வியாழன், 30 செப்டம்பர், 2010

எந்திரன் - திரைத்துறை தீபாவளி!


அக்டோபர் ஒன்று....  'சிவாஜி'யின் பிறந்தநாள். அந்த நாளில், 'சிவாஜி' ராவ் நடித்த 'சிவாஜி' படத்தின் அடுத்த படமாகிய, 'எந்திரன்' திரைக்கு வருகின்றது! திரையுலகினர், தமிழக பொதுமக்களில் பெருஜனம், இங்கு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும், ஜப்பானிலும், இன்னும் வெளி நாட்டிலும் கூட 'அட, என்னதான் ஆகும்' என்று பார்த்துக் கொண்டிருக்கும் நாள்.

நாம் கொண்டாடாவிட்டாலும், பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு விழாவை கொண்டாடும்போது, நாம் ஆர்வமாக கவனிப்பதில்லையா...அது போல சிலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.  

லேசான, பலத்த, மிக பலத்த பொறாமையுடன் சிலர் நடக்கும் கூத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரெஹ்மான் போன்ற மூன்று பெரும்புள்ளிகளுடன் விளம்பரங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் கலக்கும் சன் பிக்சர்ஸ் இணைந்தால் பிரம்மாண்டத்துக்கும் ஆர்ப்பாட்டத்துக்கும் கேட்க வேண்டுமா என்ன?

சுஜாதாவின் கதை.  அவர் இருந்திருந்தால் என்னென்ன சொல்லியிருப்பாரோ? இன்னும் என்னென்ன அவர் பாணியில் மெருகேற்றியிருப்பாரோ? 

சல்மான்கான் (ஷாருக்?) நடிப்பதாக இருந்து, பின்னர் கமல் கைக்கு வந்து, முடிவாக ரஜினி நடித்திருக்கிறார். 

முதன் முதலாக விஞ்ஞானியாக நடிக்கும் ரஜினிக்கு முதல் முறை ஜோடி சேரும் ஐஸ்வர்யா சம்பளம், இந்திய திரையுலக கதாநாயகிகள் வரலாற்றில் முதல் முறை ஆறு கோடியாம். 

சென்னையில் மட்டும் நாற்பது திரை அரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், தமிழகம் முழுவதும் ஐநூறு அரங்குகளில் வெளியாவது சாதனை. அது முறியடிப்பது முந்தைய ரஜினி படமான சிவாஜியின் சாதனையை..!   

மும்பை ஆரோரா திரை அரங்கம் ஆறேழு நாட்களாய் திரையரங்கை மூடி வைத்து, இந்தப் படத்துக்கு என்று ஸ்பெஷலாகத் தயாராகிறதாம்.

ரஜினிக்கு ஜப்பான் ரசிகர்கள் ஏராளம் என்பது தெரிந்ததே! நேபாளிலிருந்து ஒரு ரசிகர் இவர் படம் வெளியாகும் முதல் நாளே பார்க்க என்று சென்னை வந்துள்ளாராம்! 

எந்திரன் பற்றி எழுதாத பத்திரிகைகள், ப்ளாக்ஸ்,  காட்டாத சேனல்கள் குறைவு.  அதிகமாக விலை போகக் கூடிய இப்போதைய பொதுப்போக்கு எந்திரன் பற்றிய செய்திகள். 

சன் பிக்சர்ஸ் படம் என்ற போதும் எல்லா சேனல்களிலும் பிட்டு பிட்டாய் டிரெயிலர்கள் காண்பிக்கப் படுகின்றன.  

டிரெயிலருக்கே டிரெயிலர்,  முன் பதிவுக்கு முன்னோட்டம், முன் பதிவை டிவியில் காண்பிப்பது என்று ஒன்றொன்றும் ஆர்ப்பாட்டமாகச் செய்வது இதன் பிரம்மாண்டத்தைப் பறை சாற்ற!

தமிழக அரசு இதன் வெளியிடு நாளுக்கு விடுமுறை விடாதது ஒன்றுதான் குறை!  (விடுமுறையும் வேறு வகையில் வந்துவிட்டதோ?) முன்பதிவு ஆரம்பித்த முதல் சில மணிநேரங்களிலேயே, முதல் மூன்று வாரங்களுக்கு முன்பதிவு முடிந்து விட்டதாக சேனல்கள் சொல்கின்றன.

கன்னியாகுமரியில் தொடங்கி அக்டோபர் ஒன்றாம் தேதி சென்னையில் முடியும் வண்ணம் எந்திரன் பற்றி ஒரு ரத யாத்திரை நடந்து வருவதை ஆங்கில சேனல் ஒன்று காட்டியது.  கூடவே அமிதாப் தன் 'அருமை நண்பர்' ரஜினி பற்றி சிலாகித்துச் சொல்வதையும், நடிகர்களின் கட்-அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்யும் தென் இந்தியக் காலாச்சாரம் பற்றி பேசியதையும் கேட்க முடிந்தது.

கீழே பசித்த புலி என்று பயந்து மரத்தில் ஏறினால், மரக் கிளையில் மலைப் பாம்பு, பயந்து பக்கத்தில் தண்ணீரில் குதிக்கலாம் என்றால் முதலை என்ற நிலையில் மேலே உள்ள தேன் கூட்டிலிருந்து கசிந்த ஒரு துளி தேனை நாக்கில் சுவைத்த மனிதன், 'ஆஹா! என்ன ருசி' என்று நினைத்தது போல பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே சிக்கித் தவிக்கும் மக்களுக்கு ...  
   

புதன், 29 செப்டம்பர், 2010

அதிசயக் காட்சியின் பின்னணி!

வலையாபதியின் பொறுமையை மேலும் சோதிக்காமல், அவர் அனுப்பிய முதல் படத்தை, இங்கே வெளியிட்டுவிடுகின்றோம். 
    
ஏற்கெனவே வலையாபதி குறிப்பிட்டிருந்தபடி, இரண்டாவது படம் (செப்டம்பர் 23 தேதி பதிவு)  இங்கே உள்ள இதே வியூவை, மூவி அமைப்பில் (அதாவது டிஜிடல் காமிராவில், செட் அப் பொத்தானை அமுக்கிக்கொண்டே வரும்பொழுது, ஒரு பிறைச் சந்திர வடிவமும் இரண்டு கூட்டல் குறிகளும் தெரிந்தபோது) கிளிக்கிய படம்தான். வலையாபதியின் பக்கத்தில் இருந்த ஒருவர் (mind's voice?)  அந்த அமைப்பு குறியீட்டைப் பார்த்துவிட்டு, 'வலையாபதி, முழுச் சந்திரனைப் படம் எடுக்க இதுதான் சரியான அமைப்பு. பிறைச் சந்திர வடிவம் + + என்று போட்டிருப்பதால், அப்படியே வைத்து, படத்தை எடு' என்று சொல்ல, அதை நம்பி வலையாபதி கிளிக்கிய படம் அது. 
   
இப்பொழுது அந்த சந்திர இழுப்பும் பக்கத்தில் உள்ள நட்சத்திர இழுப்பும் எவை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்! 

நட்சத்திர இழுப்பு போலத் தெரிவது, இலையில் காணப்படும் விளக்கு பிரதிபலிப்பு! 

நாங்கள் சொல்வதற்கு முன்பே அதிசயக் காட்சியின் மர்மத்தை சரியாக சொன்னவர்களுக்கு, எங்கள் பாராட்டுகள். 

(படங்கள் நன்றாக உள்ளன என்று பின்னூட்டத்தில் எல்லோரும் தெரிவித்துவிடுங்கள். இல்லையேல் வலையாபதி தனிப் பதிவு ஆரம்பித்து நம்மை படாத பாடு படுத்திவிடப்போகிறார்!)
       

