புதன், 28 செப்டம்பர், 2011

எது தீயது?

                              
எது தீயது என்ற வரைமுறைதான் புரியவில்லை என ஒரு நேயர் எழுதியுள்ள மறு மொழி எனது சிந்தனையைத் தூண்டியது.

தீயது எது என்று புரியாத அளவுக்கு குழப்பம் இருப்பது எதனால் என்று தெரியவில்லை. புரை தீர்ந்த நன்மை பயக்காதது எதுவும் தீயதே என்று குறள் வரையறுக்கிறது. மேலும் வியப்பாக பொய்மையையும் வாய்மையாகக் கருதலாம், அது புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின என்று ஒரு படி மேலே சென்று சொல்கிறது.
   
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது மற்றொரு பழம் பாடல். (யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதல் வரி பிரபலமான அளவுக்கு அடுத்தடுத்த வரிகள் பரவலாக வில்லை.)
   
மனத் துயரம் என்பது என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்வது.  அதன் முக்கிய காரணம் நமது எதிர்ப்புகளும் எதிர்பார்ப்புகளும் தான் என்பது வெளிப்படை.  எனவே தீது என்பது அடுத்தவருக்கு மனத் துயரம் அல்லது உடல் வலி ஏற்படுத்துவதுதான் என்று சொல்லலாமா? 

சுகம் என்பது சும்மா இருப்பது என்று திருமூலர் தாயுமானவர் போன்றோர் சொன்னதும் இதனால் தானோ? 

செயல்படுவது அல்லாமல் எதிர்வினையாகச் செய்யாதிருப்பது என்று ஒரு சுவாரசியமான அம்சத்தையும் கிருஷ்ணமூர்த்தி (ஜே கே) குறிப்பிட்டுள்ளார். Right action emanates from the right mind. In other words, whatever action arises from the right mind, it is the right action because there is only action and no reaction. (Not his exact words).
 
அறுவை போதுமா? 
                        

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

ஜே கே - 21:: தீங்கை நியாயப் படுத்துதல்.

                         
உலகெங்கிலும் தற்சமயம் உள்ள நெருக்கடி நிலைமை அசாதாரணமானது. இதற்கு முன் இது போல நிலைமை இருந்ததே இல்லை. சமுதாய ரீதியாக, தேசிய ரீதியாக, அரசியல் ரீதியாக பல்வேறு நெருக்கடி நிலைமைகள் வரலாறின் பல கால கட்டங்களில் ஏற்பட்டிருக்கிறது.
         
பிரச்னைகள் ஏற்படும், பின் மறையும். பொருளாதார நலிவு, மந்தம் ஏற்படும், பின்பு மாறுபட்டு வேறு விதத்தில் தொடரும். அதை நாம் அறிவோம். அது நமக்குத் தெரிந்த இயக்கம். நிச்சயம் தற்போதய நிலை வேறுபட்டதல்லவா? அது முதலில் மாறுபட்டது ஏனெனில், நாம் பணத்தையோ, பொருளையோ கையாளவில்லை, கருத்துகளைக் கையாள்கிறோம். இந்நெருக்கடி நிலை அசாதாரணமான ஒன்று. ஏனெனில் அது கருத்துக்கள் என்ற வெளியில் நடைபெறுகிறது.
            
நாம் கருத்துக்களால் சண்டையிடுகிறோம். கொலையை நியாயப் படுத்துகிறோம். உலகெங்கிலும், நியாயமான முடிவிற்குக் கொல்வதை நியாயப் படுத்துகிறோம். இதுவே இதற்கு முன் நடந்ததில்லை. முன்பு தீயதை தீயது என்று நாம் ஒத்துக் கொண்டோம்; கொலையைக் கொலை என்று கூறினோம். ஆனால் தற்போது உயர் நோக்கத்தை அடைய கொலை ஒரு கருவியாகப் பயன் படுத்தப் படுகிறது.
                
ஒரு மனிதனைக் கொலை செய்வதோ, ஒரு குழுவைக் கொலை செய்வதோ நியாயப் படுத்தப் படுகிறது. ஏனெனில், அக்கொலை மனித சமுதாயத்துக்கு நன்மை பயக்கும் என்று கொலையாளியாலும், அவன் கூட்டத்தினாலும் நியாயப்படுத்தப்படுகிறது. எனவே நிகழ்காலத்தை எதிர்காலத்துக்கு பலியிடுகிறோம்.

   
மனிதனுக்குப் பயனுள்ளது என்று நாம் கருதும் நம் நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருப்பின் எவ்வித வழிமுறையை நம் நோக்கத்திற்கு நாம் பயன்படுத்துகிறோம் என்பது நமக்கு முக்கியமல்ல. தவறான வழியினால் சரியான முடிவை உருவாக்குதல் என்பதே இதன் பொருளாகும். நாம் அத்தவறான வழிமுறையை கருத்துக்களால் நியாயப் படுத்துகிறோம். தீயதை, நியாயப்படுத்த கருத்துக்கள் என்ற பிரம்மாண்டமான அமைப்பு நம்மிடம் உள்ளது. நிச்சயம் இதுபோல முன்பு நடைபெற்றதே இல்லை. தீயது எப்போதும் தீயதுதான். அது நன்மையை அளிக்காது. போர் அமைதிக்கான வழியல்ல.
           
(The Book of Life)
                         

சனி, 24 செப்டம்பர், 2011

இந்த வார செய்தி அரட்டை

                               
வண்டலூர் ஜூவில் சமீபத்தில் ஒரு மலைப் பாம்பு பெற்ற செல்வங்களில் ஒன்று தப்பித்துச் சென்றது. 'குட்டிதான், பயம் வேண்டாம் ஒன்றும் செய்யாது' என்கிறது வண்டலூர் நிர்வாகம். கேமிரா வைத்து அதன் நடமாட்டத்துக்குக் காத்திருக்கிறார்களாம்!.
  
