சனி, 31 டிசம்பர், 2016

மரங்களைக் காக்கவில்லை அவர். மனிதர்களைக் காக்கிறார்



1)  ஆகவே, முடிந்த அளவு உதவி செய்யுங்கள். பணத்தை விட முக்கிய மாக, உங்கள் அன்பை இந்த உயிர்களுக்கும் கொடுங்கள். அந்த அன்பு உங்களுக்கு நல்ல புரிதல்களையும், மேம்பட்ட சிந்தனையையும் அளிக்கும்.  தயவு செய்து ஒருமுறை, இங்கு வந்து பாருங்கள்.   ஷிராணி.
 
 


2)  ஒற்றை மனிதராய் மூர்த்தியின் சேவை.
 
 


3)  அளவில்லாமல் வருமானம் வரும் அயல்நாட்டு விலையைவிட, 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலை'க் கடமையாகக் கொண்ட 24 வயது பிரின்ஸ் திவாரி.
 
 


4)  ஊரே திரண்டு உயர்த்திய உழைப்பாளியின் மகன்.
 
 


5)  வயிறு வாழ்த்துவதால் வாயார வாழ்த்தும் ஏழைகள்.  சந்திரசேகர் (K)குண்டு.
 
 


6)  மரங்களைக் காக்கவில்லை அவர்.  மனிதர்களைக் காக்கிறார் முல்லைவனம்.




வெள்ளி, 30 டிசம்பர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ :: 161230 :: ஒரு ராகத்தில் இரு பாடல்கள்


எதிலிருந்து எது?  

இங்கு ஹிந்தியிலிருந்துதான் தமிழுக்கு.  அந்தக் காலத்தில் வேதா..  இப்போது தேவா.




ஆனால் இரண்டு மொழிகளிலுமே இனிமையான பாடல்... ஹிந்தியில் சற்று வேகமாக இருந்ததது, தமிழில் ஹரிஹரன் மெதுவாக குழைவுக் குரலில் பாடி மெலடியாக்கி இருக்கிறார்.  ஹிந்தியில் ரிஷியின் நடனம் ரசிக்கத்தக்கது.

புதன், 28 டிசம்பர், 2016

செண்டுவெளிக் களியாட்டம்



IV  விரிவாக 15 வரிகளுக்கு மிகுந்து விடையளி :                                                                                                                15
 
 
 
செண்டுவெளிக் களியாட்டம் என்றால் என்ன? செண்டு என்பதை விளக்குக.

 
 
விடை  : 

     பழந்தமிழ் மக்களின் வீர விளையாட்டுகளில் செண்டு வெளிக் களியாட்டம் மிகச் சிறந்ததென்பதைக் காப்பியங்கள் எடுத்துக் காட்டுகின்றன.  அந்தக் களியாட்டம் வீரனை நிர்ணயித்தது.  அக்காலத் தமிழ் மன்னர்களுடைய அரண்மனை ஒவ்வொன்றுக்குள்ளும் செண்டுவெளியென்ற பெரும் பயிற்சி அரங்கமொன்று இருந்து வந்தது.  ஆயிரக்கணக்கான மக்கள் வட்டமாகச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அந்த வெளியில் வசதியிருந்ததன்றி, மன்னரும் மற்றப் பெருங்குடி மக்களும் அமருவதற்குப் பெரும் மேடைகளும் அமைக்கப்பட்டிருந்தன.  செண்டு வெளியில் சமதரை சாதாரண நாட்களில்கூடப் பழுதுபார்க்கப்பட்டு வந்ததால், புரவிகள் வெகு வேகமாகச் செல்வதற்கும் அவற்றில் கால்கள் இடறாமலும் வழுக்காமலும் இருப்பதற்கும், எப்பொழுதும் வெகு சீராக வைக்கப் பட்டிருந்தது.  அந்தத் தரையின் அழகை ஒட்டியும், குதிரைகளைப் பழக்குவதற்குக் கூட அது உபயோகப்படுத்தப்பட்ட காரணத்தாலும் அதை வையாளி வீதியென்றும் மக்கள் அழைத்து வந்தார்கள்.  அரண்மனையின் அந்தச் சிறப்பு வெளிமுற்றத்தில் சாதாரண நாட்களிலும் வீரர்கள் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.  செண்டாயுதப் பயிற்சியும் அங்கு தினந்தோறும் நடக்கும்.  ஆனால் மக்களுக்கு முரசு அறிவித்து நடத்தப்படும் செண்டுவெளிக் களியாட்டம் பெரும் பிரமை அளிக்கவல்லது.  கவிஞன்
நாவுக்கு வலு அளிப்பது, நாட்டுக்குக் கவிதை அளிப்பது வரலாற்று வித்தாக விளங்கியது.
 
 
 


     செண்டுவெளியாட்டம் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே மன்னர் ஆணையாளர் முரசு மூலம் செண்டு வெளி நடக்கும் தேதியை மக்களுக்கு அறிவிப்பார்கள்.  மூன்று நாட்களுக்கு முன்பிருந்து மீண்டும் செண்டு வெளித் தரையும், மன்னரும், மற்றோரும் அமரும் உயர் மேடைகளும் மிக மும்முரமாகச் செப்பனிடப்படும்.  மன்னனை வெளியிலிருந்து காக்க அழகிய பெரும் துணி கொம்புகள்மீது விரிக்கப்படும்.  உண்மையில் இதுகூட அவசியமில்லை.  ஏனென்றால் அந்தக் களியாட்டத்தில் ஏற்படும் வெறி, மாலை நேர வெய்யிலையோ வெப்பத்தையோ வானப் பொழிவையோகூட அலட்சியம் செய்யும்.  அன்று மக்களுக்கோ மன்னனுக்கோ அரண்மனைப் பெண்களுக்கோ மது சிறிதும் தேவையில்லை. போதையேற்ற செண்டுவெளி வீர நாடகமே போதும்.  அந்த வீரவிளையாட்டை "மண்டிலர் குதிரை நாடு வட்டம் போர் கூத்துமாகும்.  செண்டு செண்டாயுதம் பந்தெறி வீதி" ("நாநார்த்த தீபிகை" --- "ஒரு சொல் பல பொருள்" -- திருநெல்வேலிக்கவிராயர் முத்துசாமிப் பிள்ளை எழுதியது  -- பக்கம் 173 - சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு) எனப்பாடி இதைப் போர்க் கூத்து எனச் சிறப்பிப்பாரும் உண்டு.

