உண்மையான டாக்டர் யார்?


3)  ஒரு சீட்டுக்கட்டில் ஒரே குறியீடு (டயமண்ட் / கிளாவர் / ஹார்ட்ஸ்  / ஸ்பேட் ) உள்ள  அத்தனை சீட்டுகளிலும் இருக்கின்ற எண்களைக் கூட்டினால், என்ன கூட்டுத்தொகை  வரும்?  

===========================
              

செவ்வாய், 27 செப்டம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: பொய்ப்பூக்கள்



          இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை" பகுதியில் நண்பர் 'சேட்டைக்காரன்' வேணுஜியின் படைப்பு இடம்பெறுகிறது.  அவர்  ப்ரொபைல் படமாக நாகேஷ் படத்தை வைத்திருந்தவர்.  நகைச்சுவை மன்னர்.  உவமை அரசர்.  அவர் எழுத்துகளை ரசிக்காதவர் இருக்க முடியாது.  அவர் தளத்தைப் படித்தவர்களுக்கு இது நன்றாகத் தெரியும்.  பாடல்கள் பற்றியும் பழைய திரைப்படங்கள் பற்றியும் கூட ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவார்!


          அவரின் தளம் சேட்டைக்காரன்.


           இந்தக் கதை பற்றிய அவர் முன்னுரை தொடர்கிறது.  அதனைத் தொடர்ந்து அவர் படைப்பு...

====================================================================


வணக்கம்!


சேட்டைக்காரன்’ என்ற மாறுவேடத்தைக் கலைத்தபின்னர், அனேகமாக என்னுடன் பழகிவரும் அனைத்து சகபதிவ நண்பர்களுக்கும் இரண்டு விஷயங்கள் நன்றாகத் தெரியும். ’ஸ்ரேயாவுக்கு நடிப்பு வராது; சேட்டைக்காரனுக்குப் படிப்பு வராது.’ சுஜாதாவின் சிறுகதைகூட எனக்கு சுக்லா & க்ரேவல் அக்கவுண்டன்ஸி புத்தகம்போலவே பயமுறுத்துவது வழக்கம் ஆதலால் எனக்கு வாசிப்பனுபவம் இல்லை. ஒரு சில ஆண்டுகள் புத்தகக்கண்காட்சிக்குச் சென்று, அதிகபட்சம் மிளகாய் பஜ்ஜியும், மிரண்டாவும் உட்கொண்டு புறமுதுகு காட்டியவன். ஆனாலும், நானும் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து ஏறத்தாழ 400 பதிவுகளும் போடுமளவுக்கு மதர்ப்பு வந்திருக்கிறதென்றால், அதற்கு ‘பண்புடன்’ இணையக்குழுமமே காரணம்.



எங்கள் பிளாக்’ என்னையும் ஒரு பொருட்டாய் மதித்து, எனது சிறுகதையைப் பதிவேற்ற விரும்புகிறதென்றால், அதனால் ஏற்படப்போகும் சகலவிதமான பின்விளைவுகளுக்கும் ‘பண்புடன்’ குழுமமே முழுப்பொறுப்பு என்றால் மிகையாகாது. எனவே…



     அந்தக் குழுமத்தில், 24-02-2009-ல் நான் எழுதிய ‘பொய்ப்பூக்கள்’ என்ற சிறுகதையை உங்களுக்காக மீள்பதிவு செய்ய விரும்புகிறேன்.

இவ்வளவு பீடிகைகள் போடக்காரணம், கதை படித்துவிட்டு ‘என்ன அபத்தம் இது?’ என்று யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காக அல்ல. என்னிடமிருந்து வேறு எதையும் யாரும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறேன். நன்றி! 


======================================================================









பொய்ப்பூக்கள்
சேட்டைக்காரன்  


ரவீந்திரன் காரைக் கிளப்பியதுமே வாசலின் கதவு திறக்கப்பட்டது.


ஸ்டீயரிங்கை இரண்டு கைகளாலும் பிடித்தபடியே கண்களை இறுக்க மூடிக்கொண்டு மனதுக்குள்ளே முணுமுணுத்தார். ’காக்க காக்க கனகவேல் காக்க..’ கியரைப்போட்டு ஆக்ஸிலேட்டரில் காலை வைத்து அழுத்த அவர் எத்தனித்தபோது, பாபு உள்ளேயிருந்து சட்டையின் பட்டன்களைப் போட்டும் போடாமலும் ஓடி வந்தான்.