பள்ளிக்கரணையில் ஒரு தனியார் மருத்துவமனையில் செல்போன்கள், 'பென் டிரைவ்'கள் தொடர் திருட்டுக்குப் பின் மருத்துவமனை நிர்வாகம் தந்த புகாரில் நடவடிக்கை எடுத்த போது திருடன் சிக்கினானாம்... ஸாரி, திருடர் சிக்கினாராம். அவர், அங்கு பணி புரியும் ஒரு டாக்டராம்.
   
ஒருநாள் போட்டிகளை 25 , 25 ஓவர்களாக நான்கு இன்னிங்க்ஸ் விளையாடவும் வேறு சில மாற்றங்களைச் சொல்லியும் யோசனை சொன்ன சச்சினின் கோரிக்கையை ஐ சி சி ஏற்க மறுத்து விட்டது!
   
இந்தியாவின் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் பட்டோடி நவாப் வியாழக்கிழமை அன்று சுவாசக் கோளாறு காரணமாக காலமானார். வயது எழுபது. மிக இளம் வயதில் கேப்டனான பெருமை, அயல் மண்ணில் இந்திய அணியை முதல் முறை வெற்றி பெற வைத்த பெருமை (நியூசிலாந்துக்கு எதிராக) முதல் முறை ஆட்டத்தில் மூன்று ஸ்பின்னர்களை வைத்து ஆடச் செய்த பெருமை என்று ஏகப் பட்ட சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.அவருக்கும் நடிகை ஷர்மிளா டாகூருக்கும் நடந்த காதல், திருமணம் பற்றி சேனல்களில் பார்த்தது சுவாரஸ்யமாக இருந்தது.
    
Controversially yours என்ற தனது சுய சரிதையில் சோயப் அக்தர் சில வம்புப் பந்துகள் வீசியுள்ளதாகத் தெரிகிறது! புத்தகம் விற்க வேண்டுமே....! 'முதல் முறை சச்சின் எனக்கு பயந்து பந்து பேட்டில் படா விட்டாலும் வெளியேறினார், அப்புறம் எப்போதுமே என் பந்து வீச்சுக்கு அவர் பயப்படுவார், இவர் ராகுல் டிராவிட் எல்லாம் மேட்ச் வின்னர்கள் இல்லை, பவுன்சர்களுக்கு பயப்படுவார்கள்' என்றெல்லாம் சொல்லியுள்ளாராம். 'இதற்கெல்லாம் பதில் சொல்லி என் மதிப்பைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை' என்பது சச்சினின் பதில்!
   
வெளிநாட்டவர், வெளியூர்க்காரர்களுக்குப் புரியும் வகையில் மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் சார்பில் ஒரு சிறப்பு வழிகாட்டிக் கையேடு வெளியிடப் போகிறார்களாம். அது தவிர கோவில் வரலாறு, திருவிழாக்கள் பற்றியெல்லாம் சொல்லி 45 நிமிடங்கள் ஓடக் கூடிய ஒரு குறும்படம் ஒன்றும் தயாரிக்கிறார்களாம்.

திருக்கோவிலூர் பக்கத்தில் பசுமாட்டுக்கு ஆண்குழந்தை பிறந்ததாகக் கிளம்பிய வதந்தியால் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள மக்கள் வாசலில் வெற்றிலை, பாக்கு வைத்துக் கற்பூரம் காட்டி தேங்காய் உடைத்து 'பரிகாரம்' செய்த வகையில் பல்லாயிரக் கணக்கான தேங்காய்கள் நாசம் என்கிறது ஒரு செய்தி. "என்று மறையும் இந்த ......"
     
பாலச்சந்தர் விகடன் மேடையில் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் தனக்கு மிகவும் பிடித்த தனது கேரக்டர்களாகப் பிரசன்னாவையும் கவிதாவையும், பிடித்த படமாக புன்னகையையும் சொல்லியிருக்கிறார்.
  
அவர் படத்தில் அடிக்கடிக் காட்டப்படும் கடல் சம்பந்தப் பட்ட காட்சிகள் பற்றிய கேள்விக்கு அவர் பதில் கவர்ந்தது.
   
"The language of eternal questions என்று கடலை வர்ணிப்பார் ரவீந்த்ரநாத் தாகூர். ஏன்? கடல், நமது கேள்விகளை விழுங்கி விடுகிறது. மற்றபடி, கேள்விகளுக்கு இறுதியான விடைகள் கிடையாது என்பதைத்தான் ஓயாத அலைகள் ஒழிவின்றிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. சிலர் தினமும் மெரீனாவுக்குப் போகிறார்கள். கடலைப் பார்த்தால் உங்களுக்கு பிரமிப்பாக இல்லையா? பாறைகளின் கன்னத்தில் அறையும் கடலின் சக்தி என்னை பிரமிக்க வைக்கிறது. ஜப்பானில் சமீபத்தில் தோன்றிய சுனாமியின் வீரியத்தை டிவியில் பார்த்த போது, கொஞ்சம் பயம் வந்தது. நாம் வாழும் நிலம் என்பது கடலின் பிச்சை. கொஞ்சம் காலாற நடப்போம் என்று அது உள்ளே வந்தால், நாம் என்ன ஆவது?

கடல், மனதைப் போல் எப்போதும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கடலில் அது அலைகளாகவும், மனதில் அது உணர்ச்சிகளாகவும் தெரிகின்றன. பின், கடலை விட வேறு எது என்னைக் கவர்ந்து விட முடியும்?"

படம் எடுக்கா விட்டாலும் பாலச்சந்தர் புத்தகம் எழுதலாம்!
  