     இந்தப் போர்க் கூத்தில் கையாளப்படும் செண்டு என்ற ஆயுதம் கிட்டத்தட்ட வேல் போன்றது.  வேல் போன்ற கூரிய முனையுடன் மட்டுமின்றி அந்த முனைக்குச் சற்றுக் கீழே பிடியைச் சுற்றிச் சின்னஞ்சிறு சூலங்கள் பலவும் வார்ப்படம் செய்யப்பட்டிருந்தபடியால் முனையின் அடிப்பாகம் செண்டு போல் பார்ப்பதற்கு அழகாகவும், வேகமாகப் பாய்ந்தால் சதையைப் பிய்த்துக் கொண்டு ஆழ உள்ளே சென்று தேகத்தில் நிலைத்துப் பறிக்க முடியாத முறையில் உயிரைக் குடித்துவிடும் தன்மை வாய்ந்ததாகவும் இருந்தது.  சிலசமயம் ஈட்டி முனைக்குக் கீழேயிருந்து சிறு சூலங்களில் சின்னஞ்சிறு துணிகள் சுற்றப்பட்டு எண்ணெயூற்றி நெருப்பும் வைக்கப் படுமாதலால், செண்டால் தாக்கப்படுபவர் தீப்புண் சுட்டு அப்புண்ணுக்குப் பலியாவதும் உண்டு.  நீண்ட மப்பிடியுடன், தலையில் கூரிய இரும்பு வேலும் அதையொட்டி சிறு இரும்பு சூலங்கள் பலவும் செண்டு போல் வார்க்கப் பட்டிருந்ததால் பார்வைக்கு மிக அழகாக இருந்த செண்டாயுதம் உண்மையில் உயிரை எளிதில் குடிக்கக்கூடிய பயங்கர ஆயுதமாக இருந்தது.  இத்தகைய ஆயுதத்துக்குத் தெய்வத்தன்மையும் கற்பிக்கப்பட்டிருந்தது.  இதை ஐயனாரின் ஆயுதமாகச் சிறப்பித்து வந்தார்கள் பைந்தமிழர்கள்.  இதன் காரணமாக ஐயனாருக்கு 'செண்டாயுதன்' என்ற திருநாமமும் வழங்கலாயிற்று.


சாண்டில்யனின் "ராஜமுத்திரை" வரலாற்றுக்கு கதையிலிருந்து வளர்த்துக்கொண்ட பொது அறிவு.
 
 
 




படங்கள் இணையத்திலிருந்து.... நன்றி


செவ்வாய், 27 டிசம்பர், 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: ராஜாவும் தொழிலதிபர்தான்


     இந்த வார "கேட்டு  வாங்கிப் போடும் கதை" பகுதியில் பதிவர் ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் படைப்பு இடம் பெறுகிறது.
     அவரின் தளம் Arattai.

     சுவாரஸ்யமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரர்.  விஷ்ணு - ராசி கேரக்டர்களை உருவாக்கி, நகைச்சுவை எழுத்தில் மிளிர்பவர்.   பலரை அவரவர் வாழ்க்கையில் மேலே ஏற்றிவிடும் ஏணி வேலையைச் செய்து ஓய்வு பெற்றவர்.  ஆசிரியர்!

     அவரது முன்னுரையைத் தொடர்ந்து அவரின் படைப்பு இடம்பெறுகிறது.


======================================================================




திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு,

வணக்கம்.

உங்கள் தளத்தில் என் கதை வெளியாவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என் எழுத்துப் பலரின்  பார்வைக்கு, சென்றடைய  உதவும் உங்களுக்கு என் நன்றிகள் பல.

கதையைப் பற்றிய ஒரு சிறு முன்னுரை:

'ராஜாவும் தொழிலதிபர் தான் ' ஒரு உண்மை நிகழ்வை மையமாக வைத்து புனையப்பட்ட கதை .சென்னை அடையாறிலுள்ள  புற்றுநோய் சேவை மையத்திற்கு ஒரு முறை  சென்றிருந்தேன்.  அங்கே  'ராஜா ' போன்ற ஒருவரை சந்திக்க நேர்ந்தது.  அவர் என்னை ஆச்சர்யப்படுத்தினார். ஆச்சர்யத்தை கதையாக்கி விட்டேன். ராஜாவை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான , கற்பனைக் கதாபாத்திரமே 'கைலாசம்'.
 
'Joy of Giving' மாதத்தையொட்டி  எழுதப்பட்டது இக்கதை.
 
கதையைப் படித்து உங்கள் மேலான கருத்தை  சொல்லுங்கள்.

வெளியிடும் ஸ்ரீராம் அவர்களுக்கும், படிக்கும்,கருத்திடும் நண்பர்கள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் நன்றிகள்.

இப்படிக்கு,
ராஜலஷ்மிபரமசிவம்.
http://rajalakshmiparamasivam.blogspot.com
=====================================================================



ராஜாவும் தொழிலதிபர் தான்.
 ராஜலக்ஷ்மி பரமசிவம் 

 
கைலாசம்  தன்  பெரிய படகு போன்ற 'டோயோடா' காரை  அந்த சேவை மையத்தின் முன் நிறுத்தி விட்டு, கார் கதவைத் திறந்து கொண்டு மையத்தின் உள்ளே சென்றார்.  மிக உயர்ந்த பிராண்டட் பேண்டும், சட்டையும், படகுக் காரும்  அவர்  மிகப் பெரிய பணக்காரர் என்பதை பறை சாற்றியது.

 
திருப்பூரில்  தொழிலதிபரான  கைலாசம், கம்பீர நடையுடன்  உள்ளே காப்பாளர் அறைக்கு சென்றார்.


புற்று நோய் சேவை மையத்தின் காப்பாளர், கிருஷ்ணன், கண்ணைக் கூசும், பளீர் வேட்டி, சட்டையுடன், அன்றைய காலை அலுவல்களை  கவனித்துக் கொண்டிருந்தார். பின்புலத்தில்  சூலமங்கல சகோதரிகள் மெல்லியக் குரலில்  " காக்க காக்க கனகவேல் காக்க " என்று பாடிக் கொண்டிருந்தார்கள்.