"அப்பா! இருங்க, நானும் வர்றேன்," பாபு அவரது அனுமதி தேவையில்லை என்பது போல, அதற்காகக் காத்திருக்காமல் முன்பக்கக் கதவைத் திறந்து கொண்டு ஏறி அமர்ந்து கொண்டான்.


"எங்கேடா வர்றே?" ரவீந்திரன் குழப்பத்தோடு கேட்டார்.


"நீங்க எங்கே போறீங்களோ அங்கே! வண்டியை விடுங்கப்பா..," என்று அவரை ஏறிட்டுப் பார்க்காமல் சட்டை பட்டன்களைப் போட்டுக்கொள்வதில் கவனமாக இருந்தான்.


"நான் பெங்களூர் போறேண்டா," என்றார் ரவீந்திரன் எரிச்சலுடன்.


"சரி! நான் கூட வர்றேனே? டிரைவர் இல்லாம உங்களைத் தனியா அனுப்ப எனக்கு மனசில்லே," என்றபடி, பாபு டேஷ்போர்டைத் திறந்து உள்ளேயிருந்த சி.டி.க்களில் தனக்குப் பிடித்தமானதைத் தேட ஆரம்பித்தான். வண்டியை வேறு வழியில்லாமல் சாலையில் திருப்பிய ரவீந்திரன் நெடுஞ்சாலையை நோக்கி விரையத் தொடங்கினார்.


"! அம்மா உன்னைக் கூடப் போன்னு அனுப்பினாளா?" ரவீந்திரனின் குரலில் வெறுப்பு தொனித்தது.


"அம்மா சொல்லணுமா? தனியா வண்டியெடுக்காதீங்கன்னு டாக்டர் சொல்லியிருக்காரா இல்லையா?"


"ஏண்டா, ஹோசூரிலேருந்து பெங்களூர் போறதுக்கு...," என்று ரவீந்திரன் ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள்ளாகவே, பாடல் ஒலிக்கத் தொடங்கி விட்டிருந்தது.


கிஸ் கோ காத்தில் மே கஹூம், கிஸ்கோ மஸீஹா சம்ஜூம்..சப் யஹா தோஸ்த் ஜோ பேட்டே ஹை, கிஸ் கோ க்யா சம்ஜூம்..,என்று ஜக்ஜித் சிங் உருகத்தொடங்கியிருந்தார்.


"அப்பா! உங்களுக்கு ஹிந்தி, உருது ரெண்டுமே தெரியாது. எப்படீப்பா கஜல் கேட்கறீங்க?" என்று கேட்டான் பாபு.


"மனசுலோனி மர்மமுலு தெலுசுகோ பாட்டை உங்கம்மா பாடறாளே, என்னிக்காவது தெலுங்கு தெரியுமான்னு கேட்டிருக்கியா?"


பாபு அப்பாவைத் திரும்பி நோக்கினான். அவன் முகத்தில் ஒரு வறண்ட புன்னகை அரும்பியது.


அப்பா, அம்மா இருவர் மீதும் சம அளவு பாசம் இருக்கிற பிள்ளைகளுக்கு இது போன்ற சவால்கள் அதிகமோ என்று தோன்றியது. அதுவும் அப்பா-அம்மாவின் உறவு, உள்பக்கம் சாயம்போய், வெளிப்பக்கம் அகல ஜரிகை போட்டுப் பளபளத்துக்கொண்டிருக்கும் ஒரு பட்டுப்புடவையாகி வெகுநாட்களாகி விட்டிருந்தன. அவர்கள் இருவருக்கும் இருந்த நம்பிக்கையில் சின்னச் சின்ன விரிசல்கள் தென்படத் தொடங்கியிருந்தன. அவர்களது வார்த்தைப் பரிமாற்றங்கள் குறைந்து போய் விட்டிருந்தன. இருவருக்கும் ஒருவரை விட்டு ஒருவர் விலகி இருப்பது பிடிக்கத் தொடங்கி விட்டிருந்தது. ’சீ!’ என்று விட்டு விடவும் முடியாமல், ஒட்டிக்கொண்டிருக்கவும் முடியாமல், எண்ணையும் நீரும் போல ஆகிவிட்டிருந்தார்கள்.


"அப்பா, கோபமா?"