நாகேஷுக்கு ஏன் எந்த விருதும் தரப் படவில்லை என்ற ஒரு கேள்விக்கு,
"அதேதான் என் கேள்வியும். நாம் இருவருமே சேர்ந்து கேட்போம்... யாரிடம் கேட்பது? THE POWERS THAT BE. இது ஒரு மகா சரித்திரத் தவறு. ஒரு புறக்கணிப்பு என்று சொல்லிக் கொள்வதைத் தவிர, வேறு என்ன செய்ய முடியும்? என் மனதில் ஆறாத காயங்களில் இதுவும், எம் எல் வி அவர்களுக்கு பெரிய அளவில் விருது வழங்கப் படாததும் உறுத்திக் கொண்டே இருக்கின்றன." என்று சொல்லியிருக்கிறார்.
  
ஒரு நாகேஷ் பாடலை இங்கு இணைக்க விழைந்தேன். இணைக்கும் வசதி நிறுத்தப் பட்டு, பகிரும் வசதி மட்டுமே தரப் பட்டுள்ளதால் லிங்க் கீழே...

                            

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

அதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள் 4.


நூலக நினைவுகள்


காலை வழக்கமாகப் பார்க்கும் காட்சிகள் பழகி விட்ட நிலையில் போர் அடிக்காமல் இருக்க ஒரு நாள் திசை மாறினால் என்ன என்று தோன்றியதால் மாறி நடந்ததில் குறுக்கிட்ட தெருவில் நடந்த போது மூடிக் கிடந்த 'பொது நூலகம்' இன்றைய நடைச் சிந்தனையைக் கிளறியது.
முதலில் நினைவுக்கு வந்தது சமீபத்தில் எஸ் எம் எஸ்ஸில் வந்த ஒரு செய்தி. ஸ்ரீதேவி லெண்டிங் லைப்ரரி என்ற விளம்பரம். மாத வாடகை - தொடர்பு கொள்ளும் எண் (9444272858). உறுப்பினரானால் தெரிவு செய்யும் புத்தகங்களை வீடு தேடி வந்து கொடுக்கும் திட்டமாகச் சொல்லியுள்ள செய்தி கவர்ந்தது. தொழில் முனைவோருக்குப் புதிது புதிதாக யோசனைகள் பிறக்கின்றன என்பது ஒரு பக்கம், மறுபக்கம் ஆர்வமுள்ள வாசகர்கள் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு. என்னைப் போல வீட்டில் புத்தகக் குப்பையைச் சேர்த்து வைத்துக் கொள்ளாமல், படித்தோமா கொடுத்தோமா, அடுத்த புத்தகத்துக்கு மாறினோமா என்று படிக்கலாம், ஒரு சமயம் ஓரிரு புத்தகங்கள்தான் என்பதாலும், திருப்பிக் கொடுக்கக் கெடு இருப்பதால் குறிப்பிட்ட நேரத்தில் படித்து விடவும் முடியும்! எல்கே தனது பதிவில் சமீபத்தில் சொல்லியுள்ள புத்தகப் பரிமாற்றம் ஐடியா கூட நல்ல திட்டம்தான். இன்னும் சில நாட்கள் முன்பு முக்தா சீனிவாசன் தான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை கட்டணம் ஏதுமின்றி படித்து விட்டுக் கொடுக்க தந்து கொண்டிருந்தார் என்று படித்த ஞாபகம் இருக்கிறது.             
   
நூலகம் இந்த நேரத்தில் பூட்டிக் கிடக்கும்தான். பகலில் திறந்து இருந்தாலும் இப்போதெல்லாம் அங்கு நிறையக் கூட்டம் காண முடிவதில்லை. இன்றைய பரபரப்பு உலகம் காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குச் சென்று வருவதே ஒரு பெரிய சர்க்கசாகி விட்ட நாள் இது. ஒரு விடுமுறை நாளில் வந்து பார்க்க வேண்டும், எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று! இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்நாளில் நூலகம் வரும் பொறுமை இல்லை. கணினியும் செல்போனும் இருக்கின்றன அவர்களுக்குப் பொழுது போக...! நாம் தேடும் புத்தகங்களும் பெரும்பாலும் நூலகங்களில் கிடைப்பதில்லை. அவர்கள் புத்தகங்கள் ஆர்டர் போட இருக்கும் விதிமுறைகளும், நடைமுறைகளும் சிக்கலானவை. கன்னிமாரா போன்ற பெரிய நூலகங்கள் வேறு வகை. அங்கு வசதியும் அதிகம். வருவோரும் வேறு வகைதான். படிக்க, தூங்க, பொழுது போக.... refer செய்ய... அங்கேயே நகல் எடுக்க...
  
சிறு வயதில் அரசுக் குடியிருப்பில் இருந்த நூலகத்தில் கழித்த நாட்களும் படித்த புத்தகங்களும் நினைவுக்கு வருகின்றன. பேசும் படம், பிலிமாலயா புத்தகங்களைக் கையில் வாங்குவதே கஷ்டம். எப்போது போனாலும் முன்னாலேயே ஒருவர் கையில் இருக்கும். அருகில் வேறு ஏதோ புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு 'தேவுடு' காத்துக் கொண்டே 'சார்...அங்கிள்...பிரதர்...' என்று ஏதோ ஒரு வகையில் விளித்து, 'நீங்க படிச்சிட்டு எனக்குத் தாங்க' என்று ரிசர்வ் செய்ய வேண்டும். அதிருஷ்டம் இருந்தால் கிடைக்கும். அல்லது அவர் அருகிலிருக்கும் இன்னொரு 'யூத்'தைக் காட்டி 'இவர் கேட்டிருக்கார்' என்று மூட் அவுட் செய்வார். அவர் நமக்கு 'சரி' என்று ஒப்புதல் தந்தாலுமே அப்புறம் யாராவது 'பெரிசுகள்' வந்து கேடடால் கேள்வி கேட்காமல் நம் உரிமை பறிக்கப் படும்!    
             