 
" டொக் ,டொக் " கதவு தட்டும் சத்தம்.


ஃபைலைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன்   தலையை நிமிர்த்தாமலே , "எஸ் கம் இன் "  சொல்லவும், கதவைத் திறந்து கொண்டு  கைலாசம் உள்ளே நுழைந்தார். கைலாசம் போட்டிருந்த உயர் ரக செண்டின் மணம் கிருஷ்ணனை   நிமிர வைத்தது.

 
" வாங்க! எப்படி இருக்கிறீர்கள் கைலாசம் சார்வருடத்திற்கு ஒரு முறை அத்திப் பூத்தாற் போல் வருகிறீர்கள்"

 
" நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ? தொழிற்சாலை வேலை விஷயமாக அவ்வப்போது சென்னை வருகிறேன். ஆனால் நேரமே கிடைக்கவில்லை.  மையத்தை  விரிவு படுத்தும் வேலை மும்மரமாக நடக்கிறது போல் இருக்கிறதே"  என்று ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டே சொன்னார் கைலாசம்.

 
" உங்களைப் போன்றவர்களின்  நல்ல மனசு தான்  இதற்குக் காரணம்" என்று சொல்லிக் கொண்டே மணியைத் தட்டி, பியுனை வரவழைத்து,  'ஜில்'லென்று  எலுமிச்சை ஜுஸ்  கொண்டு வரச் சொன்னார் கிருஷ்ணன் 
புற்று நோய் சேவை மையம் விஸ்தாரமாக எட்டு ஏக்கர் பரப்பளவில்  இயங்கிக் கொண்டிருந்தது. பல ஏழைப் புற்று நோயாளிகளுக்குத் தஞ்சம் அளித்துக் கொண்டு அமைதியாக இருந்தது.  மையத்திலேயே காய்கறிகள், கீரை, தேங்காய், எலுமிச்சை  என்று எல்லாம் விளைந்து கொண்டிருந்தது.  அவை மையத்தில் நோயாளிகளுக்கு உணவிற்கு உபயோகமானது.  இதற்கெல்லாம் கிருஷ்ணனின்  திறமையான தன்னலமற்ற நிர்வாகம் தான் காரணம்.


இது எல்லோருக்கும் தெரியும்.

 
அதை மனதில் கொண்டு கைலாசம் ," என்னைப் போன்றவர்களால் அல்ல, உங்களைப் போன்றவர்களால் தான், சேவை மையம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது கிருஷ்ணன் சார் " என்று சொல்லிக் கொண்டே தன் சட்டைப் பையில் வைத்திருந்த  " பத்து லக்ஷத்திற்கான " செக்  ஒன்றை டேபிளில்  வைத்தார் . 

"எங்களால் என்ன  பணம் மட்டுமே கொடுக்க முடிகிறது. நீங்கள் தான் அதைத் திறமையாக செயல் படுத்துகிறீர்கள் "என்று அவர் சொன்னாலும் , ' நான் கொடுக்கும் பணம் தான் முக்கியக் காரணம்' என்ற தொனி இருந்தது  அவர் பேச்சில்..


கிருஷ்ணன் மனதிற்குள் சிரித்துக் கொண்டார் .' பணக்காரர்களுக்கே உரிய  கர்வம்' என்று அவர் மனம் சொல்லியது. அதனால் என்ன?   மையத்திற்குப் பணம் வருகிறதே என்று சகித்துக் கொள்ள வேண்டியது தான் என்று சிரித்து வைத்தார்.


பியூன்  அப்போது ஜுஸ் கொண்டு வந்து வைக்கவும்இருவரும் ஜுஸ் குடித்துக்கொண்டே, சொந்த வாழ்க்கைப் பக்கம் பேச்சுத் திரும்பியது. கைலாசத்திற்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டுப் போனது.


" மகனும் மகளும் அமெரிக்காவில்  டாலரில் லட்சம் லட்சமாக  சம்பாதிக்கிறார்கள்என்  தொழிற்சாலையிலும்  ஓரளவு லாபம் வருகிறது.  வருமானவரி  எக்கச்சக்கமாக கட்ட வேண்டியிருக்கிறது.  அதை ஓரளவிற்காவது குறைக்கலாம் என்று தான் ஒவ்வொரு வருடமும், லட்சம்  லட்சமாக இங்கே தானம்  கொடுக்க வேண்டியிருக்கிறது.  அதை  என் அம்மாவின் நினைவு தினத்தை  ஒட்டி கொடுக்கிறேன்." என்று அலுத்துக் கொண்டார். கைலாசத்தின் தாய் கேன்சரில் தான் இறந்து போனார்.


மனக் கசப்புடன் தான் பணம் கொடுக்கிறார் கைலாசம் என்று புரிந்தது கிருஷ்ணனுக்கு.  அரசாங்கத்திற்கு நன்றி சொல்லிக் கொண்டார் மனதுள். 'வருமானவரிக்காகத் தான் இவரைப் போன்றவர்கள்  மனதில் , சேவை மையங்கள்  நினைவிற்கு வருகிறது.' என்று கிருஷ்ணனின்  மனம்  சொல்லியது.

 
பிறகு சிரித்துக் கொண்டே, " கொஞ்சம் பொறுங்கள் கைலாசம். உங்களுக்கு  ரசீது தருகிறேன்" என்று தன் முன்னால் இருந்த கணினியை, கிருஷ்ணன்  தட்ட ஆரம்பிக்கவும், கதவு மீண்டும்


" டொக், டொக்."


" கம் இன் "


உள்ளே நுழைந்த மனிதனைப் பார்த்ததும் கைலாசத்திற்கு கண்மண் தெரியாமல் கோபம் வந்தது.


" என் காரைப் பார்த்து இங்கே  வந்தாயா?   நீயாக வந்து என் காரில் மேல் விழுந்து விட்டு, இப்போது ஒரு தரித்திரக் கூட்டத்தையே அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாயாஎவ்வளவு பணம் பறிப்பதாக உத்தேசம்?" என்று சகட்டு மேனிக்குக் கத்த ஆரம்பிக்கவும்,

 
கிருஷ்ணன் இடை மறித்து ," சார், சார் கோபப்படாதீர்கள்.  ராஜா  என்னைப் பார்க்க வந்திருக்கிறார். " என்றார்.