செவ்வாய், 28 செப்டம்பர், 2010

ஹரியுடன் நான் 25-09-10

இங்கே கிளிக்குக: 


ஹரியுடன் நான் 25-09-10


மேலே இருப்பது செப்டம்பர் இருபத்தைந்தாம் தேதிய நிகழ்ச்சியின் சுட்டி.


பார்த்து, கேட்டு, ரசியுங்கள். 


அப்பாதுரை அவர்கள் கேட்ட, 'வான் நிலா, நிலா அல்ல' பாடலும் வருகின்றது. 

              

திங்கள், 27 செப்டம்பர், 2010

சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா?





சண்டிகார் : ஜலந்தர் கல்லூரியில் பணியாற்றி வரும் விரிவுரையாளர் ஒருவர், சிட்டுக் குருவிகளுக்காக கூடுகளை உருவாக்கி, வினியோகித்து வருகிறார்.

     


நகரங்கள் மட்டுமல்லாது ஊரகப் பகுதிகளிலும், தற்போது மொபைல்போன் கோபுரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  இதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு, சிட்டுக்குருவி, தேனீக்கள் உள்ளிட்ட உயிரினங்களை கடுமையாக பாதிக்கிறது. இதன் காரணமாக, சிட்டுக் குருவிகள் இனம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருப்பதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.       பஞ்சாப் மாநிலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,  கடந்த 10 ஆண்டுகளில், சிட்டுக் குருவிகள் 70 முதல் 80 சதவீதம் வரை அழிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.சிட்டுக் குருவிகளை பாதுகாக்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் களத்தில் குதித்துள்ளனர்.


  

சிட்டுக் குருவிகள், வயல்காட்டில் மட்டுமல்லாமல், வீடுகளிலும் கூடுகட்டி வாழ்பவை. தற்போது, விவசாய நிலங்கள் எல்லாம் வீட்டு மனைகளாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் உருவாகி  வருவதால், சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கும் இடமில்லாமல் போகின்றன. இதை கருத்தில் கொண்டு, சமூக ஆர்வலர்கள் சிட்டுக் குருவிகளுக்கு கூடுகளை உருவாக்கி வழங்கி வருகின்றனர். ஜலந்தரில், கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி வரும் சந்தீப் சாகால், மரத்தாலான சிட்டுக் குருவிகளின் கூடுகளை உருவாக்கி, பறவை ஆர்வலர்களுக்கு வழங்கி வருகிறார். இதுவரை 350 க்கும் மேற்பட்ட கூடுகளை செய்து, அவர் வழங்கியுள்ளார்.
  

இதுகுறித்து, அவர் கூறியதாவது: பஞ்சாபில், மொபைல்போன் டவர்களால் சிட்டுக்குருவி இனம் தற்போது, அழிவின் விளிம்புக்குச் சென்று கொண்டிருக்கிறது. இது தவிர, தற்போது, விவசாயத்தில், பூச்சிக்கொல்லி உரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை உண்ணும் பறவைகளும் அழிகின்றன. மேலும், பறவைகளுக்கு இயற்கையான வசிப்பிடங்கள் கிடைப்பதும் வெகுவாக குறைந்து வருகிறது.எனவே, சிட்டுக் குருவிகளுக்காக, மரத்தாலான  கூடுகளை  நானே செய்து, பறவையின  ஆர்வலர்களுக்கு அளித்து வருகின்றேன்.  இதை வாங்கி, வீடுகளிலோ, தோட்டங்களிலோ  வைக்கும் போது, சிட்டுக்குருவிகள் வந்து அதில் தங்கும். அவற்றிற்கு பாதுகாப்பான இருப்பிடம் கிடைக்கும்.இதை நானே செய்ய கற்றுக்கொண்டு, வாரத்திற்கு 10 கூடுகள் வரை செய்து தருகிறேன்.மேலும், சிட்டுக் குருவிகள் அழிவு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு சந்தீப் சாகால் கூறினார். 

(நன்றி - தினமலர் 27 -9-2010)    





How to build a bird box for house sparrows

Where have all the sparrows gone? It's hard to imagine that this once common British bird is in serious decline in some parts of the country, particularly in London. Nationally there has been a 50% fall in sparrow numbers since 1979.

Sparrows often nest under the eaves of houses but many modern houses are not 'sparrow friendly'. This bird box will help reverse the decline.     
Sparrows are gregarious birds. This home made nest box uses 12mm exterior plywood and will accommodate up to three breeding pairs of house sparrows.


    
A cutting plan can be found and printed by clicking here. Picture 1, above, shows what looks basically like a book rack, with 3 separate compartments. A roof overhang at the sides and front (picture 2) helps to help keep the interior dry. The small batten part way up the side gives the young birds a chance for a peek at the outside world before making that all important first flight. Waterproof wood glue and number 4 brass screws were used to secure the panels. The front is fixed with screws only, to enable the box to be cleaned out at the end of the season.

The 32 mm holes accommodate house sparrows, tree sparrows and nuthatches. Keep the hole near the roof to deter predators and drill a couple of small holes in the base of each compartment to keep the nest dry. Water-based wood stain can be used to enhance and protect the nest box, but on the outside of the box only. Try also to keep any preservative away from the entrance hole. Fenceguard and Sadolin Classic are recommended by the manufacturers as being suitable products. Cuprinol TimberCare (for use on rough sawn timber) is also safe to birds when dry.

Ideally fasten the box close to the  eaves of the house, as in the     picture on the right. This would be the birds' natural choice of location. Try and use a direction between north and east to avoid strong sunlight. This box was fixed on 12th January 2004. It was not used by house sparrows, but great tits decided to nest  in the centre section!  
  

Link :1)  சிட்டு வீடு  

சனி, 25 செப்டம்பர், 2010

ஹரியுடன் நான்...NO HURRY!!

ஒரு விஷயத்தை எதிர்பார்ப்பு ஏதுமின்றி சாதாரணமாக அணுகும்போது சிறிய விஷயம் கூட நன்றாக இருக்கிறது. எதிர்பார்ப்புடன் அணுகும்போது ஏமாற்றம் வருவதுண்டு. எம் எஸ் வி கேபி பெயர்கள் பார்த்து முதல் நாள் பார்த்த நிகழ்ச்சி முதல் ரகம். இரண்டாம் நாள் எதிர் பார்ப்பு ஓவராகி விட்டதோ என்பது போல சிறு ஏமாற்றம். மனதைப் பொறுத்ததுதானோ...!

அதே போல இந்த இரண்டாம் நாள் பதிவும் ஏமாற்றம் தந்து விடுமோ என்னமோ..? ஆயிரக் கணக்கான ரசிகர்கள் (ஒரு பதிவர் கமெண்ட் போட்டால் அது ஐநூறு ரசிகர்களுக்கு சமம்...!! அநன்யா, Chitra, கீதா சந்தானம் மூன்று பேர் சேர்த்தா ஆயிரம் தாண்டாதா என்ன?!!) பதிவுல ரெண்டாம் நாள் மூணாம் நாள் நிகழ்ச்சியையும் கவர் பண்ணிடுங்களேன் என்று சொன்னதால அதைப் பற்றி இன்றும் எழுதுகிறோம்... (பதிவுத் தலைப்புக்கு சான்ஸ் தந்ததற்கு நன்றி சொல்வதை விட்டு விட்டு ஏதோ போனால் போகிறது என்று எழுதுவது போல அலட்டலைப் பாரு என்கிறீர்களா)
இனி இரண்டாம் நாள் நடந்தது பற்றி பகிர்வுகள்... (டிவியில், மற்றும் யூ குழாயில் பார்க்கிறோமே இது எதற்கு என்கிறீர்களா...பார்க்கப் பொறுமை மற்றும் நேரம் இல்லாதவர்களுக்குதான்...)