    பிடித்த நடிகர்கள் படங்கள், கடைசியில் ஒரு படக் கதை வசன வடிவில் என்று பேசும் படத்துக்கு ஒரு கவர்ச்சி அந்நாளில். இப்போது அந்தப் புத்தகம் வருகிறதா என்று கூடத் தெரியவில்லை! அபூர்வமாக சில காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்கும். இரண்டு மூன்று நாளில் காணாமல் போய் விடும்! இந்த 'படிச்சிட்டு அடுத்தது எனக்குக் குடுங்க' வேறு சில விஷயங்களுக்கும் உபயோகப் பட்டிருக்கிறது. அவர்களிடம் பேச வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே அவர்கள் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் பக்கத்தில் உட்கார்ந்து 'அடுத்து எனக்கு' என்று ரிசர்வ் செய்து விட்டு படித்து முடித்தாச்சா என்று பார்ப்பது போல அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கலாமே...!
  
இப்படிக் காத்திருக்கும்போதும், வேறு சில காரணங்களினாலும் அங்கு இருக்கும், நம் வீட்டில் வாங்காத புத்தகங்களைப் புரட்டத் தொடங்கி அப்புறம் 'நீங்க படிச்சிட்டு எனக்கு' ரிசர்வேஷன் வரிசையாக மற்ற புத்தகங்களுக்கும் வழக்கமானது. அது என்னமோ நாம் படிக்க நினைக்கும் புத்தகங்கள் தான் எல்லோருக்குமே படிக்கத் தோன்றும் போல...!!
    
இன்னும் கொஞ்ச நாள் கழித்து டேபிளில் இருக்கும் புத்தகங்களைத் தவிர 'ரேக்கில்' இருக்கும் புத்தகங்களையும் எடுத்தும் படிக்கலாம், உறுப்பினர் கார்ட் போட்டு வீட்டுக்கும் எடுத்துப் போகலாம் என்று தெரிந்தது. அப்படிப் படிக்கத் தொடங்கியதில்தான் மு. வ, வி சி காண்டேகர் தொடங்கி, கல்கி நா பா, விக்ரமன் ஜெயகாந்தன் என்று படிக்கத் தொடங்கியது நினைவில் உள்ளது. ஒரு பறவையின் பெயரிலா, பறவையைப் பற்றியா நினைவில்லை, காண்டேகரா மு வ வா என்றும் நினைவில்லை அந்தப் புத்தகத்தை நூலகத்தில் ஒளித்து வைத்து, அடையாளம் வைத்து அடையாளம் வைத்து வந்து படித்து முடித்தது நினைவுக்கு வருகிறது. வீட்டிலேயே அப்பா சேர்த்து வைத்திருந்த தமிழ்வாணன் முதல் தி.ஜ ரா வரையும், பண்பு, சுதந்தரத்தில் அமரர் சித்திரம், மருத்துவக் குறிப்புகள், என்று ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கினோம். எங்கள் வீட்டிலிருக்கும் 'பாரீசுக்குப் போ' என் நண்பன் ஒருவன் தஞ்சை மத்திய நூலகத்திலிருந்து அசத்தியது!

சாந்தப் பிள்ளை கேட் அருகில் இருந்த 'செய்தி நிலையம்', மற்றும் ரெயில்வே ஸ்டேஷன் போகும் வழியில் இருந்த 'கிளை நூலகம்' இரண்டிலும் பள்ளியின் மதிய உணவு இடைவேளைகளில் பொழுது போக்கும் இடங்களாயின. வீட்டுக்கருகில் கிடைக்காத அம்புலிமா, பாலமித்ரா போன்ற புத்தகங்களும் சில ஆங்கில, ஏன், அங்கு கிடைக்காத சில தமிழ் தினசரிகள் கூட இங்கு கிடைக்கும். வருகைப் பதிவேட்டில் முதலில் நல்ல பிள்ளையாக சொந்தப் பெயர் எழுதிக் கையெழுத்திட்டாலும் நாள் செல்லச் செல்ல லால்பகதூர் சாஸ்த்ரி, பக்ருதீன் அலி என்றெல்லாம் இறந்த தலைவர்களை வம்புக்கிழுப்பது வழக்கமானது! அங்கு இருக்கும் நூலகர் நாங்கள் போனாலே சற்று அதிக கவனத்துடன் கண்காணிப்பார்! வீட்டுக்கருகிலிருந்த நூலகத்தை விட பெரியவை இவை. மேலும் இந்த நூலகங்களின் கண்டிப்பான மௌன அமைதி சில வேளைகளில் ரசிக்கத் தகுந்தவை. சில வேளைகளில் அலுத்துப் போகும்!

விளையாட்டில் சூரப் புலி இல்லை என்பதால் மைதானத்தில் ஏற்படும் அவமரியாதை அசவுகரியங்களைக் குறைப்பதற்கும் நூலகம் இடமாகியது. புதிய புதிய புத்தகங்கள் அறிமுகமாகின. குங்குமம், இதயம் பேசுகிறது, தாய்,... எவ்வளவுதான் வீட்டில் வாங்குவார்கள்? வீட்டில் ஆரம்ப நாட்களில் குமுதம், கல்கண்டு, விகடன் மட்டும்தான். இந்தப் புத்தகங்களைப் படிக்க நூலகம் வருவது வழக்கமாயிற்று.

எங்கள் கடைசி மாமா தனது ஊரில் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்துவது கேள்விப்பட்டு என் அண்ணன் தன் நண்பனுடன் 'வசந்தம்' என்றொரு கையெழுத்துப் பிரதி தொடங்க, எனக்கு அதில் வாய்ப்பு மறுக்கப் பட்டதாலும், 'சொந்தப் பத்திரிக்கை' தொடங்கும் ஆசை வந்ததாலும் எண்ணற்ற ஆர்வலர்கள் போலவே நானும் 'தென்றல்' என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை தொடங்கினேன்! அண்ணன் வசந்தம் என்று பெயர் வைத்ததால் நான் தென்றல் என்று பெயர் சூட்டினேன். அப்புறம் நீண்ட நாள் கழித்து கண்ணதாசன் நடத்திய பத்திரிக்கை பெயரும் அதுதான் என்று தெரிந்தது. எவ்வளவு நண்பர்களைச் சேர்த்துக் கொள்ள முடியும்? வாய்ப்புக் கிடைக்காத இன்னொரு நண்பன் 'மலர்' என்ற பெயரில் ஒரு கை. பத்திரிக்கை தொடங்கினான். ஆக, எங்கள் குடியிருப்பே இலக்கிய ஆர்வலர்களால் நிரம்பி வழிந்த காலம்!!