"இல்லை," என்று ரத்தினச்சுருக்கமாக பதில் அளித்து விட்டு, ரவீந்திரன் சாலையில் கவனத்தை செலுத்தினார்.


எங்கே தவறு செய்தோம் என்று அவர் யோசிக்கத் தொடங்கினார். இந்த இறுக்கம் ஏற்படுவதற்கு அவர் தான் காரணம் என்று அவருக்கே தெரியும். ஆனால், புதைகுழியில் கால் வைத்து விட்டதுபோல், அதிலிலிருந்து மீள முடியாத நிலை. இதை அவர் வெளிப்படையாகப் பேசி, தேவைப்பட்டால் ஒரு வார்த்தை மன்னிப்பும் கேட்டிருந்தால், நிலைமை சுமுகமாகியிருக்கும். என்ன செய்வது, இந்த வயதில்போய் அவருக்குள்ளே தான் ஆண், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஒரு திடீர் வீறாப்பு!


"அப்பா! ப்ளீஸ்! கோவிச்சுக்காதீங்க," என்று மீண்டும் பேசினான் பாபு.


"என்னை டபுள் ரோட்டிலே இறக்கி விட்டிட்டு நீங்க ஜெயநகர் போங்க! திரும்பி வரும்போது எனக்கு போன் பண்ணுங்க! நான் வந்து சேர்ந்துக்கிறேன்.."


"பாபு!," ரவீந்திரன் வண்டியின் வேகத்தைக் குறைத்தவாறே, மகனைத் திரும்பி நோக்கினார்.


"நிஜமாத் தான் சொல்றேன்!" என்று நேராக சாலையில் கண்களைப் பதித்தவாறே பேசினான் பாபு. "உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே நான் மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட விரும்பலே! உங்க கூட வர்றதுக்கு ஒரு பொய் சொன்னேன். வீட்டுக்குத் திரும்பிப் போய் அம்மா கிட்டேயும் பொய் சொல்லிக்கறேன்! உங்களுக்கும் சந்தோஷம், அம்மாவுக்கும் நிம்மதி! நான் உங்க கூட இருக்கிற வரைக்கும் இப்படியே மாத்தி மாத்திப் பொய் சொல்லி உங்க ரெண்டு பேரையும் சந்தோஷமா வைச்சிட்டிருக்கேன்."


சிறிது நேரம் .சியின் குளிரையும் மீறி அந்தக் காருக்குள்ளே மௌனம் தன் வெப்பத்தைப் பரப்பிக்கொண்டிருப்பது போலிருந்தது. இவனிடம் என்ன சொல்வது என்று யோசித்து யோசித்து, சிறிது நேரம் கழித்துத் தொண்டையை செருமிக்கொண்டு ரவீந்திரன் பேச ஆரம்பித்தார்.


"பாபு, என்னோட நிலைமையை நீ புரிஞ்சிக்கணும்!"


பாபு பதிலேதும் பேசவில்லை.


"சொல்லவோ கேட்கவோ கண்ணியமா இருக்காது தான்! ஆனா, எனக்கு சில விஷயங்கள் தேவைப்படுது! அதுனாலே ஏற்பட்ட குழப்பங்கள் தான் இதெல்லாம்! இப்போ புலிவாலைப்  பிடிச்ச மாதிரி இருக்கு! என்னாலே உதறிப் போட்டுட்டு வந்திடமுடியாது."


"யாரை...?" பாபு கேட்டான். "அம்மாவையா...அவங்களையா...?"


"உங்கம்மாவை நான் எப்பவுமே உதற முடியாது," என்று தீர்மானமாகசொன்னார் ரவீந்திரன். "அப்படி நான் பண்ணினா இத்தனை பொய் சொன்னதெல்லாம் முட்டாள்தனமாயிடும். இன்னும் சொல்லப்போனா, எந்தப் பொய்யுமே உங்கம்மாவுக்காக சொன்னதில்லை..இந்த சொஸைட்டிக்காக சொன்ன பொய்கள்...!"


"பரவாயில்லேப்பா! வேறே ஏதாவது பேசுவோம்!" என்றான் பாபு. "உங்களோட தன்னிலை விளக்கமெல்லாம் வேண்டாமே!"


"நீ சொன்னா சரி," என்றார் ரவீந்திரன். "ஆனா, உன் மேலே எனக்கு இருக்கிற பாசம் மட்டும்....."