ரவி ஷங்கர் பாடியது யேசுதாஸ் பாடிய அவள் ஒரு தொடர்கதை படத்தின் "தெய்வம் தந்த வீடு" பாடல். எஸ் பி பி தான் பாடிய பாடல்களையே கூட தானே மேடையில் பாடும் போது எக்ஸ்ட்ரா சங்கதிகள் போடுகிறேன் பேர்வழி என்று ஏதேதோ மாதிரி எல்லாம் இழுத்துப் பாடுவார். ஒரிஜினலை ரசித்த நம் காதுகளுக்கு அது ஒரு மாதிரி இருக்கும். அது போல இவர் இந்தப் பாடலில் சில இடங்களை இஷ்டத்துக்கு வளைத்துக் கொண்டார். முதல் நாள் பாடிய அனைவருமே நன்றாகப் பாடினார்கள். இவர் சற்று...

அவ்வப் போது ஹரிஹரன் எம் எஸ் வீயை நாற்காலியில் சுழன்று திரும்பிப் பார்த்துக் கொள்வார் அவர் எப்படி ரசிக்கிறார் என்று...

இந்தப் பாடலைப் பற்றி கேபி, யேசுதாஸ் ஆரம்பக் காலங்களில் பாடிய பாடல் என்றும் எம் எஸ் வி 'இவர் நல்லாப் பாடுவார் இவரைப் பாட வைக்கிறேன்' என்று சொன்னதாகவும், பின்னாளில் யேசுதாஸ் எங்கு கேபியைப் பார்த்தாலும் இந்தப் பாடல் தன் இசை வாழ்வில் ஒரு திருப்புமுனை என்று சொல்வார் என்றும் சொன்னார். எம் எஸ் வி இதை சோதனையான பாடல், கேபி ரொம்ப சோதித்தார் என்றார். ஹரிஹரன் பாட்டுல பிடிப்பு இல்லாமல் பாடியதாக விமர்சனம் செய்து குரலை எறியச் சொன்னார்!!! ( Voice throw பண்ணி பாடணும்!)

அடுத்து கார்த்திக் பாடிய சிவ சம்போ பாடலும் சுமார் ரகம்தான் என்றாலும் எம் எஸ் வி சொல்லும்போது தான் பாடியதற்கு முன் இவர் பாடியதைக் கேட்டிருந்தால் இவரையே பாடச் சொல்லியிருப்பேன் என்று சொன்னதற்கு கார்த்திக் கீழே தரையைத் தொட்டு வணங்கி நன்றி சொன்னார். கேபி சொல்லும்போது ஒவ்வொரு பாடலும் இசைவடிவம் பெற பல நாட்கள், ஏன் மாதங்கள் கூட ஆகும்போது இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் ஒரு வாரத்தில் போட்டதாகச் சொன்னார். அபூர்வ ராகங்கள் கூட ஒரு இசைப் படம் என்றாலும் வெஸ்டர்ன் ஸ்டைலில் ஒரு ம்யுசிகல் படம் எடுக்க நினைத்து எடுத்த படம், என்றும், கமலுக்கு எஸ் பி பி குரல் என்றால் ரஜினிக்கு எம் எஸ் வி குரல் நன்றாகவே பொருந்திப் போனதாகச் சொன்னார்.இதற்குதான் This is not my film...it is your film visu என்றார்.

எம் எஸ் வி சுவாரஸ்யத் தகவல்கள் சொன்னார். சில பழைய மெட்டுகளின் தழுவல்களில் பாடல்கள் வேண்டுமென டைரக்டர் கேட்டாராம். எங்கேயும் எப்போதும் பாடலை அதே ராகத்தில் "கத்தாழைக் காட்டுக்குள்ள விறகொடிக்கப் போனாளாம்" என்ற நாட்டுப் புறப் பாடல் சாயலில் அமைத்ததையும், சம்போ சிவ சம்போ பாடலை மலையாளப் பாடல் ஒன்றின் சாயலில் அமைத்ததையும் சொன்னார். இது மாதிரி தழுவி எடுக்கும் பாடல்கள் பற்றி இளையராஜாவும் அவரும் அடிக்கடி பேசிக் கொள்வார்களாம்.

நேற்று முழுவதும் பேசாத சரத்தும், ஜேம்ஸ் வசந்த்தும் இன்று பேசினார்கள். ஒரு இசை மேதையின், இயக்குன இமயத்தின் அருகில் ஒரே வரிசையில் அமர நேர்ந்த பெருமையை மிகவும் சிலாகித்துப் பேசினார்கள். ஜேம்ஸ் முப்பது வருடங்களுக்கு முன் இசையமைக்கப் பட்ட பாடல் இன்றும் கல்லூரிகளில் பாடப் படுவதின் ஆச்சரியத்தைப் பேசினார். சரத்தும் ஆமோதித்தார். எம் எஸ் வி இசை கேரளாவிலும் பெரிய ஹிட் என்றும், அவர் இசையில் உயிர், soul, உண்மை இருக்கிறது என்றார். அவர் அருகில் அமர்ந்துள்ள பெருமை, போதை மயக்கமாய் இருக்கிறது என்றார்.
அடுத்த வந்த செண்பகராஜ் 'ராகங்கள் பதினாறு' பாடலை நன்றாகவே பாடினார். நமக்குப் பிடித்தால் ஹரிஹரனுக்கு பிடிக்கவில்லையே. ஆரம்ப ஆலாபனையில் தப்பு செய்து விட்டதாகச் சொன்னார். காலப்ப்ரமாணம் என்ன என்று கேட்டார். பிராக்டீஸ் செய்யும்போது ஸ்லோ வாகச் செய்யச் சொன்னார். அப்போதுதான் 'சங்கதிகள்' சரியாக வரும் என்றார்!
எம் எஸ் வி ஏதோ மெட்டு சுமாராப் போட்டேன் அவ்வளவுதான் என்னால் முடிந்தது..என்றார் சிறிய சிரிப்புடன்.

கேபி ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் விசு, இது மிகவும் மென்மையான பாடல், மறக்க முடியாதது என்றார்.

ஜேம்ஸ் வசந்த் எம் எஸ் வீயிடம் இது மாதிரி பாடல்களுக்கு ட்யூன் போட்ட அனுபவத்தை கேட்டார்(இந்தப் பாடலில் வரும் 'சங்கதிகள்' நீங்களே சொல்லிக் கொடுத்து பாடகர் பாடியதா, அவரின் சொந்தக் கற்பனையா என்று). எம் எஸ் வி 'ட்யூன் போட்டவுடன் மறந்துடணும், அப்போதுதான் அதன் சாயல் மற்ற பாடல்களில் தெரியாது என்றார். மற்றபடி பாடலைப் பொறுத்து பாடகரை தெரிவு செய்வார் என்று சொன்னார்.

அடுத்து ஹரிணி பாடிய அனுபவி ராஜா அனுபவி பாடலான 'முத்துக் குளிக்க வாரீகளா' பாடல். நன்றாகப் பாடினார் என்றாலும் நாட்டுப்புறப் பாடல் போன்ற ஸ்லேங் என்பதால் ஒரு மாதிரி வாயை வைத்து உச்சரித்தார் என்று பட்டது. கிட்டத்தட்ட அதையே ஹரிஹரனும் சொன்னார். கேபி தூத்துக் குடி பாஷையில், திருநெல்வேலி ஸ்லேங்கில் பாடல் அமைய வேண்டும் என்று விரும்பியதைச் சொன்னார். மெஹ்மூத் இந்தப் பாடலை ஹிந்தியில் எடுக்க விரும்பி ஒரிஜினலை மரியாதை செய்யும் விதமாக தமிழ் வரிகளையே ஹிந்திப் பாடலின் வரிகளாக அமைத்ததைச் சொன்னார். மேலும் இந்தப் படம் தான் அவரும் எம் எஸ் வீயும் இணைந்த முதல் படம் என்றார்.