இந்தக் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்க ஆள் வேண்டுமே.... கார்பன் பேப்பர் வைத்து பத்திரிகையில் வந்த ஓவியங்களின் அவுட்லைன் எடுத்து அதில் எங்கள் கைவண்ணம் கூட்டி, காட்டி, கார்பன் வைத்து நாலு வரைந்து அட்டையாக்கி... அப்புறம் ஜோக்குக்குப் படங்கள் சேர்க்கும் வேலையும் என்று அதையும் நாலு காபி எடுத்து.. கஷ்டமான வேலைங்க....பெரும்பாலும் முழுப் பரீட்சை விடுமுறையில்தான் சாத்தியம்! இப்படி நான்கு தயாராகும். ஒன்று ஆபீஸ் காபி!! பள்ளியில், குடியிருப்பில் சுற்றுக்கு என்று இரண்டு, ஒன்று நூலகத்தில். சுற்றுகளில் படிப்பவரிடம் கெஞ்சி, மிரட்டி என்று வாசகர் கடிதம் தேற்றி விடுவோம்! நூலகரை ஐஸ் வைத்து நூலகத்தில் போட்டு விட்டு படிப்போர் கருத்துக்குப் பதுங்கி நின்று காத்திருப்போம்! அப்புறம் மூன்று தயாரித்து, இரண்டாகி அப்புறம் நூலகக் காபி மட்டும் என்று வந்து.... நின்று போனது!
   
நூலகருக்கு ஆயிரம் அவசர வேலைகள் இருந்ததும், அவரைக் கண்காணிக்க என்று யாரும் வரமாட்டார்கள் என்பதும் வசதியாக போனதால், நானும் என் சகோதரனும் பல நாட்கள் நூலகராய், சம்பளமில்லாமல் பணியாற்றியதுண்டு. காலை நூலகம் மூடும் நேரம் வாரப் பத்திரிகைகளை இந்த செல்வாக்கில் வீட்டில் எடுத்து வந்து படித்து விட்டு, மாலை நூலகம் திறக்கும் முன்பு கொண்டு போட்டு விடுவோம்! நூலகச் சாவியே எங்களிடம்தான் இருக்கும். யாரும் ஒன்றும் சொன்னதில்லை. எங்களுக்கு அந்த அந்தஸ்துக் கொடுத்த பரமசிவம் எங்கே இருக்கிறாரோ இப்போது...! காலம் தாழ்த்திக் கொண்டுவரப் படும் பைண்டிங் புத்தகங்களை - அந்தக் கால எங்கள் க.கன்னிகள் - கொண்டு வரும்போது காட்டிய பந்தாக்கள்... புத்தகங்களில் சில பக்கங்களைக் கிழித்துப் பதுக்கியது, சில புத்தகங்களை பனியனுக்குள் பதுக்கிக் கடத்தியது.... இந்த வழக்கம் நாங்கள் 'நூலகராய்' இருந்த போது மற்றவர்களைக் கண்காணிக்க உதவியது!

இந்தக் காலத்தில் புத்தகங்கள் படிக்கும் பழக்கமே குறைந்து வருகிறது. பள்ளிகளிலேயே நூலகம் இருப்பதாக பல பள்ளிகளில் பணம் வாங்குகிறார்கள். சில பல பள்ளிகளில் வைத்துமிருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கால மாணவர்களுக்கு அவர்கள் படிப்பையும், வீட்டுப் பாடத்தையுமே முடிக்கவே நேரம் போதவில்லை. இதில் எங்கே புத்தகங்கள் படிக்கிறார்கள்? ஒழிந்த நேரத்துக்கு இருக்கவே இருக்கிறது டிவியும், கணினியும், வலையுலகமும், முகப் புத்தகமும்...

கணினியில் நிறையப் புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தாலும் கையில் புத்தகம் வைத்துப் படிக்கும் சுகம் கணினியில் படிப்பதில் வருவதில்லை.
                       

புதன், 21 செப்டம்பர், 2011

உள் பெட்டியிலிருந்து ... 9 2011

                       

தத்துப்பித்துவம்...


    
சிறுவயதில்

பென்சில் உபயோகித்த நாம்

இப்போது பேனா

உபயோகிக்கிறோம்...

சிறுவயதில்(ன்)

தவறுகளை

அழிப்பது எளிது...
----------------------------------------
                 
நம்பிக் கெட்டவர் எவரையா? 

ஒருவனை நம்பினால் விளைவு எதுவாயினும் கடைசி வரை நம்புங்கள். கடைசியில் ஒன்று, உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பான் அல்லது ஒரு நல்ல பாடம் கிடைக்கும்!

---------------------------------------

அறிவுடைமை
     
ஒரு பிசினஸ்மேன் தன்னுடைய மனைவிக்கு ஒரு விலையுயர்ந்த வைர அட்டிகையைப் பரிசாக அளித்தான். அவன் மனைவி அப்புறம் ஆறு மாதத்துக்கு அவனுடன் பேசவில்லை.

ஏன்?

அதுதானே ஒப்பந்தமே...!

------------------------------------------

நட்பின் கோபம்: அன்பின் முகவரி

இனி உன்னுடன் பேசவே மாட்டேன் என்று கோபமாகச் சொல்லிச் சென்ற நண்பன், அவ்வப்போது வந்து சொல்லி விட்டுப் போகிறான்: 

"இன்னும் கோபமாகத்தான் இருக்கிறேன்"

--------------------------------------

என்ன வித்தியாசம்? 