"தெரியும்," என்று இடைமறித்தான் பாபு. "அதெல்லாம் பேசவே வேண்டாம்!"


"டபுள் ரோட்டிலே இறங்கி என்ன பண்ணுவே?"


"மூடிருந்தா லால்-பாக் போவேன்! இல்லாட்டி அப்படியே ஆட்டோ பிடிச்சு எம்.ஜி.ரோடோ அல்லது மெஜஸ்டிக்கோ போவேன்."


"கையிலே பணம் வைச்சிருக்கியா...?"


"உம்..இருக்கு! ஐநூறு ரூபா வைச்சிருக்கேன்..."


"ஏதாவது சினிமா போறதுன்னா போயேன்.."


"அவ்வளவு நேரமாகுமா...?" என்று கேட்ட பாபு, உடனே உதட்டைக் கடித்துக்கொண்டான். "சாரிப்பா!"


"பரவாயில்லேடா," என்றார் ரவீந்திரன். "உனக்குத் தான் எல்லாம் தெரிஞ்சிருக்கே! உன் கிட்டே சொல்றதுக்கென்ன? இன்னிக்கு அவளுக்கு பொறந்தநாள்! பரிசு கொடுத்திட்டு ஒரு வாய் சாப்பிட்டிட்டு வர வேண்டியது தான்! அதிகபட்சம் ஒரு மணி நேரம். பரவாயில்லையே..?"


"தாராளமா...."


"இது உனக்கு எவ்வளவு தர்மசங்கடமாயிருக்கோ, அதே அளவு எனக்கும் இருக்கு," என்றார் ரவீந்திரன்.


"எனக்கு ஒண்ணுமில்லை," என்றான் பாபு. "கொஞ்சம் வருத்தமுண்டு. அழையாவிருந்தாளி மாதிரி நம்ம வீட்டுக்குள்ளே வந்து சில பொய்கள் நம்மைஆட்டிப்படைச்சிட்டிருக்கே! அதைத் தவிர எது சரி, எது தப்புன்னெல்லாம் நான் உங்களோட பேச விரும்பலே..."


"பாபு, நீ விரும்பினாலும் விரும்பாட்டாலும் கடைசிவரைக்கும் உன் கூடவரப்போறது பொய் தான்," என்றார் ரவீந்திரன். "ஏன், அதுக்கப்புறமும் கூட! நெருப்புன்னா வாய் வெந்திராது! நாளைக்கே நான் போயிட்டாலும் கூட, நீ எனக்காக கோதானம், பூதானமா பண்ணப்போறே? கிடையாது! அய்யருக்குப் பத்தோ இருபதோ கொடுத்து சமாளிக்கப்போறே! பொய்யை விட வலிமையானது வேறே எதுவும் கிடையாது! ஆம்னிப்ரெஸன்ட்...ஆம்னிபொட்டெண்ட்..."


பாபு பதில் கூறாமல் புன்னகைத்தான். இது பலமீனமானவர்கள் பிரயோகிக்கிற இன்னொரு ஆயுதம். ’நான் செத்து விட்டால்...,’ என்று பயமுறுத்துவது! அப்பாவுக்கும் இந்த ஆயுதம் பிடித்திருக்க வேண்டும்! அவர் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டிருக்கிற ஸ்டியரிங்கைப் போலத் தான் வாழ்க்கை, அவர் விரும்புகிற திசையில் திரும்பும் என்ற ஒரு இனம் புரியாத மமதை அவருக்கு வந்திருக்க வேண்டும். அல்லது, இப்படி சொன்னால், ’ஐயோ, இப்படியெல்லாம் பேசாதீர்கள் அப்பா,’ என்று மகன் பதறினாலும் பதறுவான் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்திருக்கக்கூடும்!


பாபுக்கு அப்பாவின் சாவு பற்றிய பேச்சு எந்த விதமான அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, அவருக்குள்ளே மெல்ல மெல்ல ஏற்பட்டுக்கொண்டிருக்கிற தோல்வி மனப்பான்மையின் அறிகுறியாகவே அவரது அசந்தர்ப்பமான வார்த்தைகள் தொனித்தன.


"பாபு...என்ன யோசிக்கிறே...?"


"ஒண்ணுமில்லை!"


"ஒண்ணு கேட்டாக் கோவிச்சுக்கமாட்டியே!"