எம் எஸ் வி, ஆர் டி பர்மன் இந்தப் பாடலைப் பாராட்டியதையும், அந்த நேரம் உடல் நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருந்த எம் ஜி ஆர் 'என்ன செய்கீறீர்கள்' என்று தொலைபேசி, விஷயம் கேள்விப் பட்டு பாடலைக் கேட்க விரும்புவதாகச் சொல்லி, கேட்டு, பாராட்டியதைச் சொன்னார்.

இன்றைய நிகழ்ச்சியின் கடைசிப் பாடலாக வந்தது பார்க்கின்ற வகையில் கவிதையாக வந்த பார்கவி பாடிய அவள் ஒரு தொடர்கதை பாடல் 'கண்ணிலே என்ன உண்டு கண்கள் தானறியும்' பாடல். எல்லோரையும் போலவே எனக்கும் மிகவும் பிடித்த பாடல். நன்றாகவே பாடினார். ஹரிஹரன் சரணத்தில் தவறு செய்ததாய் சொன்னார். கேபி சொல்லும்போது பொதுவாகவே எல்லா பாடல்களும் தனக்குப் பிடித்ததாகச் சொன்னார். குறைகளை நிபுணர்கள்தான் சொல்ல வேண்டும் என்றார். இயக்குனர் வசந்த்துடன் கலந்துரையாடி கோல்டன் பீச் கட்ட ஆரம்பிக்கப் பட்ட காலத்தில் எடுத்ததாகவும், முதன்முறை அங்கு எடுக்கப் பட்ட காட்சிகள் என்றும் சொன்னார். பல நடிகர்களை தான் முதன்முறை நடிக்க வைத்தது போல கோல்டன் பீச்சையும் தான்தான் முதலில் உபயோகப் படுத்தியதாகச் சொன்னது ரசனை. எம் எஸ் வி பேசும்போது கவிஞர் எப்போதும் கேட்கும் 'சப்தத்துக்கா சந்தத்துக்கா' கேள்வி பற்றி சொன்னார். இந்தப் பாடல் வரிகளாய் எழுதப் பட்டு பின்னர் அதற்கேற்ப இசை வடிவம் கிடைத்ததாகச் சொன்னார்.

பொதுவாக,

பாடல்கள் பாடப் படும்போது பாலச்சந்தர் லேசான திறந்த வாயுடன் கவனித்து ரசிப்பது ரசனை. அவர் பாடல்களை யார் பாடினாலும் எம் எஸ் வி பாடுவது போலவே கேட்கும் என்பதால், குறை சொல்லத் தோன்றாமல் ரசிப்பதாகச் சொன்னார். அவள் ஒரு தொடர்கதை தனது மாஸ்டர் பீஸில் ஒன்று என்று சொல்லி விட்டு மற்றவர்கள் அப்படிச் சொல்வார்கள் என்றார்.

பின்னணி இசை ஒலிக்கும்போதும் சரி, பாடும் போதும் சரி எம் எஸ் வி தலையை ஆட்டிக் கொண்டே ரசிப்பது ரசனை.
பாடப் படும் பாடல்கள் யார் எப்படிப் பாடினாலும் அது பெரிதில்லை. ஒரிஜினலை மனதில் நினைவு படுத்துவது தான் பெரிய விஷயம். இதில் சாய்ராம், அப்பாதுரை கருத்து ஆமோதிக்கப் படுகிறது. (சாய்ராம்.. எங்கள் ப்ளாக்குக்கு வெளியிலிருந்து தரும் ஆதரவை விலககிக் கொள்வதாகச் சொன்னது ஏனென்று தெரியவில்லை) எம் எஸ் வி பாலச்சந்தர் காம்பினேஷன் தான் முக்கியம். கேபி யேசுதாஸ் எஸ் பி பி பாடுவதை விட எம் எஸ் வி பாடுவதுதான் நன்றாக இருப்பதாகக் கூறுவதை அவர் ரசனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். "நீ பாடுவது போல அவர்கள் பாடலையே விசு.." என்பாராம்.

ஹேமா சொல்வது போல நான் இந்த நிகழ்ச்சியை தவறாது பார்ப்பதில்லை என்பதற்கு பின்னோக்கி சொன்ன காரணமும் ஒன்று. சும்மா கடினமாக நடுவர்கள் பேசுவது பார்க்கும் நமக்கு சங்கடமாக இருப்பது போலத் தோன்றும். இதை விட ஆசியா நெட்டில் ஐடியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரம்மாதமாய் இருப்பதாய் தோன்றுகிறது. மிகத் திறமையான பாடகர்கள். உஷா உதூப், சரத் என்ற நடுவர்கள்... Hindhi Zee டிவியில் வரும் ச ரி க ம ப என்ற நிகழ்ச்சியும், ஸ்டார் பிளஸ் (?) டிவியில் வரும் சோட்டே உஸ்தாத் நிகழ்ச்சிகள் கூட ரசனையாக உள்ளன..

இந்த நிகழ்ச்சிக்கு இடையில் ஆசியா நெட்டில் பார்த்தபோது உஷா உதூப் உற்சாகமாக ஏதோ "பாப்பா பாப்பா சூ சூ சூ.... ஹவ் டூ யூ டூ" என்று பாட, ஸ்வேதா உட்பட்ட அனைவரும் ஆடிக் கொண்டிருப்பது பார்க்க முடிந்தது.

ஹரியுடன் நான் 24-09-10

இங்கே கிளிக்குங்க! 
ஹரியுடன் நான் 24-09-10

முதல் நாள் (23-09-10) இருந்த எக்சைட்மெண்ட் மிஸ்ஸிங்? 


பார்த்து, கேட்டு, விமரிசனம் எழுதுங்கள்!  
  

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

ஹரியுடன் நான், கேபி, எம் எஸ் வி..

ஜெயா டிவி. 'ஹரியுடன் நான்' இசை நிகழ்ச்சி. இது, நான் அவ்வப்போது விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. ஹரிஹரன், ஜேம்ஸ் வசந்த், சரத் மூவரும் நடுவர்களாய் பாடுபவர்களைக் கிழித்துத் தோரணம் கட்டி விமர்சனம் செய்து, அவர்களைத் திரும்பத் திரும்ப 'க'ல தப்பு, 'ப' வை திரும்பப் பாடு, என்றெல்லாம் படுத்தி, இப்போது கிட்டத் தட்ட கடைசி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கையில், நல்ல பாடகர்கள் பாடிக் கொண்டிருக்கிறார்கள்..  இதில் ஜெயிக்கப் போகும் நபர் ஹரிஹரனுடன் பாடப் போவதாகத் தெரிகிறது.  

சில வாரங்களுக்கு முன் ஒரு வாலிபர் மழை பற்றிய பாடல் ஒன்றைப் பாட நமக்கு 'நல்லாதானே இருக்கு' என்று தோன்றிய பாடல், நடுவர்களால் கிழிக்கப் பட்டு, அவரை பாதியிலேயே திருப்பி அனுப்பி...  கடைசியில் அந்தப் பாடல் சரத் கம்போஸ் செய்தது என்றும், அந்தப் பாடலை சரத் பாட, அந்தப் பாடலில் மயங்கி அது என்ன படம், என்ன பாடல் என்று நெட்டில் தேடி, தோல்விதான் கிட்டியது.  