"உனக்கு நீச்சல் தெரியுமா?"

"தெரியாது"

"உன்னை விட நாய் தேவலாம். நாய் கூட நீந்தும்"
   
"சரி, உனக்கு நீச்சல் தெரியுமா?

"தெரியும்"

"உனக்கும் நாய்க்கும் என்ன வித்தியாசம்?"

-----------------------------------------------

ஐயோ பத்திகிச்சு ...!

காதலில் விழுந்த பெண், காதலனை தந்தைக்கு அறிமுகப் படுத்த எண்ணி, மூன்று பேரை அழைத்துச் சென்று தந்தையைச் சந்திக்க வைத்தாள். அவர்கள் சென்றதும் இதில் யாரை அவள் விரும்புகிறாள் என்று அவருக்குத் தெரியுமா என்று கேட்டாள். 


தந்தை சொன்னார்: 

"அந்த ரெண்டாவதா இருந்தானே அவன்தானே..."

ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த பெண் கேட்டாள் "எப்படி கரெக்டாக் கண்டு பிடிச்சீங்க...?"

"சிம்பிள்... மூன்று பேர்ல அவனைப் பார்த்தாத்தான் எனக்கு அதிகமா பத்திகிட்டு வந்தது.."
    
-------------------------------------------

இதெல்லாம் சகஜமப்பா...

புதிதாய்த் திருமணம் ஆன பெண் தன் அம்மாவிடம் தொலைபேசியில்,

"அம்மா... இன்னிக்கி எனக்கும் அவருக்கும் பயங்கர சண்டை ஆயிடிச்சிம்மா..."

"கண்மணி... புதுசா கல்யாணம் ஆனவங்க நடுல சண்டை சகஜம்தான் கண்ணம்மா... கவலைப் படாதே..."

"அது சரி, புரியுதும்மா...  பாடியை என்ன செய்ய...?"
    
---------------------------------------------
                          

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

ஜே கே - 20. சமூக சேவையும் தன்னை அறிதலும்.

                    
உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்த மனிதனே உண்மையில் புரட்சியாளன். உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட மனிதனோ அல்லது தன்னுடைய உண்மையான நிலையிலிருந்து தப்பிக்க விரும்பும், இதயத்தில் துயரம் நிறைந்த மனிதனோ புரட்சியாளன் அல்ல. தமக்கென்று பல உடைமைகளைக் கொண்டவனை இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த மனிதன் என்று நான் கூறவில்லை. உள்ளத்திலும், இதயத்திலும் மகிழ்ச்சியும், களிப்பும் நிறைந்த மனிதனே உண்மையில் சமய உணர்வுள்ள மனிதன். இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த இப்படிப்பட்ட சமய உணர்வுள்ள மனிதன் வாழும் முறையே சமூகத்திற்கு அவன் செய்யும் சேவையாகும். 

ஆனால் உலகில் உள்ள பல ஆயிரக்கணக்கான சமூக சேவகர்களைப் போல நீங்களும் மாறினால் உங்கள் இதயத்தில் களிப்பு இருக்காது. உங்களிடம் உள்ள பணத்தை ஏழை எளியோருக்கு தானமாக அளிக்கலாம், மற்றவர்களையும் அவர்களுடைய பணத்தையும் செல்வத்தையும் உங்களுடைய தூண்டுதலினால் ஏழை, எளியோருக்குத் தருமாறு வற்புறுத்தலாம். இந்த சமூகத்தில் பல பிரமிக்கத் தக்க, அற்புதமான சீர்திருத்தங்களை நீங்கள் கொண்டு வரலாம். ஆனால் உங்கள் இதயம் சாரமில்லாமல், வெறுமையாக இருக்கும் வரை, உங்கள் மனதில் கோட்பாடுகளும், அர்த்தமற்ற கருத்துகளும் நிறைந்திருக்கும்வரை, உங்கள் வாழ்வு மந்தமாகவும், தளர்ச்சியைடைந்தும், களிப்பில்லாமலும் இருக்கும். ஆகவே, நீங்கள் முதலில் உங்களை, அதாவது உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தத் 'தன்னை அறிதல்' என்பதிலிருந்து சரியான செயல் உங்களிடமிருந்து எழும்.   




                            

திங்கள், 19 செப்டம்பர், 2011

சி மு வா? சி பி யா?



அதெல்லாம் சரி, நாங்க கேக்கறதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 

இதில் உள்ள பெண்ணின் படம், பியூட்டி பார்லரில் நுழைவதற்கு முன் எடுக்கப்பட்டதா அல்லது வெளியே வரும்பொழுது எடுக்கப்பட்டதா? 

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். 




சனி, 17 செப்டம்பர், 2011

படிப்பது செய்தி... அடிப்பது அரட்டை...






நாகை மாவட்டம் சீர்காழியில் லுத்தரன் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவுக்கு தமிழ்ப்பாடம் எடுக்கும் முதுநிலைத் தமிழாசிரியர் ஒருவருக்கு சென்ற வருடம் திடீரென கண் பார்வை பறி போய் விட, மருத்துவச் சான்றிதழ் பெற்று அவரை வேலையை விட்டே தூக்கியதாம் பள்ளி நிர்வாகம். கோர்ட்டில் பாதிக்கப்பட்டவர் முறையிட, கோர்ட் தலையிட்டு பார்வை பறி போனதால் பயிற்றுவிக்கும் திறமை பறி போனதாக அர்த்தமில்லை, கடைசி வருடமும் அவர் திறமையில் தேர்ச்சி விகிதம் நன்றாகவே இருக்கிறது, மேலும் அரசு மாற்றுத் திறனாளிகளுக்குக் காட்டும் பரிவையும் மனதில் வைத்து வேலை நீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்து இருக்கிறது. ஒரு உதவியாளர் உதவியுடன் அவர் நன்றாகவே பாடம் நடத்துகிறாராம். இது செய்தி.