'ராஜாவாம் ராஜா . பேர் தான் ராஜா . தொழில் என்னவோ செருப்புத் தைப்பது. பேர் மட்டும் ராஜாவாக இருந்தால் ஆச்சாஇதிலொன்னும் குறைச்சலில்லை' என்று கைலாசம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே
" முதலில் உட்கார் ராஜா. என்ன ஆச்சு ? ஏன் சார் உன் மேல் கோபப் படுகிறார்? " என்று கிருஷ்ணன் கேட்கவும், கிழிந்த லுங்கியும், அழுக்கு முண்டா பனியனும்  அணிந்திருந்த ராஜா  உட்கார மறுத்து நின்று கொண்டேயிருந்தார்.


" ஒண்ணுமில்லே சார். சார் காரில் வரும் போது, நான் தான் தெரியாமல் அவர் கார் மேல் விழப் பார்த்தேன். நல்ல வேளை, சார் காரை நிறுத்தி விட்டார். பசி மயக்கம் சார்.அதான் விழப் போனேன். நேற்றிலிருந்து ஒண்ணுமே சாப்பிடவில்லை. இப்போ தான் என்னிடம் நூற்றிஐம்பது  ருபாய் கடன் வாங்கிப் போன கபாலி  பணத்தைக் கொடுத்தான்.  என் நாஷ்டாவை முடிச்சிட்டு எப்பவும் கொடுக்கிற  நூறு ரூபாயைக் கொடுத்துட்டுப்  போலாம்னு வந்தேன் சார் ." என்று கிருஷ்ணனிடம் அழுக்கான நூறு ரூபாயை நீட்டினார்  ராஜா 


திரும்பி கைலாசத்தைப் பார்த்து ," சார், நான் ஏழை தான் சார். ஆனால் பணம் பறிப்பவன் இல்லை சார். என்  அம்மா கேன்சரில் தான் செத்துப் போச்சு.  காசு இருந்திருந்தா அம்மாவைக் காப்பாத்தியிருக்கலாமோ என்னமோ .. வேற யாரும் காசில்லாமல் செத்துப் போயிடக் கூடாது.  அதனால் மாசாமாசம், நூறு ருபாய்  சாரிடம் மையத்தின் செல்விற்காகக் கொடுத்துடுவேன். என்னால் முடிஞ்சது, அவ்வளவு தான்.  அதுக்குத் தான் வந்தேன் சார்.  நீதான் என்னை தப்பா  நினைச்சுட்டே.  மன்னிச்சிக்கோ."  சொல்லி விட்டு பதிலுக்குக் காத்திருக்காமல், கிருஷ்ணனுக்கு ஒரு வணக்கம் வைத்து விட்டு ராஜா போய் விட்டார்.


கைலாசத்தின் மனதில் இருந்த 'தான் பணக்காரன், தொழிலதிபர்என்கிற அகங்காரம் போன இடம் தெரியாமல் போனது.  " நான் கொடுத்த பத்து லட்சத்தை விட சாப்பாட்டுக்குக்  கஷ்டப்பட்டாலும்  உதவ வேண்டும் என்று ராஜா கொடுத்த  நூறு ரூபாய் விஸ்வருபம் எடுத்தது கைலாசத்தின்  மனதில்  "ராஜாவும் தொழிலதிபர் தான் . என்ன  என்னுடையது அவர் தொழிற்சாலையை விடவும் சற்றே பெரிது அவ்வளவு தான் " என்று நினைத்துக் கொண்டே  ராஜா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் கைலாசம்.


கைலாசம் தானாக  தன்னிலைக்கு வரட்டும் என்று கிருஷ்ணன் அமைதியாக அமர்ந்திருந்தார்.



               ------------------------------------------------------------------------------

திங்கள், 26 டிசம்பர், 2016

"திங்க"க் கிழமை 161226 – அரிசி உப்புமா கொழுக்கட்டை - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


பொதுவா விரதம் அல்லது சாதம் சாப்பிடமுடியாத வேளைகளில், இட்லி, தோசை அல்லது குருணை உப்புமா செய்வது எங்கள் வீட்டில் (முந்தைய தலைமுறை) வழக்கம். பொதுவாக சனிக்கிழமை இரவு மாத்திரம்தான் இந்தமாதிரி டிஃபன் உண்டு. முந்தைய தலைமுறைகளில் வெளியில் process செய்யும் பொருட்களை (ரவை, சேமியா, ஜவ்வரிசி, அப்பளாம் போன்றவற்றை) வீட்டில் உபயோகிக்கமாட்டார்கள். சுகாதாரம்தான் இதற்கு அடிப்படை என்றாலும், வீட்டுப் பெண்களுக்கு பயங்கர வேலை (பெண்டு கழண்டுவிடும் என்று சொல்லுவோம்). அரிசியைக் குருணையாக ஆக்குவதால், அது சாதம் வகையில் வராது. அப்படித்தான் அரிசி உப்புமா குருணை உப்புமா என்றாகிவிட்டது.  இதை ருசியோட சாப்பிடணும்னா, வெங்கலப் பானை அல்லது உருளி தேவை (அதெல்லாம் இனி எங்க பாக்கறது). அதிலும் நல்லா மிதமான தீயில் வெந்தபிறகு (நல்லா எண்ணெய் விடணும். தேங்காய் எண்ணெய்னா இன்னும் நல்லா மணமா இருக்கும்), வெங்கலப் பானையில் தீய்ந்து (கருகி இல்லை) ஒட்டிக்கொண்டிருப்பது தனி ருசி. எழுதும்போதே ருசி நாக்குக்குத் தெரிகிறது.

இப்போ நான் சொல்லப்போறது, எப்படி அரிசி உப்புமா குழக்கட்டை பண்ணறது என்று.  அரிசி உப்புமாவுக்கு, 1 தம்ளர் அரிசி, ஒரு பிடி கடலைப் பருப்பு, ஒரு பிடி துவரம்பருப்பு, 10-20 மிளகு தேவை. இதைக் கொஞ்சம் வெறும் வாணலியில் வறுத்துவிட்டு மிக்சியில் ஒரு சுத்து சுத்தலாம். இல்லைனா, அரிசி தனியாகவும், மற்றதைத் தனியாகவும் ஒரு சுத்து சுத்தலாம். நான் ஊருக்கு வரும் சமயத்தில், கடைகளில், அரிசி உப்புமா மிக்ஸ் என்று 3-4 பாக்கெட் வாங்கிவருவேன். 5-6 மாதம் தாங்கும். இரண்டும் ஒன்றுதான் என்றாலும், நாமே தயார் பண்ணுவதுபோல் இருக்காது.