இப்போது சொல்ல வருவது, இந்த வாரம் (வியாழன், வெள்ளி, சனி இந்திய நேரப் படி இரவு ஒன்பது மணி) பாலச்சந்தர் எம் எஸ் வி கூட்டணியில் உருவான பாடல்களைப் பாட, நடுவர்கள் லிஸ்ட்டில் அவர்கள் இருவரும் வந்து அமர்ந்திருந்தார்கள். 

யூ குழாய் சுட்டி (இங்கே கிளிக்குக!)ஹரியுடன் நான் 23-09-10

இளமை இயக்குனர், புதுமை இயக்குனர் என்று அறியப் பட்ட கே பி யை க்ளோஸ் அப்பில் காட்டிய போது, அவர் கைச் சுருக்கங்கள் அவர் வயதைக் கூறின. அவரிடம் தான் நடிக்க முடியாத குறையை ஆதி சொன்ன போது அவர் இயக்கத்தில் (இந்த நிகழ்ச்சியில்) தான் நடிப்பதை நினைத்து ஆறுதலடையச் சொன்னவர் "பார்ப்போம்... I am only 80.." என்றார். 


உடன் உட்கார்ந்திருந்த எம் எஸ் வி யின் முதுமை கண்களுக்குத் தெரிந்தாலும் அவர் பாடல்களின் கட்டுக் குலையாத இளமை, நிகழ்ச்சியில் பாடப் பட்ட பாடல்களில் தெரிந்தது.   இருவருமே கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்ட நிலையிலேயே அமர்ந்திருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்க்காத ரசிகர்களுக்கு நான் பார்த்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

சரண்யா என்ற பெண் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' பாடலைப் பாடினார்.  சிறப்பு விருந்தினர் இயக்குனர் வசந்த் இந்தப் பாடலில்தான் 'ஸ்லோ மோஷன்' காட்சிகள் முதன்முதலில் தமிழில் அமைக்கப் பட்டதாய், தான் பின்னர் தெரிந்து கொண்டதைக் கூறினார்.  கே பி குறுக்கிட்டு 'ரிவர்ஸ்' காட்சியும் இதில்தான் முதல் என்று நினைவுக்கு வருவதாய்க் கூறினார்.

வெங்கடேஷ் என்பவர் 'அங்கும் இங்கும் பாதை உண்டு' பாடலைப் பாடினார். வசந்த், டிவி இல்லாத அந்தக் காலத்தில் ரேடியோவில் வந்த விளம்பரம், "கமல் அவர்கள், சுஜாதா அவர்கள், ரஜினி அவர்கள், எம் எஸ் வி அவர்கள் கே பியின் அவர்கள்" என்று சொல்லும் விளம்பரம் காதில் ஒலிப்பதாய்க் கூறினார். எம் எஸ் வி அந்தப் பாடல் ஒரு விழா மேடையில் கண்ணதாசனையும் எம் எஸ் வீயையும் ஒரு சேரப் பார்த்த கே பி தனக்கு அவசரமாய் மறு நாளுக்கு ஒரு பாடல் தேவைப் படுவதாகவும், இவர்களை சேர்ந்து பிடிக்க சிரமம் என்பதால் ரசிகர்களைப் பொறுமையாக இருக்கச் சொல்லி அங்கேயே சிச்சுவேஷன் சொல்லி கண்ணதாசன் எழுத, எம் எஸ் வி ட்யூன் சேர்க்க மறு நாள் ஒளிப் பதிவானதாம்.

அனுஷ் என்பவர் 'கனாக் காணும் கண்கள் மெல்ல' பாடல் பாட, ஹரிஹரன் அதில் இரு குறைகள் கண்டு பிடித்தார்!  கே பி இந்தப் பாடல் காலத்தால் அழியாதது, கணவன் மனைவி எல்லோரும் மிகவும் ரசிக்கும் பாடல் என்றார். எம் எஸ் வி, இயக்குனர் அவரை இந்தப் பாடலின் போதும் கசரத் வாங்கியதை நினைவு கூர்ந்தார். பாடலின் நடுவே வசனங்கள் ஸ்ருதியுடன் சேர்ந்து வரவேண்டும் என்று எதிர் பார்ப்பதாகக் கூற,  வேறு யாரையாவது பாட வைக்கலாம் என்று சொன்ன போது சரிதாவே நல்ல குரல் வளம் கொண்டவர் என்று சொல்லினவரை பாட வைத்ததைச் சொன்னார்.

நிரஞ்சன் என்பவர் 'இலக்கணம் மாறுதோ' பாடலை பாடினார். பாடல்கள் அதிகம் இல்லை, பொறுத்துக் கொள்ளச் சொன்னாராம் கேபி எம் எஸ் வீயிடம்.  அதனால்தான்  இரு பாடல்களை இருபது பாடல்களுக்கு சமமாய் போட்டுத் தந்தாராம் எம் எஸ் வி. நடுவே இந்தப் பாடல் 'சாரங்கா' ராகம் பேஸ் தானே என்றார் ஹரிஹரன்.  அவர் ஹிந்துஸ்தானி ராகம் ஒன்றையும் இழுத்துக் காட்டினார்.  எம் எஸ் வி சொன்னார், "இந்த ராகம், அந்த ராகத்தில் என்றெல்லாம் யோசித்து எந்தப் பாடலும் கம்போஸ் செய்ததில்லை.  அவ்வப்போது மனதில் வரும் ட்யூன்தான் .." என்றார்.

லஷ்மி என்ற பெண் 'ஏழு ஸ்வரங்களுக்குள்' பாடல் பாடினார்.  கே பி சிச்சுவேஷன் சொன்னதுமே பல்லவி தயாராகி விட்டதாம்.  அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் கீழே ஷூட்டிங் முடித்து வந்த கேபிக்கு இருபத்தைந்து சரணங்கள் பாடிக் காட்டப் பட்டதாம்.  நேஷனல் அவார்ட் வாங்கியது அந்தப் பாடல் என்று சொல்லி அந்தப் பாடல் கேட்கும் போது கண்கள் கலங்கி விடும் என்றார் கேபி. 

இன்றும் நாளையும் தொடரப் போகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்க எல்லோரையும், குறிப்பாக அப்பாதுரை, சாய்ராம் கோபாலன், மீனாக்ஷி எல்லோரையும் அழைக்கிறேன்.  நேரமிருந்தால் பார்த்து மகிழுங்கள்!

கேபி, எம் எஸ் வீயை 'விசு' என்றுதான் அழைப்பாராம்.

'என்னை அழ விடுகிறீர்கள்' என்றார், ஒவ்வொரு பாடலும் கேட்டவுடன்.

வரவிருக்கும் நிகழ்ச்சியாக என்று சொல்லி 'நினைத்தாலே இனிக்கும்' பாடலை ஒருவர் பாடிய உடன், இது என் படம் அல்ல, உங்கள் படம் என்று கேபி, எம் எஸ் வீயிடம் சொன்னார்.  
   

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

வாசல் தேடி ..

நம்முடைய வாசல் தேடி வருகின்ற விற்பனையாளர்களை நம்ப முடிகின்றதா? doubt #?

வாசல் தேடி வந்து விற்பனை செய்யப்படும் பொருட்களின்  தரம் பெரும்பாலும் மிகவும் தாழ்ந்ததாகவே இருக்கின்றது. இது அனுபவபூர்வமான உண்மை. 