எனக்குத் தெரிந்த நண்பரின் பையனுக்குப் பிறவியிலிருந்தே கண் பார்வை கிடையாது. அவர் பெற்றோர்கள் கவனிப்பிலும் பரிவிலும் படித்து முன்னேறியவர் தான் படித்த பள்ளியிலேயே சில காலம் ஆசிரியராக இருந்தவர் (குரோம்பேட்டை சுந்தரவல்லி) தற்சமயம் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார். இந்தச் செய்தி படித்ததும் அவர் நினைவு வந்தது. அவர் தனக்குப் பார்வை தெரியாததை ஒரு குறையாகவே உணர்ந்ததில்லை. பார்ப்பவர்களையும் உணர வைத்ததில்லை.

=========================================
Brain Pacemaker Holds Promise for Untreatable Depression
பாகிஸ்தான் நோயாளிக்கு மூளையில் பேஸ் மக்கர்....செய்தி.

பாகிஸ்தான் என்று இல்லை உலக மக்கள் அனைவரின் இதயத்திலுமே பீஸ் (peace) மேக்கர் என்று பொருத்தப் படும்..?

=========================================


வெளிச்சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரத்தை விட இலவசப் பொருட்களின் தரம் மேம்பட்டு இருக்கிறதாம். செய்தி.மிக்சியில் 550 வாட்ஸ் மோட்டார், டேபிள் டாப் கிரைண்டரில் 150 வாட்ஸ் மோட்டாரும் பொருத்தப் பட்டுள்ளதாம். கிரைண்டரில் வெளிச்சந்தையில் 80 முதல் 120 வாட்ஸ் வரைதான் மோட்டார் பொருத்தப் பட்டிருக்குமாம். மேலும் வெளிச்சந்தை க்ரைண்டர்களில் 0.5% நிக்கல் இருக்க, இலவச க்ரைண்டர்களில் 4% நிக்கல் இருக்கிறதாம். செய்தி சொல்கிறது.


கூடவே மற்றொரு செய்தி பயனாளிகளுக்கு வழங்கப் பட்ட இலவச ஆடுகளில் நான்கு இறந்து விட்ட னவாம்.
==============================================


ரயில் விபத்து விசாரணை ஆரம்பம். டிரைவர் தவறா, சிக்னல் கோளாறா...?

பயணம் செய்தவர்களின் ஜாதகக் கோளாறு!
===============================================

star wars star, two suns, double planet
இரண்டு சூரியன்களைச் சுற்றும் கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.அந்த கிரகம் இரண்டு சூரியனையும் சுற்ற 229 நாள் எடுக்கிறதாம். இரண்டு சூரியன்களும் தன்னைத் தானேயும் சுற்றுவதால் 20 நாட்களுக்கு ஒருமுறை கிரகணம் வருகிறதாம். இரண்டு சூரியனும் ஒரே திசையில் இருப்பதால் வழக்கம் போல பகலிரவாம். தூரத்தைக் கேட்டால் ஸ்பெக்ட்ரம் ஞாபகம் வருகிறது! . 200 ஒளி வருடங்கள். அதாவது ஏறத்தாழ ஒன்பதரை லட்சம் கோடி ஒளி வருடங்களாம்.

=================================================

பத்மநாபசுவாமி கோவில் ஆறாவது அறையை இப்போது திறக்க வேண்டாம் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. தேவப்ப்ரச்னம் சொல்லிய இயற்கைக்கு மீறிய காரணங்களால் இல்லாமல், தேவையின்றி இப்போது திறக்க வேண்டாம் என்பதாலேயே இந்தத் தீர்ப்பு என்று சொல்லியுள்ளது நீதிமன்றம்.

=================================================

பைக் விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் பதினெட்டு வயது மகன் மரணமடைந்தது ஒரு சோகம்.
====================================================

இந்தியாவின் சுவர் என்று அழைக்கப் படும் ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவரின் அழகிய ஆட்டம் என்றும் நினைவில் நிற்கக் கூடியது.

==================================================






பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரத்துக்கும் இடமில்லை - பிரதமர்.

ஒவ்வொரு விபரீதமும் நடந்த பிறகு இந்த பதில் ஆட்டோ ஜெனேரெட் ஆகும் வண்ணம் செட் செய்து வைத்திருப்பார்கள் போலும்.

=============================================

பீகாரில் (என்று ஞாபகம்) போலீஸ் ஸ்டேஷன் எதிரே போராட்டம் நடத்திய பெண்களை போலீஸ்காரர்கள் துரத்தித் துரத்தி லத்தியால் அடித்துத் துவைத்ததை சில செய்திச் சேனல்களில் பார்க்க முடிந்தது. கொடுமை.

=============================
                       
படங்கள் உதவி : நன்றி கூகிள்.   
                    
                             

வியாழன், 15 செப்டம்பர், 2011

பாடல்கள் - பாடகர்கள் ஆராய்ச்சி - வெட்டி அரட்டை


                      
சந்திரபாபு அடிப்படையில் நடிகர். பாடல்களும் பாடுவார். ஒரு படத்தில் (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) ஒரு பாடலுக்கு சிவாஜி கணேசனுக்குக் குரல் கொடுத்திருப்பார்.

  
கமலஹாசன் நடிகர். பாடுவார். அவர் வேறு நடிகர்கள் இரண்டு பேருக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். (யார், யார் தெரியுமோ?)
    


இந்தக் காலத்தில் நிறைய பாடகர்கள் வந்து விட்டார்கள். பிரசன்னா,கார்த்திக், திப்பு, நரேஷ் ஐயர், ஆலாப் ராஜு (இந்தப் பெயர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா...இவர் பாடிய - எனக்குத் தெரிந்து - இரண்டு பாடல்களும் ஹிட்) இன்னும் என்னென்னவோ பெயர்களில்... எந்தப் பாடலை யார் பாடியது என்று கண்டு பிடிக்க முடிவதில்லை. ஹரிஹரன் விதிவிலக்கு. (அவரை 'இந்தக்கால' லிஸ்ட்டில் சேர்க்க முடியாது). பெண் பாடகிகள் கொஞ்சம் விதிவிலக்கு. ஸ்ரேயா கோஷல் குரலை எளிதாக அடையாளம் காண முடிகிறது. ஹரிணி கஷ்டம். பிரசாந்தினி, சங்கீதா  மோகன் என்றெல்லாம் பெயர் சொல்கிறார்கள். ஊ.... ஹூம்...!
  