வாணலியில் 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயில், கடுகு, சிறிதாக கட் செய்த 2 பச்சை மிளகாய், 1 ஸ்பூன் உளுத்தம்பருப்பு,, 1 ஸ்பூன் கடலைப் பருப்பு, பெருங்காயப்பொடி, கருவேப்பிலை போட்டு தாளித்துக்கொள்ளவும். ஒரு கப் அரிசி உப்புமா மிக்ஸுக்கு 2 ¼ கப் தண்ணீர் என்பது கணக்கு. தாளித்தவுடன், அதிலேயே, 2 ¼ கப் தண்ணீர் விட்டுத், தேவையான உப்பையும் சேர்த்து கொதிக்கவிடவும். இதில் 3-4 ஸ்பூன் தேங்காய் துருவலையும் சேர்க்கலாம். (பயணத்துக்குக் கொண்டுபோவதாக இருந்தால், தேங்காய் சேர்க்கக்கூடாது. உப்புமா கெட்டுப்போய்விடும். நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, 1 பாக்கெட் மிளகாய்ப்பொடி தடவின இட்லி, ஒரு பாக்கெட் அரிசி உப்புமா கொண்டுசெல்வேன். போய்ச்சேர்ந்த அன்னிக்கே அடுத்தவேளை சாப்பாட்டுக்கு எங்க போக என்று கவலைப்படக்கூடாது என்பதால்).  தண்ணீர் நன்றாகக் கொதித்தவுடன், அதில் அரிசி உப்புமா மிக்ஸ் ஒரு கப்பை பரவலாகச் சேர்க்கவும்.  அரிசி உப்புமா கொதிக்கும்போது மேலே தெறிக்கும். நான் கைக்கு துணி கிளவுஸ் வைத்திருக்கிறேன்.  நல்லா கொதித்து தண்ணீர் எல்லாம் போனபின், அடுப்பை அணைக்கவும். 





வெறும்ன அரிசி உப்புமா மட்டும் வேணும்னா, அடுப்பை அணைத்தபின், உப்புமாவை குக்கரில் வைத்து, இட்லி வேகவைப்பதுபோல் 10 நிமிடம் வேகவைக்கலாம். (Gas அடுப்பில் சாதாரண வாணலியில் கிண்டி அரிசி உப்புமாவை வேகவைப்பது கடினம்).  ஆனால், இப்போ நான் சொல்லப்போறது, உப்புமா குழக்கட்டை செய்வதைப் பற்றி.




அரிசி உப்புமாவை, கை பொறுக்கிற சூடு வந்ததும், குழக்கட்டை மாதிரிப் பிடித்து, இட்லி தட்டில் வைத்து, இட்லியை வேகவைப்பதுபோல் வேகவைத்துவிடவேண்டியதுதான்.





இதற்கு தொட்டுக்க ஒண்ணும் வேண்டாம். நான் வெந்தயக் குழம்பு கொஞ்சம் தொட்டுக்கொண்டு சாப்பிட்டேன்.  இட்லி மிளகாய்ப்பொடியும் நல்லா இருக்கும். என் குழந்தைகளுக்கு அரிசி உப்புமாவுக்கு தேங்காய்த் தொகையல் ரொம்ப இஷ்டம். (சிவப்பு மிளகாய், உ.பருப்பு, பெருங்காயம் கொஞ்சம் எண்ணெயில் வறுத்துக்கொண்டு, தேங்காயும், சிறிது புளியும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் தேங்காய்த் தொகையல் ரெடி).


 
செய்து பாருங்கள். நிச்சயம் ருசியா இருக்கும்.


(எனக்கும் ரொம்பப் பிடிக்கும் நெல்லைத்தமிழன்..  சுட்ட கத்தரிக்காய் கொத்ஸு தொட்டுச் சாப்பிட பரம சுகம்!)

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

சனி, 24 டிசம்பர், 2016

அஜித்தைக் காப்பாற்றிய செபாஸ்டியன் பி




1)  சிறந்த அஞ்சலி.  இலவச உணவு வழங்கி பசி போக்கிய அம்மா உணவகங்கள்.

2)  இந்த மாதிரி ஒரு நிகழ்வில் இப்படி ஒரு ஜனவெள்ளத்தில் எந்தக் கலவரமும், அசம்பாவிதமும் நடக்காமல் அமைதியாக இருந்த நம் மக்களையும், அதற்குத் துணை நின்ற காவல்துறையையும் நாம் பாராட்டாமல் யார் பாராட்டுவார்கள்?

3)  நடக்கவேண்டும் அனைத்து இடங்களிலும் இது...


Image result for karuvela maram images

4)  அபிஜித்தைக் காப்பாற்றிய செபாஸ்டியன்.

5)  எங்கள் சென்னை



6)  பொறுப்பில்லாத 'குடி'மகனும் பொறுப்புள்ள போலீஸ்காரரும்.

7)  திரிவேணி ஆச்சார்யாவின் விடா முயற்சியால் காப்பாற்றப்பட்ட இரண்டு சகோதரிகள்.  இடைவிடாத சேவை.

8)  சபாஷ் (நடிகர்) லாரன்ஸ்.

9)  கேரளப்படகில் சூர்யா.


10)  தங்கத்தை மிஞ்சிய தங்கம் செல்வகுமாரி.




வெள்ளி, 23 டிசம்பர், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 161223 :: வார்த் புயல் !


என்  வீட்டு  ஜன்னலிலிருந்து  ....
12.12.2016  பகல் பன்னிரண்டு  மணியளவில்  ...



                         

           

வியாழன், 22 டிசம்பர், 2016

பிறமொழிக்கதைகள் :: ராவி நதியில் - உருது - குல்ஸார்



     இந்த வருட தினமணி தீபாவளி மலர் ஒரு விஷயத்தில் மிகவும் ரசிக்க வைத்தது.  தீபாவளிக் கதைகள் என்ற தலைப்பில் சில பொக்கிஷக் கதைகளை பிரசுரித்திருக்கிறார்கள்.  துமிலன் (நவீன தீபாவளி), 'சித்ராலயா' கோபு (தீபாவளி எப்படி), பெ நா அப்புஸ்வாமி (தீபாவளி பட்சணம்).
 