சென்னையில் குப்பை கொட்டிக்கொண்டிருந்த நாட்களில், ஏமாந்த அனுபவங்கள் சுருக்கமாக இதோ: 

1) நினைவிருக்கும் முதல் நிகழ்வு: குரோம்பேட்டையில் ராதா நகரில், (குரோம்பேட்டைக் குறும்பனின் வீட்டுக்கு அருகாமையில் ...?) குடியிருந்த காலத்தில், மூன்று இளைஞர்கள், UNION TRADERS என்று அச்சிடப்பட்ட அட்டைகள் நிறைய கொண்டுவந்து, ஒரு அட்டை இலவசமாக (!) வாங்கிக்கொள்ளுங்கள், உங்களுக்கு எந்தப் பொருள் வேண்டுமோ அதற்குத் தகுந்தாற்போல், மாதா மாதம் ஒரு தொகையை நாங்களே வந்து வாங்கிக்கொண்டு, இந்த அட்டையில் பதிந்து, கையெழுத்து போட்டு செல்வோம் என்றனர். தேவையான பணம் சேர்ந்தவுடன், அல்லது குலுக்கல் முறையில் உங்கள் எண்ணுக்கு பரிசு விழும் அதிருஷ்டமிருந்தால் அதற்கு முன்பே பொருள் உங்கள் வீடு தேடி வரும் என்றார்கள். அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எந்தெந்தப் பொருட்களுக்காக எவ்வளவு அமவுண்ட் கட்டியுள்ளார்கள் என்றும் புள்ளிவிவரங்களை அனாயாசமாக அள்ளி வீசினார்கள். நான் அதிகம் ஆசைப் படாமல், ஒரு கைக்கடிகாரம் வாங்கிக் கொள்ளலாம் என்ற யோசனையோடு, மாதம் இருபது ரூபாய் கட்டுவதற்கு அரை மனதோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். முதல் தவணை இருபது ரூபாயும் கொடுத்தேன். நல்ல வேளை - அப்போது மாருதி 800 கார் எல்லாம் விற்பனைக்கு வரவில்லை. இல்லையேல் அதற்கு கூட அவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய், எட்டு வருடங்களுக்கு பணம் கட்டினால் போதும் என்று கூறியிருப்பார்கள். 

அப்புறம் என்ன? அந்த நண்பர்களை, அதற்குப் பிறகு எங்கேயும் காணவில்லை. மூன்று மாதங்கள் கழித்து, அந்த அட்டையில் காணப்பட்ட சைதாப்பேட்டை விலாசம் தேடி (15 சன்னதி தெரு, சைதாப்பேட்டை என்று ஞாபகம் ) ஒரு நாள் சென்றபோது, அந்தமாதிரி ஒரு தெருவே சைதையில் கிடையாது என்று அடித்துச் சொன்னார், இரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே, எருமை மாட்டில் பால் கறந்துகொண்டிருந்த நண்பர் ஒருவர். 
அந்த எருமையும் , 'ரொ ய்... ய்ங்க்' (Right?) என்று கத்தி அதை ஆமோதித்தது. 

2) இரண்டாவது சம்பவம் பல வருடங்களுக்குப் பிறகு, வாசலில் வந்த ஒரு பொன் மானைப் பார்த்து, (ஓ சாரி - மைசூர் சில்க் புடவையைப் பார்த்து,) திருமதி ஆசைப்பட்டுக் கேட்க, அதை ஒரு பெரும் விலை கொடுத்து வாங்கி, ஒரு முறை அதை துவைத்த உடனேயே அது காற்றுப் போன பலூனாக சுருங்கி, சுருணைத் துணி போல காட்சி அளித்தது. வழக்கம் போல அந்த புடவை ஆசாமியை அப்பொழுது பார்த்ததுதான் கடைசி. அநேகமாக அவர் வேறு தெருக்களில் அல்லது வேறு பகுதிகளில் அல்லது வேறு ஊர்களில், இருக்கின்ற என்னைப் போன்ற முகத் தோற்றம் உள்ள ஆட்களைத் தேடி சென்றிருப்பார் என்று நினைக்கின்றேன். 

3) வாசலில் வந்தார் ஒருவர். வாசல் படிக்கு அருகே போடப்படும் இரப்பர் மிதியடிகள் விற்பனை செய்பவராம். அவருடைய விற்பனையாள, விரிவுரைப் பேச்சுகளில், அண்டை மாநில வாடை வீசியது. சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, அவரிடம் மேசை மீது இருந்த பாராசூட் பாட்டிலைக் காட்டி, 'இது என்ன?' என்று கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில், என்னுடைய அனுமானம் சரி என்று உறுதி செய்தது.  

அவர் கொண்டு வந்திருந்த ரத்தினக் கம்பளங்களில் மன்னிக்கவும் ரப்பர் மிதியடிகளில் இரண்டு மூன்று வகைகள் இருந்தன. சிவப்பு, பச்சை, நீல வண்ணங்கள். ஒரு ஐந்து எம் எம் பேஸ் ரப்பர் பலகையில், பத்து எம் எம் உயர ரப்பர் குச்சங்கள். 

என்னுடைய அண்ணன் வேறு எனக்கு 'ஆக்கு பிரஷர்' பற்றி அடிக்கடி சொல்லி, பிரஷர் ஏற்றி வைத்திருந்தார். இந்த வகை மிதியடிகளில் காலை நேரத்தில் காலாற ஜாகிங் செய்தால் சகல ரோக நிவாரணியாக அது செயல் படும் என்று கூறி இருந்தார். வகைக்கு ஒன்றாக வாங்கினேன். விற்பனையாளர் மேலும் என்னை ஊக்குவிக்கும் வகையில், 'சார் இந்த மிதியடி உங்க வீட்டில் இருந்தால், கற்பு இருக்காது.' என்றார். நான் அப்படியே அதிர்ந்து போனேன். 'சார் என்ன வார்த்தை கூறினீர்கள்? கற்பை தெய்வமாகப் போற்றும் மறத்தமிழர்கள் நாங்கள்' என்றேன், ஒரு சிலப்பதிகார சீற்றத்துடன். அவர், 'இல்லை சார் நான் அந்த கற்பை சொல்லலை. மீசை இருக்குமே, அந்தக் கற்பை சொன்னேன்' என்றார். நான் வேகம் தணியாமல், 'ஆமாம் கற்பு என்னும் நிலையை மீசை வைத்திருப்பவர்களுக்கும், மீசை இல்லாதவர்களுக்கும் பொதுவாக வைப்போம் என்று மீசைக்கார மஹாகவி சொல்லி இருக்கிறார்' என்றேன். அவர், 'சார் நீங்க தமிழ் பண்டிட்டு போலிருக்கு. நான் சொன்னது அதோ அந்த கற்பை' என்று சொல்லி சுவரில் ஒரு பல்லியோடு டாம் & ஜெர்ரி விளையாட்டு ஆடிக்கொண்டிருந்த ஒரு கரப்பான் பூச்சியைக் காட்டினார்!

பிறகுதான் தெரிந்தது அவர் கூற வந்த பேருண்மை. அந்த ரப்பர் மிதியடிகளிலிருந்து போகப் போக வீசிய துர் நாற்றத்திற்கு, கரப்பு என்ன, மனிதர்கள் கூட காத தூரம் ஓடிவிடுவார்கள் என்று. அது மட்டும் இல்லை - அந்த மிதியடிகளில் இருந்த ரப்பர் குச்சங்கள் ஒவ்வொரு நாளுக்கும் 50 வீதம் உதிர்ந்து இரண்டே வாரங்களில், கோத்ரேஜ் ஷேவிங் க்ரீம் போட்டு ஷேவ் செய்துகொண்டவர் கன்னம் போல மழு மழுப்பாகியது. 