முந்தைய கால கட்டங்களில் இந்தப் பாடல் mkt பாகவதர் பாடியது, இது பி யு சின்னப்பா பாடியது என்றோ டி எம் எஸ், எஸ் பி பி பாடியது என்றோ எளிதாகக் கண்டு பிடிக்கலாம். அப்போதும் கூட சில இரட்டைக் குரல்கள் உண்டு... டி எம் எஸ் க்கு போலியாக ஒரு கோவை சௌந்தரராஜன். மனோ பாடியதையும் எஸ் பி பி பாடியதையும் குழப்பிக் கொள்கிறவர்கள் உண்டு. எஸ் பி பிக்கும் மலேசியா வாசுதேவனுக்குமே வித்தியாசம் தெரியாமல் குழம்புபவர்கள் உண்டு. அடுத்த குழப்பம் கே ஜே யேசுதாஸ் - ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள். (எனக்குக் குழப்பம் இருந்ததில்லை!). இந்த இரட்டைக் குழப்பம் பெண் குரலில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன்!

   
மதுரை சோமுவும் பித்துக்குளி முருகதாசும் ஒரே ஒரு திரைப் பாடல்தான் பாடியிருக்கிறார்கள், தெய்வம் படத்தில்.   
ஜி ராமநாதன், கே வி மஹாதேவன் காலத்துக்குப் பிறகு வந்த இசை அமைப்பாளர்கள் எல்லோரும் ஒரு பாடலாவது பாடியிருக்கிறார்கள். மிகச்சில விதிவிலக்குகள்.  

   
தமிழ் பாடகர்கள் முழுநீள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். டி எம் எஸ், எஸ் பி பி, சீர்காழி கோவிந்தராஜன், மனோ.
     
சில பாடல்கள் முதலில் வரும் வரிகள் ஓரிரண்டு மாற்றப் பட்டு பின்னர் வேறு வரிகளுடன் பாடப் படுவதைக் கேட்டிருக்கிறீர்களா... கொஞ்ச நாள் முன்பு இந்தப் பதிவில் பகிர்ந்த நாளை நமதே பாடல், 'என்னை விட்டால் யாருமில்லை'பாடலையே எடுத்துக் கொள்வோம். சரணத்தில் ஓரிடத்தில் "ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற்போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு...அரச மரத்தின் இலைகளில் ஒன்று வந்து நின்றார்போல் ஒரு நினைப்பு" என்பது ஒரிஜினலாக பல வருடங்கள் இருந்த வரி. பின்னர் இந்த வரியில் மாற்றம் செய்யப் பட்டு அரசமரத்தின் இலை 'அழகர் மலையின் இலைகளில் ஒன்றா'க மாறியது!

'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா...' இது ஒரிஜினல் பாடல். இன்னும் சில கேசட்களில் கூட ஒரிஜினல் வடிவம் இருக்கலாம். பருவம் என்பதில் என்ன தவறு கண்டார்களோ... சில வருடங்களுக்குப் பிறகே லேட்டாக பருவம் என்பதை பார்வையாக மாற்றி விட்டார்கள்...! 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா....ராதா...' 
  

ஆனால் இதே பருவம் என்ற வரிகளைக் கொண்ட வேறு பல பாடல்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் மாற்றப் படவில்லை. மலர்கின்ற பருவத்திலே, பருவத்தின் வாசலிலே, கன்னிப் பருவத்திலே என்றெல்லாம் படங்களே வந்தன. இங்கெல்லாம் பார்வையை சப்ஸ்டிடியூட் செய்தால் எப்படி இருக்கும். பருவ காலம் என்றொரு படம். பழைய படம். அப்போதே வந்ததுதான். அதையும் மாற்ற வேண்டாமா...! அந்தப் படத்தில் மாதுரி (என்று ஞாபகம்) பாடிய இனிய பாடல் ஒன்று உண்டு. "வெள்ளி ரதங்கள் அழகு மேகம்.. செல்லும் வீதி சிவந்த வானம்... பாவை நெஞ்சின் இளைய ராகம் பாட வந்தது பருவ காலம்.." ரசிக்கக் கூடிய பாடல்.

'நான் ஆணையிட்டால்...' இது 'எங்க வீட்டுப் பிள்ளை' எம் ஜி ஆர் படப்பாடல். அதில் ஒரு வரி. "எதிர்காலம் வரும் என் கடமை வரும்.. இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்.." என்பது ஒரிஜினல். மாற்றப்பட்ட வரி 'இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்'
  

ஏன்? என்ன சாதித்தார்கள் இந்த வரிகளை மாற்றி? அதை விட சில வருடம் கழித்து மாற்றினாலும் குரலின் தன்மை, ஸ்ருதி மாறாமல் பாடகர்களை மாற்றிப் பாட வைத்து இந்த வரிகளை மட்டும் எப்படி மாற்றி சேர்க்க முடிந்தது?  
                    
பாடல் வரிகள் அல்லது வார்த்தைகள் மாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஒரு படத்தின் ஒரு பாடல் - இசைத்தட்டில் சூப்பரான பின்னணி இசை. ஆனால் படத்தில் கேட்கும்பொழுது, பாடலின் பின்னணி இசை மாற்றப்பட்டு,கலரை எடுத்துவிட்டு கரி பூசினாற்போல செய்யப்பட்டது. எந்தப் படம், என்ன பாடல்? (ஏன்?) யாருக்காவது தெரியுமா?