"கேளுங்கப்பா..!"


"நீ சொன்னியே! உங்க ரெண்டு பேருக்கும் நடுவிலே மாட்டிக்கிட்டு அவஸ்தைப் பட விரும்பலேன்னு...அப்போ நீயே ஒத்துக்கறியா? பொய் சொன்னாத் தான் நிம்மதியா இருக்க முடியுமுன்னு...?"


மகனை மடக்கி விட்ட திருப்தியோடு புன்னகைத்தார் ரவீந்திரன். அவரது நோக்கம் புரிந்தது பாபுவுக்கு. கூடவே,அவருக்குத் தான் விவாதத்தில் வென்று விட்டோம் என்ற மகிழ்ச்சியில், வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருப்பது புரியாமல் போய் விட்டது என்பதும் புரிந்தது.


"நீங்க ஜெயிச்சிட்டீங்கப்பா!" என்று பாபு புன்முறுவலோடு கூறி விட்டு, சீட்டில் சாய்ந்து கொண்டான்.


அதன் பிறகு அவர்கள் இருவரும் எதையெதையோ பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். பணவீக்கம், பங்குச்சந்தை, இலங்கைப் பிரச்சினை, கொஞ்சம் அரசியல் - பொழுதைப் போக்க, பேசிக்கொள்ள விஷயங்களா இல்லை...?


லால்பாக் வடக்குக் கதவின் முன்னால் பாபு இறங்கிக்கொண்டான்.


"எனக்கொண்ணும் அவசரமில்லைப்பா! டேக் யுவர் டைம்! அங்கிருந்து கிளம்புறதுக்கு அரை மணி முன்னாலே எனக்கு போன் பண்ணுங்க! இங்கேயே வந்து நிக்கிறேன்.."


"நீ எங்கேயிருக்கியோ நான் வர்றேனேப்பா...?"


"வேண்டாம்! இது தான் சரி! நான் இங்கேயே வர்றேன்..."


கதவை சாத்தி விட்டு இளம்வெயிலில் டபுள் ரோட்டில் சிறிது நேரம் நடந்தான். குறிக்கோளின்றி நடந்தான். இப்படித்தான் தன் வீட்டில் அப்பாவும் அம்மாவும் குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணியபோது வேடிக்கையாக இருந்தது. காற்றின் வேகத்தில் தோற்றுப்போன காய்ந்த இலைகளைப் போல! எங்கேயாவது போய் தரையில் விழுவோம் என்ற ஒரு அற்ப நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு, விழுவதற்கு எப்போதும் தயாராக இருப்பவர்களைப் போல!


இப்படித்தான் எல்லாக் கணவன்களும், எல்லா மனைவிகளும் ஒரு வயதுக்கு மேல், ஒருவரையொருவரு பொய்சொல்லி ஏமாற்றிக்கொண்டிருப்பார்களா என்று யோசித்தபோது, வயிற்றுக்குள்ளே சில்லிட்டது. நல்ல வேளை, தன் திருமணத்துக்கு இன்னும் குறைந்தது நான்கு ஆண்டுகளாவது ஆகும் என்று அவனுக்குள்ளே ஒரு ஆறுதல் ஏற்பட்டது. ஆனால், வாழ்க்கையில் பெற்றோரின் மீது தன்னையுமறியாமல் ஒரு விதமான அருவருப்பு ஏற்படத் தொடங்கியிருந்தது மட்டும் உண்மை தான்.


வயதுக்கு மீறிய, வரம்புகடந்த அப்பாவின் அந்தரங்க வாழ்க்கை; அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்க கணவனோடு மகனையே துப்பு துலக்க அனுப்புகிற ஒர் அம்மா. இருவர் மீது சரிசமமாக எரிச்சல் வந்தது. இருவரது நடவடிக்கைகளிலும் குழந்தைத்தனமே மேலோங்கியிருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இருவருமே குடும்பம் நடத்துக்கிற கோட்பாடை விட்டு விலகி, அவரவர் சுயநலங்களுக்காக அல்லாடிக்கொண்டிருப்பது போலிருந்தது. இரண்டு பேருக்கும் நடுவே இயல்பான ஒரு மகனாக இருப்பது மூச்சுத் திணறுவது போலிருந்தது.