இப்போ எல்லாம் நான் ரொம்ப உஷாராகி விட்டேன். வாசலில் யார் வந்து, எனக்கு என்ன விற்க முற்பட்டாலும், கண்ணை மூடிக்கொண்டு, 'நோ, வேண்டாம், ஒத்து, பேடா, நஹி..' என்று தெரிந்த மொழிகள் எல்லாவற்றிலும் உரத்த குரலில் கூறிவிட்டுத்தான் கண்ணைத் திறந்து பார்க்கிறேன். சென்ற வாரம் அப்படி கூறிய பிறகு கண்ணைத் திறந்து பார்த்தால் 'thank you sir' என்று சொன்னவாறு, இந்த பகுதியை சேர்ந்த தபால்காரர்  தெருவில் போய்க்கொண்டிருந்தார், கையில் மணி ஆர்டர் ஃபாரம், பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு!

வியாழன், 16 செப்டம்பர், 2010

யார் அடிச்சாரோ?

பெங்களூரில் சில இரண்டு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் ஆகியவற்றில், வண்டியின் பதிவு எண் - விவரங்கள் முழுவதுமே கன்னடத்தில் பார்ப்பதுண்டு. தமிழ்நாட்டிலும், இதே போன்று எல்லாமே தமிழில் ஒரு சிலர் எழுதி இருக்கிறார்கள். வட மாநிலங்களில், இந்தி எழுத்துகள், இந்தி எண்கள் பார்த்த ஞாபகம் உள்ளது. 

ஒரு வண்டிக்கு பதிவு எண் என்பது எதற்காக? 

எனக்குத் தெரிந்தவரையிலும், ஒரு வண்டி விபத்தில் சிக்கினால், அல்லது விபத்து ஏற்படுத்தினால், அந்த வண்டியின் சொந்தக்காரரை அல்லது ஓட்டுனரை அடையாளம் காண இந்த எண் இன்றியமையாதது. காப்பீடு சம்பந்தப்பட்ட வழக்கு, வியாஜ்யங்களில் கூட, இந்த பதிவு எண், மிகவும் முக்கியமானது. கோர்ட்டில் விசாரணையின்பொழுது சாட்சிகளிடம் வண்டி எண் பற்றி கேள்விகள் கேட்கப்படும். 

இவ்வளவு முக்கியமான பதிவு எண் பற்றி, மத்திய மோட்டார் வாகன சட்டம் எண் 51 (Central Motor Vehicle Rule 51) சொல்வது என்ன தெரியுமா? 
சட்டம் எண் 51 (பகுதி) பதிவு எண் பலகையில், உள்ள எழுத்துகள் எல்லாம் ஆங்கிலத்திலும், எண்கள் அனைத்தும், அராபிய எண் உருவாக (1,2,3,4,5,6,7,8,9,0) இருக்க வேண்டும். 

சட்டம் எண் 50 : இந்த விதியை எந்த வகையிலாவது மீறுபவர்கள், ரூபாய் நூறு அபராதம் செலுத்தவேண்டும். 

அப்போ, ஒருமுறை அபராதம் செலுத்திவிட்டால், தொடர்ந்து அந்த சட்டத்திற்குப் புறம்பான பதிவு எண் பலகையை வைத்திருக்கலாமா? அல்லது அந்தப் பதிவு எண்ணைப் பார்க்கும் பொழுதெல்லாம் டிராபிக் போலீஸ்காரர்  (சார் - கோர்ட்டுக்கு வந்தால் நூறு ரூபாய் அபராதம்; இங்கேயே - ஐம்பது கொடுத்தால்....) பையை நிரப்பிக் கொள்ளலாமா? 

இதைப் படிக்கும் பொதுமக்கள், தங்கள் செல் காமிராவால், சட்டத்திற்குப் புறம்பான பதிவு எண் கொண்ட வாகனங்களை, படமெடுத்து, அந்தந்த மாநில டிராபிக் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி, விதி மீறல்களை சரி செய்ய சொல்லிக் கேட்டுக் கொள்ளமுடியுமா? 

(இதை நான் எழுதும் பொழுது, வாசலில், ಕೆ ಯೆ ೦೧ ಎಂ ಯೆ ೯೦೮೬ வண்டி ஓட்டுனர் என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். முஜே பச்சாவ் !!)

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

பிஹார் முதலமைச்சர் யார்?

பீகார் முதல் அமைச்சர் யார் என்று தெரியும் என்று சொல்பவர்கள், கீழே உள்ள சன் நியூஸ் தொலைக்காட்சியின் இன்றைய முக்கிய செய்திகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். 

சனி, 11 செப்டம்பர், 2010

மஹாகவி பாரதி நினைவுகள்..




செப்டெம்பர் பதினொன்று. பாரதியார் (நினைவு) தினம்.


பாரதியார் வரகவி. நினைத்த மாத்திரத்தில் நினைத்த பொருள் பற்றி கவி பாடும் வல்லமை பெற்றவர். எதுகை, மோனையுடன் வார்த்தைகள் விழும்போது அவரே ஆச்சர்யப் பட்டுப் போவாராம்.

.


மவுன விரதம் இருப்பார். சமயங்களில் பதினைந்து நாள் கூட பேசாமல் இருப்பார். ஒரு வினோதம். பேச மாட்டாரே தவிர கவிதை புனைந்தவுடன் வாய் விட்டுப் பாடுவார்.


தீவிர சக்தி தாசர். ஆனால் மூட நம்பிக்கைகளை எதிர்ப்பார். கார்த்திகை சமயங்களில் வெளியில் எண்ணெய் விளக்கு வைப்பது, சமுத்திரத்தில் காசு போட்டு குளிப்பது போன்றவற்றுக்கான விளக்கங்கள் உதாரணம்.


பாடல்களை இயற்றியபிறகு அவர் அதை பாவத்துடன் பாடிக் காட்டும்போது கேட்கும் மனைவி, மகள்கள், நண்பர்கள் ஒன்றிப் போய் கண்ணீர் விடுவதோ பரவசமாவதோ உண்டு. “பக்தியினாலே இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி என்று பாடும்போது காமப் பிசாசைஎன்னும்போது காலால் தரையை ஓங்கி மிதித்தும், ‘தாமதப் பேய்எதிரில் நிற்பது போல் அறைந்தும் பாடுவாராம்.

பாரதியார் நன்கு அறிந்த மொழிகள். தமிழ், ஆங்கிலம், காசிக்குச் சென்ற போது கற்ற சமஸ்கிருதம், ஹிந்தி, புதுவையில் ஃப்ரெஞ்சுப் பாஷை, வஙகாளி, முதல் உலக யுத்தம் தொடஙகியதும் ஜெர்மன் பாஷை, லத்தீன், உருது, சென்னையில் இருந்த போது தெலுங்கு, கடைசி நாட்களில் அரபி, மலையாளம்...! தெலுங்கு பாஷை ரொம்ப்ப் பிடிக்குமாம். சுந்தரத் தெலுங்கு... எனினும் அவர் பாடியது “யாமறிந்த மொழிகளிலே...


பிடித்த கீர்த்தனைகள்..மாருபல்க, நகுமோமு,சக்கனிராஜ, ஜெயஜெய கோகுலபால...

பெண் விடுதலை பற்றிப் பாடிய பாரதி செல்லம்மாவை அப்படி வைத்திருக்கவில்லை. இவர் சொல் மீறி ஊர் சென்ற செல்லம்மாவின் பட்டுப் புடவைகள் கிழிக்கப் பட்டு தலைப் பாகையாயின! பாத்திரங்கள் கடையில் போடப் பட்டன. செல்லம்மாவை விவாக ரத்து செய்து மறுகல்யாணம் செய்யப் போவதாய் பயமுறுத்தினார்! ஊரிலிருந்து வந்ததுமே செல்லம்மாவின் தந்தை இறந்த செய்தி கேட்டும் முதலில் அவரை விடாமல் பின்னர் ‘பெருந்தன்மையாய்மனைவியை ‘மன்னித்துஊருக்கு அனுப்பி வைத்தார்.