 


     அடுத்த பொக்கிஷம் பிறமொழிக் கதைகள்.  இதில் தகழி சிவசங்கரன்பிள்ளை - மலையாளம் (வெள்ளம்), சுனில் கங்கோபாத்தியாய - வங்காளம் (கதாநாயகி), திருபென் படேல் - குஜராத்தி (மகாத்மாவின் மனிதர்கள்), குல்ஸார் - உருது (ராவி நதியில்).   சிவசங்கரி அந்தந்த எழுத்தாளர்களை நேர்கண்டு அந்த உரையாடல்களுடன் தொகுத்திருக்கும் புத்தகம் "இலக்கியத்தின் மூலம் இந்திய ஒருங்கிணைப்பு"  (வானதி பதிப்பகம்).
 
 
 


     இது தவிர அசோகமித்திரன், சா. கந்தசாமி, பொன்னீலன், ஸிந்துஜா, இரா. சோமசுந்தரம், பா. முத்துக்குமரன், எஸ். சங்கரநாராயணன்,  ஜேஎஸ் ராகவன் ஆகியோரின் சிறுகதைகளும் உண்டு.
 
 
 


     தகழி எழுதியிருக்கும் 'வெள்ளம்' கதை கண்களை நிறைத்தது.  என்போன்ற நாலுகால் ஜீவன்களை நேசிக்கும் எல்லோருக்கும் அந்தக் கதை பிடிக்கும்.

     இதில் குல்ஸார் எழுதி இருக்கும் கதை படித்ததும் மனம் ஒரு கணம் ஆடி நின்றது.  குல்ஸாரை நேர்கண்டு எழுதி இருக்கும் சிவசங்கரி அவரிடம் இதை பற்றிக் குறிப்பிடும்போது "அக்கதையில் நீங்கள் எழுதி இருந்த கடைசிப் பகுதியைப் படிக்கும்போது உடம்பு உதறிப் போட்டது!" என்கிறார்.
 
 
 


     அதற்கு அவர் பதில் "என் சிறுகதைகள் ஒரு வகையில் கவிதைகள் போன்றவைதாம். மேலெழுந்தவாரியாகப் படித்தால் ஒரு சிறுகதை போலத் தோன்றும்.  ஆனால் அதற்கு கீழே ஒரு அடுக்கு உள்ளது.  அதற்குள் புகுந்து பார்க்கும்பொழுது முழுக்கதையையும் வேறொரு கோணத்திலிருந்து பார்ப்பது சாத்தியமாகும்.  பாகிஸ்தானில் பிறந்து பிரிவினையின்போது இந்தியாவுக்கு வந்த நான்தான் அந்த இரட்டைக் குழந்தைகள்.  இது ஒரு கண்ணோட்டம்.  இரட்டைக் குழந்தைகள் இரண்டு நாடுகளைக் குறிக்கின்றன என்பது இன்னொரு கோணம்.  வெறும் ஒரு நிகழ்வை மட்டும் அந்தக் கதை சொல்ல வரவில்லை.  அதையும் தாண்டி பல்வேறு நடப்புகளை உள்ளடக்கியது என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இப்படி ஒவ்வொரு கதையின் கீழும் பல அடுக்குகள் உள்ளதால்தான் அவை கவிதைகள் போன்றவை என்றேன்".
 
 
 


     குல்ஸார் ஹிந்தியில் எழுதி இருக்கும் பல திரைப் பாடல்கள் எவ்வளவு உயர்ந்த தரம் என்பதை என் அரைகுறை ஹிந்தி அறிவிலேயே புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது.  படித்து முடித்ததும்  இந்தக் கதை என்னையும் உலுக்கிப் போட்டது.  இதே போன்றதொரு கதையை எழுத்தாளர் சுப்ரஜா ஸ்ரீதரன் எழுதி இருக்கிறார்.  அம்மா பற்றிய அந்தக் கதை அப்போது  என்னை திடுக்கிட வைத்தது.
 
 
 


     குல்ஸாரின் அந்தக் கதையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.



ராவி நதியில் (உருது)
 
குல்ஸார்




          தர்ஷன் சிங்குக்கு இன்னும் பைத்தியம் பிடிக்காமல் இருப்பது எப்படி என்று எனக்குப் புரியவில்லை.  அவன் அப்பா இறந்து விட்டார்.  அம்மா குருத்துவாராவின் கலவரத்தில் காணாமல் போய்விட்டாள்.  ஷாஹ்னி இரட்டைப் பிள்ளைக் குழந்தைகளைப் பிரசவித்துள்ளாள்.  அவனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.  அவன் விஷயத்தில் விதி நன்றாக விளையாடி விட்டது.  ஒரு கையால் கொடுத்து விட்டு, மற்றொன்றால் பறித்துக் கொண்டுவிட்டது.

          சுதந்திரம் கிடைக்கப்போகிறது என்று தெரிந்தது.  ஆனால் அது லாயல்பூரை எப்போது அடையும் என்பது தெரியவில்லை.  குருத்துவாராவில் இந்துக்கள், சீக்கியர் - இரு மதத்தவருமே ரகசியமாகக் குழுமத் துவங்கிவிட்டார்கள்.  ஷாஹ்னி இரவும் பகலும் பிரசவ வலியால் முனகினாள்.  அதுதான் அவளுக்கு முதல் பிரசவம். 

          கலவரத்தைப் பாரிய புதிய தகவல்களை அவ்வப்போது தர்ஷன் சிங் சொல்வான்.

          அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக, "ஒண்ணும் ஆகாதுப்பா.... பயப்படாதே.  ஒரு இந்து, இல்லே சீக்கியரோட வீடாவது இதுவரைக்கும் தாக்கப்பட்டிருக்கா?" என்பார் அப்பா.

          ஆனா, குருத்துவாரவைத்த தாக்கியிருக்காங்களே, அப்பா?  ரெண்டு தரம் அதற்கு நெருப்பு கூட வச்சிருக்காங்க".

         "அப்பாவும் அங்கதான் போகணும்னு சொல்றீங்க!"