பல்வேறு சிந்தனைகளுக்கு ஆட்பட்டு நடந்து கொண்டே போனவன், ரிச்மண்ட் சர்க்கிள் வரைக்கும் வந்து விட்டிருப்பதை உணர்ந்தான். அப்போது அம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.


"ஹலோ அம்மா!"


"என்னடா? போய்ச் சேர்ந்திட்டீங்களா?"


"!"


"அப்பா எங்கே?"


"பக்கத்திலே தான் இருக்கார்; பேசறியா?"


"வேண்டாம்! வேண்டாம்!"


பாபு நிம்மதிப் பெருமூச்சு விடுத்தான். ’சரி கொடு,’ என்று ஒரு வேளை அம்மா சொல்லியிருந்தால்....?


"சாப்பிட்டாச்சா?"


"இல்லை! பெட்ரோல் பங்கிலே இருக்கோம்! அப்படியே மாவல்லி டிபன் ரூம் போகவேண்டியது தான்..."


"சரி, சொன்னதெல்லாம் ஞாபகத்திலே இருக்கில்லே...?"


"!"


"ஜாக்கிரதை!"


அவர்கள் பேசி முடித்தபிறகு, பாபுவுக்கு சிரிப்பு வந்தது. ஒரு பொய் மூன்று பேரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பது உறைத்தது. இனி, இப்படித் தான் இருக்கப்போகிறதா வீடு? அவ்வளவு தானா, அம்மா அப்பாவின் தாம்பத்யம்..? இனி பழைய புகைப்படங்களைப் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்ள வேண்டியது தானா? அவனுக்குக் குழப்பமாக இருந்தது.


ஆட்டோ பிடித்தான். எங்கேயோ இறங்கினான். எந்தக் கடைக்குள்ளோ புகுந்து எதையோ தேடி வாங்கினான். பிறகு, அங்கிருந்து கிளம்பினான். மெல்லிய தூறல் விழத் தொடங்கியிருந்தது. ஆனால், அவனுக்கு உள்ளும் புறமும் எரிந்து கொண்டிருப்பது போலிருந்தது. அடிக்கடி செல்போனை எடுத்துப் பார்த்துக்கொண்டான்.


அப்பா! சீக்கிரம் வாருங்கள் அப்பா! இங்கேயிருந்து கிளம்பி விடலாம்.’


ரவீந்திரனிடமிருந்து போன் வரும்வரைக்கும் நரகவேதனையாக இருந்தது. ஒருவழியாக வந்த போது...

 
"எங்கேடா இருக்கே...?"


"கெம்பேகௌடா சர்க்கிள்!"


"நான் கிளம்பறேன்!"


"சரிப்பா!" என்று போனை அணைத்தவன், மனதுக்குள்ளே கடவுளுக்கு நன்றி தெரிவித்தான். அங்கிருந்து இன்னோர் ஆட்டோ பிடித்து, மீண்டும் தான் இறங்கிய இடத்துக்கே வந்து நின்றான். சிறிது நேரத்தில் காரும் வந்தது. கதவும் திறந்தது.


"அப்பா! நான் ஓட்டட்டுமா?" பாபு கேட்டான்.


"! ஓட்டேன்!" என்றார் ரவீந்திரன்.


பாபு ஸ்டீயரிங்கை இரண்டு கைகளாலும் இறுக்கப் பிடித்துக்கொண்டான். கண்களை மூடிக்கொண்டு முணுமுணுத்தான்.


காக்க காக்க கனகவேல் காக்க!’


"வாட் சர்ப்ப்ரைஸ்! உனக்கு எப்பலேருந்துடா கடவுள் நம்பிக்கையெல்லாம்...?" ரவீந்திரன் வியப்போடு கேட்டார்.


"கொஞ்ச நாளாத்தான்! நிறையப் பொய் சொல்றேனில்லையா? தைரியம் தேவைப்படுது," என்று அப்பாவைப் பார்த்துப் புன்னகைத்தான் பாபு. "ஒரே ஒரு அற்ப சந்தோஷம்! அம்மாவுக்காக நான் உங்க கிட்டே பொய் சொல்லறா மாதிரி ஒரு சந்தர்ப்பம் கண்டிப்பா வராதுங்கிறது தான்...."


ரவீந்திரன் உறைந்து போய் உட்கார்ந்திருக்க, பாபு காரை விரைந்து செலுத்தத் தொடங்கினான்.





**********************