குள்ளச் சாமியார் போன்ற சிலரால் கஞ்சா போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிக்கும் வழக்கம் வந்தது.

பால்ய விவாகத்துக்கு எதிரி. தன் பெண்கள் இருவருக்கும் அப்படிச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தார். அதனால் வீட்டில் பந்துக்களிடையே மனஸ்தாபமும் தோன்றியது. ஆனால் தன் நண்பர் ஸ்ரீ ஸ்ரீ சாரியாரின் புதல்வி யதுகிரி திருமணம் ஆகிச் செல்லப் போகிறாள் என்ற போது அவர் யதுகிரிக்கு புகுந்த வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்று 1915 களிலேயே கொடுத்த அறிவுரைப் பட்டியலைப் பற்றி தனிப் பதிவே போடலாம்...!


கடைசி நாட்களில் மருந்தின் மேல் வெறுப்புற்று சாப்பிட மாட்டேன் என்றவரை அவர் பெண் சகுந்தலா கொடுத்தால் சாப்பிடுவார் என்று சொல்லிக் கொடுக்கச் சொன்னார்களாம். மிகுந்த ப்ரயாசைக்குப் பின் அவரும் கொடுத்தாராம். முதலில் மறுத்த பாரதி பிறகு வாங்கிப் பருகி விட்டு, “அம்மா, நீ கொடுத்தது மருந்தில்லை...பார்லி தண்ணீர்..பரவாயில்லைஎன்று கண்ணை மூடி விட்டாராம்.


மரணத்தை வெல்ல வழி தேடுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பாராம். 'ஓம்' என்ற வார்த்தைக்கு நிகரான தமிழ் வார்த்தையை தயார் செய்ய தேடிக் கொண்டிருந்தாராம்.


மரணத்தை வென்று விட்டார்தான்..

வியாழன், 9 செப்டம்பர், 2010

என்ன தோன்றுகிறது?

ஏதேனும் ஒரு படத்தைப் பார்க்கும்பொழுது, ஏதேனும் ஒரு நினைவு வரும்.
இங்கே உள்ள படத்தைப் பாருங்கள்.  

உடனே உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பதியுங்கள். 
ஒரே படம் - ஒவ்வொருவருடைய நினைவும் எவ்வளவு வேறுபடுகிறது என்பது வியப்பாக இருக்கும்.  


      (௦பெரிய கதையாக இருந்தால், engalblog@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பிடுங்க !!)

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

என் நினைவுகள்.

By அப்பாதுரை 
என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியர் சுந்தரேசன்.  அண்ணாதுரை போலவே முகத்தோற்றம்.  வேண்டுமென்றே அண்ணாவைப் போல் வழுக்கை முடிக்கற்றை, மூக்குக் கண்ணாடி.  அண்ணா, நெடுஞ்செழியனைப் போலவே நிமிடத்துக்கொரு தரம் குதிகாலை உயர்த்தி ஒரு எழுச்சி.  வாயைத் திறந்தால் தமிழ்த் தேன்.  சில சமயம் தமிழ்ச் சாராயம்.  'ஏனையோர் மாணவர், மாணவி. நீ மாணாக்கன்' என்பார் என்னிடம்.  நான் அவர் பெட்.  செல்லம். சும்மா மூச்சு விட்டுக்கொண்டிருப்பேன், 'எனக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கிறான் அப்பாத்துரை' என்று ஏதாவது சொல்வார். என்னுடன் படித்த ஒரு குறிப்பிட்டப் பெண்மணிக்கு வயிற்றெரிச்சலாய் இருக்கும் (நான் தான் இன்றைக்குப் பொறாமைப் படவேண்டும் அந்தக் குரோம்பேட்டைக் கலைமாமணி மேல்).  என்னவோ தெரியவில்லை, அந்த வருடத்தோடு சுந்தரேசனையும் தொலைத்தேன்; தமிழையும் தொலைத்தேன்.  சுந்தரேசன் இன்னும் இருக்கிறாரா தெரியவில்லை. ஒரு முறை சுரேஷ் என்ற மாணவனை ஏதோ சொல்லப்போய் அவன் அவரைத் தாம்பரம் ரெயில்வே ஸ்டேஷனில் வைத்து வேட்டியை உருவி பெல்டால் அடித்து விட்டான்.  பாவம், சுந்தரேசன்.  தமிழாசிரியர்கள் நிலை எல்லா கழக ஆட்சிகளிலும் திண்டாட்டம் தான்.  

இன்னொரு ஆசிரியர் இந்திரமோகன்.   இன்றைக்கு நான் சிறையிலோ கழகக் கண்மணியாகவோ இல்லாமல் பிழைத்தமைக்காக அவருக்கு நன்றி சொல்லவேண்டும் (குறை சொல்ல வேண்டும்?).  ரஜினியை ஸ்டைல் மன்னன் என்கிறோம்; இந்திரமோகன் ஸ்டைலில் ரஜினி ஸ்டைலை எல்லாம் கட்டி அடிக்க வேண்டும், அப்படி ஒரு ஸ்டைல் அந்த ஆளிடம்.  அவரும் எத்திராஜ் என்று இன்னொரு ஆசிரியர் (க்ளார்க் கேபில் போல் சிகை) இரண்டு பேரும் ராதா என்ற ஒரு டீச்சரைத் துரத்தித் துரத்தி ஜொள் விடுவார்கள்.  ராதா டீச்சரும் தான்.  இந்திரமோகன்-ராதா டீச்சர் விவகாரம் (அல்லது வதந்தி) குரோம்பேட்டை அரசினர் பள்ளியில் எழுபதுகளின் தொடக்கத்தில் படித்தவர்களுக்குத் தெரியும்.  இந்திரமோகனை எண்பதுகளில் ஒரு முறை பழவந்தாங்கல் ரெயில்வே ஸ்டேஷனில் சந்தித்தேன்.  ராதா டீச்சரைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் போய்விட்டது.  

மங்கலமன்னன் இன்னொரு தமிழாசிரியர். இன்னொரு என்பது சரியாகத் தோன்றவில்லை.  முதலும் முடிவுமான தமிழாசிரியர் என்று சொல்வேன்.  எனக்கிருக்கும் தமிழறிவுக்கும்  ஆர்வத்துக்கும் காரணம் மங்கலமன்னன் தான்.  பாரதியாரை விட அழகான மீசை.  கண்களில் மை தீட்டிய (எங்களுக்குத் தெரியாது என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார்) தீட்சண்யம், கம்பீரம்.  எத்தனையோ கறுப்பு சிவப்பு வேட்டிகள் பள்ளிக்கூடத்தில் திரிந்தாலும் மங்கலமன்னன் குரலுக்கும் தமிழுக்கும் இணையாகவில்லை.  சுந்தரேசனின் தமிழில் கவர்ச்சி இருந்தது;  மங்கலமன்னன் தமிழில் கலாட்டா இருந்தது.  சுந்தரேசன் தமிழில் கொஞ்சுவார்; மங்கலமன்னன் தமிழில் அதட்டுவார். கல்லூரி போனதும் இவருடனும் தொடர்பு விட்டுப் போனது.

மங்கலமன்னன், சுந்தரேசன், இந்திரமோகனைத் தெரிந்தவர்கள் யாராவது சந்தித்தால் இந்த அப்பாதுரையின் வணக்கத்தைச் சொல்லுங்கள். நன்றி.