          தர்ஷன்சிங் உடனே மௌனமாகி விடுவான்.  மக்கள் என்னவோ தங்கள் வீடுகளை விட்டுவிட்டு குருத்துவாராவில்தான் அடைக்கலம் புகுந்தார்கள்.

          "எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருந்தா பாதுகாப்பாயிருக்கு, அப்பா.  நம்ம தெருவுல ஒரு இந்துவோ, சீக்கியரோ பாக்கி இல்லே...  நாம மட்டும் தான் தனியா இருக்கோம்"

          பத்துப் பதினைந்து நாட்களுக்கு முன்னால், ஒரு நாள் இரவு முற்றத்தில் அப்பா விழும் சத்தம் கேட்டது.  திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தார்கள்.  குருத்துவாரா இருந்த திசையிலிருந்து. 'ஜோ போலே ஸோ நிஹால்' என்ற மந்திர ஒலி கேட்டது.  மந்திர சத்தத்தில் விழித்துக்கொண்ட அப்பா, மொட்டைமாடிக்குப் போய்ப் பார்த்திருக்கிறார்.  திரும்ப இறங்கி வரும்போது, படிகளில் தடுக்கி, முற்றத்திலிருந்த கோடாரியை தலை மோதிக் கொள்ள, விழுந்து விட்டார்.

          அப்பாவின் இறுதிச்சடங்குகளை எப்படியோ செய்து முடித்தார்கள்.  தொடர்ந்து, தங்களது விலையுயர்ந்த உடைமைகளை ஒரு தலைகாணி உரையில் அடைத்துக்கொண்டு, குருத்துவாராவில் தஞ்சம் புகுந்தார்கள்.  அங்கு ஏற்கெனவே பயத்துடன் சிலர் இருப்பதை பார்த்தபோது, இவர்கள் பாதுகாப்பாக உணர்ந்தார்கள்.  அப்புறம் அவன் பயப்படவில்லை.

          "இங்கு நாம் மட்டும் தனியாய்ல்லே, அதோட கடவுளும் நம்ப கூடவே இருக்கார்" என்றான் தர்ஷன்சிங்.

          இளைஞர்கள் குழு ஒன்று இரவு பகலாக வேலை செய்தது.  மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து மாவு, பருப்பு, நேயையெல்லாம் தங்களுடனே கொண்டுவந்திருந்தார்கள்.  அங்கிருந்த சமயலறையில் இரவும் பகலும் அடுப்பு எரிந்தது.  ஆனால் அங்கேயே எவ்வளவு நாள் வசிப்பது?  எல்லோர் மனதையும் இதே கேவிதான் வாட்டியெடுத்தது.  அரசாங்கம் சீக்கிரமே உதவி செய்யும் என்று நம்பினார்கள்.

          "எந்த அரசாங்கம்?" என்று யாரோ கேட்டார்கள்.  "இங்கிலீஷ்காரங்க நம்ம நாட்டைவிட்டுப் போயிட்டாங்க".

          "பாகிஸ்தான்னு தனி நாடு உருவாயிடுச்சு.  ஆனா அரசாங்கம் இன்னும் அமையலையே.:"

          "எங்க பார்த்தாலும் ராணுவக்காரங்கதான் உதவி பண்றங்களாம்., நாடு விட்டு நாடு போறவங்க எல்லைக்குப் போய்ச்சேர."

          "நாடு விட்டு நாடு போறவங்களா?  யாரது?"

          "அகதிங்க..."

          "இப்படியொரு வார்த்தைய இதுவரைக்கும் நான் கேட்டதேயில்லே."

            சில குடும்பங்களால் இந்த அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை.

            "நாங்க ஸ்டேஷனுக்குப் போகப் போறோம்.  ரயிலெல்லாம் மறுபடி ஓடுதாம்.  இங்கயே எத்தனை நாள்தான் இருக்கறது?"

          "நாமதான் தைரியமா இருக்கணும்.  கடவுளா நம்மை தோள்ல சுமப்பார்?"

          "நானக் நாம் ஜஹாஸ் ஹை,  ஜோ சத்தே ஸோ உத்தரே பார்!"  (குரு நானக்கிற்கு ஆயிரம் பெயர்கள் உண்டு.  அவரை நம்புபவர் அக்கரையை அடைவார்) என்று அவர்களுள் ஒருவர் உரக்கக் குரல் கொடுத்தார்.

          ஒருசிலர் அந்த இடத்தக்கைவிட்டு அகன்றதால், அங்கே ஒரு சூனியம் உருவாயிற்று.  வேறு சிலர் அங்கே நுழைந்து வெளியுலகத்திலிருந்து செய்தி கொண்டு வரும்போதெல்லாம் அந்த சூனியம் நிரம்பியது.

          "ஸ்டேஷன்ல பெரிய ஜனக்கூட்டம் முகாம் போட்டிருக்கு."

          "சில பேர் பசியில சாகரங்க.  சில பேர் ஒரேயடியாக திங்கறாங்க.  தொத்து நோய் வேற பரவுதாம்."

          "அஞ்சு நாளைக்கு முன்னால இந்த வழியா ஒரு ரயில் போச்சு...   எள்ளு விழ இடமில்லே...  அதுல கூரை மேல்கூட மனுஷங்க உட்கார்ந்திருந்தாங்க."

          அன்று சங்கராந்தி.  காலையிலிருந்து இரவு நெடுநேரம் வரை குருத்துவாராவில் பிரார்த்தனைகள் நடந்தன.  அந்த சுபதினத்தில்தான் அவள் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தாள்.  ஒன்று ரொம்ப பலவீனமாக இருந்தது.  அந்தக் குழந்தை உயிர் பிழைப்பதே கடினம் என்று தோன்றியது.  ஆனால் அதைப் பிழைக்க வைக்க ஷாஹ்னி போராடினாள்.

          அன்றிரவு யாரோ அறிவித்தார்கள்.  "அகதிகளுக்காக ஸ்பெஷல் ரயில் வந்திருக்கலாம்.  போகலாம், வாங்க."

          ஒரு பெரிய கூட்டம் குருத்துவாராவிலிருந்து கிளம்பியது.  தர்ஷன் சிங்கும் அதில் சேர்ந்து கொண்டான்.  ஷாஹ்னி மிகவும் பலவீனமாக இருந்தாலும், தன் மகன்களுக்காகக் கிளம்ப ஒப்புக்கொண்டாள்.  ஆனால் தர்ஷன் சிங்கின் அம்மா மறுத்து விட்டாள்.

          "நான் அப்புறமா வரேம்ப்பா... அடுத்த கூட்டத்தோட வரேன்.  உன் பெண்டாட்டியையும் பிள்ளைகளையும் கவனி".

          தர்ஷன் சிங் அவளோடு விவாதிக்க, கோவில் குருக்களும் சொல்லிப் பார்த்தார்.  ஆனால், "நீங்க கிளம்புங்க சர்தார்ஜி.  ஒவ்வொருத்தரா நாங்களும் எல்லைக்கு வந்துடுவோம்.  அம்மாவ எங்களோட அழைச்சிட்டு வரோம்" என்று சமாதானப்படுத்தினார்கள் தொண்டர்கள்.

            மற்றவர்களுடன் தர்ஷன் சிங்கும் கிளம்பினான்.  தன் குடும்பத்து சொத்தே அதுதான் என்பது போல, குழந்தைகளை ஒரு கூடையில் வைத்து தன் தலைமீது தூக்கிக் கொண்டாள்.

            ஸ்டேஷனில் காத்திருந்த ரயிலில் துளிக்கூட இடமில்லை.  பெட்டிகளின் கூரைகளில் புற்களைப்போல மக்கள் முளைத்திருந்தார்கள்.

            சின்னஞ்சிறு சிசுக்களை, சோர்ந்து போயிருந்த அவர்களின் அம்மாவையும் பார்த்தவர்கள், பரிதாபப்பட்டு கூரையில் கொஞ்சம் இடம் ஒதுக்கிக் கொடுத்தார்கள்.

            பத்து மணிநேரம் கழித்து நகராத துவங்கியது ரயில்.  அந்திவானம் சிவந்து, சூடாக இருந்தது.  ஷாஹ்னியின் மார்பகங்கள் தொடர்ந்து உறிஞ்சப்பட்டு, வறண்டே போய்விட்டன.  ஒவ்வொரு குழந்தையாய் மாறி மாறி பால் கொடுத்தாள்.  அழுக்குத் துணிச் சுருளில் இருந்த இரண்டும், குப்பைத் தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை போலக் காட்சியளித்தன.

            ரயில் தொடர்ந்து ஓடி இரவுக்குள் நுழைந்தது.  சில மணிநேரம் கழித்து, ஒரு குழந்தை தன் கைகால்களை உதைத்தும் அழுதவாறும் இருக்க, மற்றொன்று அசைவற்றிருந்ததை தர்ஷன் சிங் கவனித்தான்.  துணிச்சுருளுக்குள் கையை விட்டுத் தொட்டுப் பார்த்தபோது, குழந்தையின் உடல் சில்லிட்டிருப்பதையும், அது இறந்துபோய் சற்றுநேரம் ஆகியிருக்கவேண்டும் என்பதையும் உணர்ந்தான்.

          தர்ஷன் சிங் உரக்க விசும்பத் துவங்கினான்.  சுற்றியிருந்தோருக்கு விஷயம் புரிந்தது.  இறந்த குழந்தையை ஷாஹ்னியிடமிருந்து அகற்றப் பார்த்தார்கள்.  ஆனால் அவளோ   அமர்ந்து, கூடையைத் தன் மார்போடு இறுக்கிக் கொண்டிருந்தாள்.

            "தம்பி இல்லாம இவனும் பால் குடிக்க மாட்டான்."

            எல்லோரும் வற்புறுத்தியும் அவள்  கூடையை விலக்க மறுத்துவிட்டாள்.

          ரயில் பல முறைகள் நின்று நின்று கிளம்பியது. 

          இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்று இருட்டில் துழாவிப் பார்த்துப் புரிந்துகொண்டார்கள்.

          "கைராபாத்தைத் தாண்டிட்டோம்."

          " நிச்சயமா இது குஜ்ரன்வல்லாதான்."

          "இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு.  லாகூர் தாண்டியதும் இந்துஸ்தான் வந்துடும்."

          சற்றே நம்பிக்கை பிறந்ததும், சிலர் உரக்கக் கூச்சலிட்டார்கள்.

          "ஹர் ஹர் மகாதேவ்!"

          "ஜோ போலோ ஸோ நிஹால்!".

          ரயில் பாலத்தை அடைந்ததும், கூட்டத்தில் பரவசம் ஏற்பட்டது.

          "ராவி நதியை அடைஞ்சிட்டோம்."

          "இதுதான் ராவி.  நாம இப்போ லாகூர்ல இருக்கோம்."

          அந்தக் குழப்பத்தில், தர்ஷன் சிங்கின் காதில் யாரோ கிசுகிசுத்தார்கள்.  "சர்தார்ஜி,  இறந்த குழந்தையை ராவி நதியில வீசிடுங்க.  அவனுக்குப் புண்ணியம் கிடைக்கும். அவனைத் தூக்கிட்டு அந்தப்பக்கம் போவானேன்?"

          தர்ஷன் சிங் வெகு ஜாக்கிரதையாக மனைவியிடமிருந்து கூடையைப் பிடித்து இழுத்தான்.  அதிலிருந்து துணிச்சுருளை அவசரமாக உருவி, கடவுளின் பெயரைச் சொல்லியவாறு அதைத் தூக்கி ராவி நதியில் வீசினான்.

          இருட்டில், ஒரு சின்னக்குழந்தையின் அழுகையொலி அவன் காதில் விழுந்தது.  தர்ஷன் சிங் பீதியுடன் மனைவி இருந்த பக்கமாகப் பார்த்தான். இறந்துபோன குழந்தையை அவள் தன் மார்போடு அணைத்திருந்தாள்.  அப்போது புயலென எழுந்தன உரத்த குரல்கள் - "வாகா, வாகா."

          "இந்துஸ்தான் ஜிந்தாபாத்!"
 
 
 
 
 
 


சிவசங்கரியின் "இலக்கியத்தின் மூலம் இந்திய ஒருங்கிணைப்பு"  (வானதி பதிப்பகம்) கதையை தினமணி தீபாவளி மலர் புத்தகத்தில் வெளியிட்டிருப்பதிலிருந்து.